2.9.காடு சார்ந்த பொருட்களைச் சேகரித்தல்
2.9.1.மூங்கில் எடுத்தல் – சோளகர்கள் குடிசை கட்டுவதற்கும், வேலியமைப்பதற்கும், உடைந்த வேலியை மீட்டுருவாக்குவதற்கும் தேவையான மூங்கில்களைப் பாங்காட்டிற்குச் சென்று சேகரித்து வருகிறார்கள். தாணிக்கண்டி இருளர்கள் காடுகளிலிருந்து கொடுவாளால் மூங்கிலை வெட்டிச் சேகரிக்கிறார்கள். அவற்றை ஊன்று கருவியாகத் தயார் செய்து வியாபாரம் செய்கிறார்கள். மலையேறும் பக்தர்களிடம் இதனை விற்கிறார்கள். மலையாளிகள், படகர்கள், தேன்கனிக்கோட்டை இருளர்கள் பற்றிய புதினங்களில் மூங்கில் எடுத்தல் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.9.2.விறகு சேகரித்தல் – பெண்கள் அடுப்பெரிக்கத் தேவையான விறகுக் குச்சிகளை வனங்களில் சென்று சேகரிக்கிறார்கள். இந்தப் பணியை சுள்ளி பொறுக்குதல், சுள்ளி சேகரித்தல் என்று சொல்வார்கள். கொல்லிமலையில் திருமி என்பவள் விறகொடித்து வருவதற்கு கொடுவாளை எடுத்துச் செல்கிறாள். சிறுவர்களும் சிறுமியர்களும் வனங்களில் சென்று சுள்ளி பொறுக்கி வருகிறார்கள். மரகதமலையில் பெள்ளியின் தங்கை விறகுகளைச் சேகரித்துக் கட்டுகிறாள். தாணிக்கண்டியில் வாழ்கின்ற இருளர்களும் இத்தகைய முறையில் சுள்ளி சேகரிக்கிறார்கள். தேன்கனிக்கோட்டை இருளர்கள் பற்றிய புதினத்தில் விறகு சேகரித்தல் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை. ஒரு படைப்பின் கதைக் களத்தில் படைப்பாளியின் நோக்கு நிலையில் பல கருத்துக்கள் கவனப்படுவதில்லை என்பதற்கு இதெல்லாம் எடுத்துக் காட்டுகளாகின்றன. விறகு சேகரித்தல் எல்லா பழங்கடி மக்களிடமும் உள்ள ஒரு முக்கியமான வேலையாகும்.
2.9.3.கிழங்கு எடுத்தல் – மழை பெய்யாமல் விவசாயம் ஏமாற்றம் அடைந்துவிட்டால் கிழங்கு எடுப்பதற்காக பெண்கள் வனத்திற்குச் செல்கிறார்கள். வள்ளி கிழங்கு, இருளைக் கிழங்கு, பூமி சர்க்கரைக் கிழங்கு ஆகியவற்றைத் தோண்டி எடுக்கிறார்கள். கிழங்கின் வேர் பகுதியை நான்கு அடிக்கு மேல் தோண்டி எடுக்கிறார்கள். வேரிலிருந்து ஒரு அடியை விட்டுவைத்து மற்ற அடிப்பகுதிக் கிழங்குகளை எடுத்துக்கொள்கிறார்கள். விட்டுவைத்த ஒரு அடி கிழங்கைச் செடியுடன் சேர்த்து மீண்டும் மண்ணிலேயே புதைத்துவிடுகிறார்கள்.
தாணிக்கண்டி பகுதியைச் சேர்ந்த இருளர்கள் சோலெக் கசாங்கு என்னும் ஒரு வகையான கிழங்கினை காடுகளுக்குச் சென்று சேகரிக்கிறார்கள். இது இவர்களது விருப்ப உணவாக இருக்கின்றது. பாம்பின் விசத்தை முறித்துக் குணப்படுத்தும் ஆற்றலுடைய ஒரு வகைக் கிழங்கை தாணிக்கண்டி இருளர்கள் சேகரிக்கிறார்கள். அந்தக் கிழங்கை கொல்லன், ஆகாசக் கருடன், ஆகாய புருடன் என்ற பெயர்களில் அழைக்கிறார்கள்.
மலையடிவார வனக் கிராமங்களில் வாழ்கின்ற தேன்கனிக்கோட்டை மக்கள் வறட்சிக் காலங்களில் பசியை எதிர்கொள்வதற்காக வனத்திலிருந்து கற்றாழைக் கிழங்குகளைச் சேகரித்து வருகிறார்கள். கிழங்கை வெட்டி வேகவைத்துப் பழைய புளி கரைசலில் ஒருவாரம் ஊறவைத்து உண்கிறார்கள். இதை உண்ட கர்பிணி பெண்களுக்குச் சூடு தாங்காமல் கரு கலைந்துபோகியிருக்கின்றது.
மலையாளிகள், படகர்கள் பற்றிய புதினங்களில் வனங்களில் கிழங்கு சேகரித்தல் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.9.4.தேன் எடுத்தல் - தேன் எடுக்கும் பணியில் சோளகர்கள் குழுவாக ஈடுபடுகிறார்கள். மரத்தில் அல்லது பாறைகளில் ஏறி தேன் எடுப்பதற்கும் அல்லது பள்ளத்தில் பாறை இடுக்குகளில் இறங்கி தேனெடுக்கவும் குழுவாகச் செல்கிறார்கள். பள்ளத்தில் இறங்கி அந்தரத்தில் தொங்கிக்கொண்டு சாமர்த்தியமாக தேன் எடுப்பது மிகவும் கடினமான உழைப்பாகும். வலிமையான கயிறுகளைப் பயன்படுத்தி அக்கறையுள்ளவர்கள் பாதுகாப்பாகப் பிடித்துக்கொண்டிருக்க தேனெடுக்கும் கருவிகளாகிய தீப்பந்தமும் தகரடின்னும் அந்தரத்தில் கிடைக்கப்பெற்றதும் சாமர்த்தியமாக நெருப்புக் காட்டி தேனடையைச் சேகரித்துக்கொண்டு குழுவினரின் உதவியுடன் மேழேறி வருகிறார்கள். தாணிக்கண்டி இருளர்களும் வனங்களில் சென்று தேன் சேகரிக்கிறார்கள். ஆனால் சேகரிக்கும் முறைபற்றிய செறிவானத் தகவல்கள் புதினங்களில் இல்லை. மலையாளிகள், படகர்கள், தேன்கனிக்கோட்டை இருளர்கள் பற்றிய புதினங்களில் தேன் எடுத்தல் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை. ஆனால் தேனெடுத்தல் என்பது அனைத்துப் பழங்குடியினரும் மேற்கொள்ளும் முக்கியமான வேலையாகும்.
2.9.5.மூலிகை சேகரித்தல் – மருத்துவத் தேவைக்காக சோளகர்களும் மலையாளிகளும் படகர்களும் வனங்களிலிருந்து மூலிகைகள் சேகரிக்கிறார்கள். பூண்டி கோயில் முன்பு வியாபாரம் செய்வதற்காக இருளர்கள் வனங்களில் சென்று மூலிகைகளைச் சேகரித்து வருகிறார்கள். தேன்கனிக்கோட்டை இருளர்கள் பற்றிய புதினத்தில் மூலிகை சேகரித்தல் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.9.6.விதைகள் சேகரித்தல் – பூண்டி கோயில் முன்பு வியாபாரம் செய்வதற்காக இருளர்கள் வனங்களில் சென்று தேக்குமர விதைகள் உட்பட பல விதைகளைச் சேகரித்து வருகிறார்கள். சோளகர்கள், மலையாளிகள், படகர்கள், தேன்கனிக்கோட்டை இருளர்கள் பற்றிய புதினங்களில் விதைகள் சேகரித்தல் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.9.7.காய்கனி சேகரித்தல்
2.9.7.1.காரக்காய் – மலையடிவார வன கிராமங்களில் வாழ்கின்ற தேன்கனிக்கோட்டை மக்கள் வறட்சிக் காலங்களில் பசியை எதிர்கொள்வதற்காக வனத்திலிருந்து காரக்காய்களைச் சேகரித்து வருகிறார்கள். காரக்காய் உண்பவர்கள் ஒவ்வாமையால் தொண்டையை பிடித்துக்கொண்டு செத்துப்போயுள்ளார்கள்.
2.9.7.2.சூரக்காய் – மலையடிவார வனக் கிராமங்களில் வாழ்கின்ற தேன்கனிக்கோட்டை மக்கள் வறட்சி காலங்களில் பசியை எதிர்கொள்வதற்காக வனத்திலிருந்து சூரக்காய்களைச் சேகரித்து வருகிறார்கள். சூரக்காயை உண்டவர்கள் மலம் வெளியேறாமல் அடைத்துக்கொண்டு இறந்துபோயுள்ளார்கள்.
2.9.7.3.நெல்லிக்கனி – சோளகர்கள் வனங்களிலிருந்து நெல்லிக்கனிகளைச் சேகரித்துச் சாப்பிடுகிறார்கள்.
2.9.7.4.நாகதாளி பழம் – மலையடிவார வன கிராமங்களில் வாழ்கின்ற தேன்கனிக்கோட்டை மக்கள் வறட்சி காலங்களில் பசியை எதிர்கொள்வதற்காக வனத்திலிருந்து நாகதாளி பழங்களை சேகரித்து வருகிறார்கள். முள்ளை நீக்கிவிட்டு உள்ளே இருக்கின்ற பழத்தை உண்ண வேண்டும். பழத்திற்கு உள்ளும் ஒரு கொக்கி முள் இருக்கும். அவசரத்தில் அதை எடுக்காமல் தின்றவர்கள் இறந்துபோயுள்ளார்கள்.
2.10.வேட்டையாடுதல்
2.10.1.மான்வேட்டை – தண்ணீர் குடிக்க வந்த மான்களில் ஒன்றை சோளகர் தொட்டியைச் சேர்ந்த மூன்று நாய்கள் தொட்டிக்கு விரட்டிச் செல்கின்றன. தொட்டியிலுள்ள இந்த நாய்கள் வேட்டைக்கு வாய்ப்பு கிடைத்தால் இரையைக் கவ்விக்கொண்டோ அல்லது விரட்டிக்கொண்டோ தொட்டியினரிடம் கொண்டுவந்து சேர்க்கின்றன. சிவண்ணாவும், புட்டனும், மூன்று நாய்களின் உதவியோடு வேட்டையாடத் தயாராகிறார்கள். சிவண்ணா ஒரு கையளவு கருங்கல்லை எடுத்து அந்த மானைக் குறிவைத்து வீழ்த்துகிறான். வறட்சியின் காரணமாக வனத்திலிருந்து கூட்டங்கூட்டமாக நீரருந்துவதற்கு தளி ஏரிக்கு வருகின்ற மான்களை கிராமத்து மக்கள் வேட்டையாடுகிறார்கள். மலையாளிகள், படகர்கள், தாணிக்கண்டி இருளர்கள் பற்றிய புதினங்களில் மான்வேட்டை பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.10.2.கரடிவேட்டை – சிக்குமாதா சிறந்த வேட்டைக்காரனாக அறியப்பட்டிருக்கிறார். கடமான் ஒன்றை வேட்டையாடுவதற்காக விரட்டிச்சென்றபோது புதரிலிருந்து எதிர்பட்ட இணை கரடிகள் அவனைத் தாக்க முன்வருகின்றன. கரடி அவனுக்கு வேட்டை இரையாக இல்லாவிட்டாலும் தற்காப்பிற்காக வேறுவழியின்றி சுட்டு வீழ்த்துகிறான். கரடியை வேட்டையாடிய அவனது வீரத்தை அவனது மனைவி கெம்பம்மாளைத் தவிர அனைத்து மக்களும் பாராட்டினார்கள். கரடியின் கறியை தொட்டியில் அனைவரும் முறையாகப் பங்கிட்டு உண்டார்கள்.
2.10.3.பன்றி வேட்டை – கொல்லிமலை மலையாளிகள் லேசான மழைத் தூரல் விழும் பருவங்களில் பன்றி வேட்டைக்குச் செல்கிறார்கள். வனப்புதர்களில் இருந்து மொச்சைப்பயிர் விளைந்த காட்டிற்குள் பயிர்களைத் தின்றுவிட்டுப் போகின்ற பன்றிகளின் கால் தடயங்கள் மழைதூரிய நிலத்தில் நன்கு பதிவாகியிருக்கின்றன. கால்தடயங்களைக் கணக்கிட்டு பன்றியை வேட்டையாடுகிறார்கள். தர்மகர்த்தாவும் பூசாரியும் வேட்டைக்குத் தலைமை தாங்குகிறார்கள். கால் தடயங்களின் அடிப்படையில் புதர்களிருக்கும் வனப் பாதைகளுக்குச் செல்கிறார்கள். முன்செல்பவர்கள் தடயம் பார்ப்பவர்களுக்கு ஒத்துழைப்பாக முள்ளடர்ந்த பகுதிகளை வெட்டிப் பாதையமைக்கின்றார்கள். இடையிலுள்ளவர்கள் காடுகளை அலம்பி புதர்களை இடையூறு செய்து பன்றிகள் மறைந்திருந்தால் அவற்றை ஓடும்படி செய்கிறார்கள். பன்றிகள் ஓடத்துவங்கினால் எளிமையாக வேட்டையாடிவிடுவார்கள். பெரிய பன்றிகள் ஓடுவதுபோல போக்குக்காட்டி இடையில் பதுங்கித் தப்பித்துவிடும். சிலரை சிங்கப்பற்களால் தாக்கவும் செய்யும். இளம் பன்றிகள் தொடர்ந்து ஓடி எளிதாக மாட்டிக்கொள்ளும். வேட்டையில் பன்றியை முதலில் தாக்கி வீழ்த்துபவருக்குக் கூடுதல் பங்கும் ஊர் சிறப்பும் கிடைக்கும். இரண்டாவதாகப் பன்றியின் திசையை அறிவிப்பவனுக்குக் கூடுதல் பங்கு கிடைக்கும். பன்றியை வலைவிரித்து சிக்கவைத்துக் கொம்பு ஈட்டி ஆகியவற்றால் தாக்கியும் அல்லது துப்பாக்கியால் சுட்டோ பன்றியை வேட்டையாடுகிறார்கள். தேன்கனிக்கோட்டைக் கிராமப்பகுதிகளில் கடலைக் கொல்லையில் பயிர்களை உண்ண வரும் பன்றிகளுக்கு வாய்வேட்டு வைத்து வேட்டையாடுகிறார்கள். சோளகர்கள், படகர்கள், தாணிக்கண்டி இருளர்கள் பற்றிய புதினங்களில் பன்றிவேட்டை பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.10.4.மீன் பிடித்தல் – தேன்கனிக்கோட்டை ஏரியில் சிறுவர்கள் தூண்டிலைப் பயன்படுத்தி மீன்பிடிக்கிறார்கள். சோளகர்கள், மலையாளிகள், படகர்கள், தாணிக்கண்டி இருளர்கள் பற்றிய புதினங்களில் மீன்பிடித்தல் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.
2.10.5.நண்டு பிடித்தல் – தேன்கனிக்கோட்டை ஏரியில் சிறுவர்கள் நண்டு வளையில் கையைவிட்டு நண்டு பிடிக்கிறார்கள்.
2.10.6.வேட்டைப் பகிர்வு – வேட்டையாடப்பட்ட மானின் கறியை கூறுபோட்டுப் பங்கிடுகிறார்கள். முதல் பங்கை ஊரிலுள்ள விதவைப் பெண்ணுக்கு ஒதுக்குகிறார்கள். இரண்டாவது பங்கை ஊரின் முக்கியமானவர்களாகிய கொத்தல்லி மற்றும் கோல்காரனுக்கு ஒதுக்குகிறார்கள். மூன்றாவது பங்கை வேட்டையாடியவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இவர்கள் மற்றவர்களைவிட பங்கில் சற்று கூடுதலாக எடுத்துக்கொள்ளும் உரிமையுடையவர்கள். நான்காவது பங்கை ஊரில் மான்கறியை விரும்புபவர்களுக்கு பங்கிடுகிறார்கள். இறுதியாக வேட்டைக்கு உதவுகின்ற நாய்களின் பங்கை கொடுத்துவிடுகின்றார்கள்.
2.10.7.வேட்டை அறிவு – வனத்துறையுடன் நட்பு கொண்டிருந்த துரையன் வெளிப்படையாகவே வேட்டையில் ஈடுபடுகிறான். அவனது வேட்டைக்கு சோளகனாகிய சிக்குமாதவின் நட்பும் மிகுந்த உதவியாக இருக்கின்றது. சிக்குமாதா வனத்தைப் பற்றிய எல்லா விபரங்களையும் அறிந்திருப்பவன். வேட்டையாடுவதில் ஆர்வமும் அறிவும் ஆற்றலும் கொண்டிருப்பவன். கரடிகளின் குடியிருப்பு பற்றியும், சிறுத்தைப் புலிகளின் வாழ்விடம் பற்றியும், யானைகளின் வலசைப் பாதை பற்றியும், மான்கள் வந்து போகும் கால நேரம் பற்றியும், வனத்திலுள்ள தண்ணீர் பாலிகள் பற்றியும் சிக்குமாதா நன்கு அறிந்து வைத்திருக்கிறான். சிக்குமாதா குறிபார்த்துத் துப்பாக்கியால் சுடும்போது எந்த விலங்கும் தப்பிச் செல்ல முடியாமல் வீழ்ந்துவிடுகின்றன.
2.10.8.வேட்டை மிச்சம் – வனத்துறையின் நிர்பந்தத்தால் தாணிக்கண்டி மக்கள் வேட்டையாடுதலைக் கைவிட்டுவிட்டார்கள். ஆனாலும் வனத்துறையினருக்குத் தெரியாமல் மான் போன்ற வனஉயிரினத்தை அடித்து உண்ண வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தானாக வருகின்ற வேட்டைப்பொருளை வனத்துறையினருக்குத் தெரியாமல ரகசியமாக அடித்து உண்கிறார்கள். செந்நாயிடமிருந்து தப்பி வந்த கடமானை அடித்துத் தாணிக்கண்டி மக்கள் உண்கிறார்கள். சோளகர் பழங்குடிகளும் வனத்துறைக்குத் தெரியாமல் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் வேட்டையாடுகிறார்கள்.
2.11.விவசாயம் செய்தல்
2.11.1.விவசாய நிலமாற்று முறை - பொதுவாக, சோளகர் தொட்டியில் மூன்று முறை அறுவடை செய்த நிலத்தில் மீண்டும் விதைக்க மாட்டார்கள். வேறொரு நிலத்தை விதைப்பிற்குத் தயார் செய்கிறார்கள். புதிய நிலத்தில் மூன்று முறை அறுவடை செய்தபிறகு மீண்டும் பழைய நிலத்தை மீண்டும் விதைப்பிற்காக பக்குவப்படுத்துவார்கள். மூன்று முறைக்கு மேல் விதைத்தால் பூமியில் பயிர்கள் உருவாகுவதற்கான ஆற்றல் குறைந்திருக்கும் என்பதால் இந்த விவசாய முறையைக் கடைபிடிக்கிறார்கள். சிறிய கொத்தின் மூலமாக பூமியைக் கொத்தி ராகியை விதைக்கிறார்கள்.
2.11.2.சீர்காடு – சோளகர் தொட்டியிலுள்ள நல்ல விவசாய பூமியாக சீர்காடு கருதப்படுகின்றது. கல் மூடிக்கிடந்த இந்தப் பூமியைச் சிறந்த விவசாய பூமியாக உருவாக்கியது சிவண்ணாவின் தந்தை பேதனது குடும்பமாகும். சீர்காட்டில் உயர்ந்த தென்னை மரங்களும் கரும்புப்பயிர்களும் வளர்க்கப்பட்டுள்ளன. மூன்று அறுவடைக்குப் பின்பு ராகியை விதைப்பிற்காகப் புதிய நிலத்தைப் பக்குவப்படுத்துவது என்ற முறையைப் பேதன் பின்பற்றியதே கிடையாது. ஏனெனில் எல்லா காலத்திலும் நல்ல விளைச்சல்களைத் தருகின்ற அளவிற்கு நல்ல வளமான பூமியாக சீர்காடு திகழ்கின்றது.
2.11.3.ஏர் பூட்டுதல் – பேதன் தனது பசுமாடு ஒன்றையும் காளை மாடு ஒன்றையும் இணைத்து ஏர்பூட்டி நிலத்தைக் கிளறி ராகி விதைப்பிற்காகப் பக்குவப்படுத்தினான். உன்னிச் செடிகளைக் களை எடுப்பதுபோல கொழிஞ்சிச் செடிகளைப் பிடுங்குவது இல்லை. அதனால் கொழிஞ்சிச் செடிகளை மண்ணோடு கிளரி உரமாக்குவர்.
2.11.4.களை எடுத்தல் – காற்றின் மூலமாக வனத்திலிருந்து விவசாய நிலங்களுக்குப் பரவி புதர் போல முளைக்கின்ற உன்னிச் செடி புதர்களைக் கண்டபோதெல்லாம் பிடுங்கி எறிவது வழக்கமாக இருக்கின்றது.
2.11.5.ஆடிப்பட்டம் – ஆடி மாதம் தொடங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே மழைநீரால் நிலங்கள் நனைந்தால் நல்ல அறுவடை கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அதனால் ஆடி மழை பொழிவதற்கு முன்பாகவே நிலத்தைப் பக்குவப்படுத்திவிட வேண்டும் என்ற முனைப்புடன் உழைக்கிறார்கள். கொத்துக் கருவிகளுடனும் அல்லது ஏர் பூட்டிய மாடுகளின் உதவியுடனும் நிலத்தை உழுது தயார் செய்கிறார்கள்.
2.11.6.நிலம் இழந்தோர்க்கு நிலம் கொடுத்தல் – தந்தையிடமிருந்து பூமியை துரையன் அபகரித்துக் கொண்டதால் மனம் வேதனையுற்றிருந்த கரியனிடம் “அதுமட்டும் உன் பூமியில்லேடா! இதுவும் உன் பூமிதான்.. வா... சேர்ந்து விதைக்கலாம். சேர்ந்தே சாப்பிடலாம், இதுக்காக ஏன் கலங்குகிறே? தைரியமாக இரு”
(பாலமுருகன்,ச.2013: 43).என்று நம்பிக்கை தருகிறான் பேதன்.
பேதனின் சீர்காட்டைத் துரையன் அபகரித்துக்கொண்ட பிறகு கொத்தல்லி தனது நிலத்தைப் பேதனுக்கு கொடுக்கின்றார். பேதன் அறுவடை செய்வதில் சிறிது தந்தால் போதும் என்று சொல்லி பேதனுக்கு நம்பிக்கை கொடுக்கிறார்.
2.11.7.முறம் பின்னுதல் – பெண்கள் முறம் செய்வதற்குத் தேவையான மூங்கில்களை வனத்திற்குச் சென்று வெட்டிக் கொண்டுவருகிறார்கள். பிறகு மூங்கிலை சிம்புகளாகத் தயார் செய்கிறார்கள். அந்த மூங்கில் சிம்புகளைப் பயன்படுத்தி முறம் பின்னுகிறார்கள்.
2.11.8.ஏர் கலப்பை செய்தல் – மரத்துண்டை இரண்டு பக்கங்களிலும் வாச்சி எனும் கருவியால் செதுக்கிக் கூர்மையாக்கி ஏர்கலப்பையை செய்கிறார்கள்.
2.11.9.காட்டெரிப்பு விவசாயம் – மலையாளிகள் ஒரே நிலத்தில் தொடர்ந்து விதைப்பிட்டு விவசாயம் செய்ய மாட்டார்கள். விளைச்சல் தந்த நிலத்தில் அறுவடை முடிந்ததும் அதனை மறுவிளைச்சலுக்குரிய வளத்தை உருவாக்கிக்கொள்வதற்காக விட்டுவிட்டு வேறொரு நிலத்தில் விதைப்பிற்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். தேர்ந்தெடுத்த நிலத்தில் முளைத்துள்ள முள்ளுச் செடிகளை வெட்டி எரித்து மண்ணில் உரமாகும்படி விட்டுவிடுகிறார்கள். நிலம் பக்குவப்படுத்தப்பட்டதும் அந்த நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள். குறிப்பிட்டகால விவசாயம் நிறைவடைந்ததும் இந்த நிலத்திற்கு ஓய்வு கொடுத்துவிட்டு பழைய நிலத்தினை விவசாயத்திற்குப் பக்குவப்படுத்தத் தொடங்குகிறார்கள்.
2.11.10.புஞ்சைக்காடு – மழையை நம்பி விவசாயம் செய்வதற்கான நிலத்தை புஞ்சை நிலம் என்கிறார்கள். புஞ்சை மண்ணில் மொச்சைச் செடிகள் பயிரிடப்பட்டு வளர்ந்திருக்கின்றன. புஞ்சைக் காட்டில் மொச்சைப் பூவின் வாசம் பரவியிருக்கின்றன.
2.11.11.சேறு கலக்குதல் – மலையாளிகள் விதைப்பிற்கான நிலத்தை தொடையளவு சேறு தேங்கியிருக்கும்படி வைத்திருக்கிறார்கள். மண் வெட்டியை எடுத்துக்கொண்டு ஆண்கள் சேறு கலக்குவதற்கு இறங்குகிறார்கள். மேட்டுப் பகுதியில் குவித்து வைத்திருக்கின்ற உலர்ந்த சருகுகள், மக்கிய சாணம், பசுந் தழைகள் ஆகியவற்றைப் பெண்கள் வரப்பில் நின்றபடியே சேற்றில் விசுகிறார்கள். பிறகு பெண்களும் சேற்றில் இறங்கி கைகளையும் பயன்படுத்தி சேற்றைப் பதப்படுத்துகிறார்கள்.
2.11.12.அரசினது விவசாய நடவடிக்கை – தோட்டக்கலை காய்கறி அபிவிருத்தி அலுவலர்கள் கொல்லிமலை மக்களிடம் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் மலைமக்களின் விவசாயத்திற்கு உதவியாக அரசு உருவாக்கியுள்ள திட்டம் பற்றி விளக்குகிறார்கள். எலும்மிச்சை, ஆரஞ்சு, காப்பி, பலா, நாரத்தை, ஏலம் முதலான செடிகள் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். உருளைக்கிழங்கு, பீன்ஸ் முதலான காய்கறிகளின் விதைகளும் இலவசமாகக் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பயிர்களுக்குத் தேவையான இரசாயண உரங்களும் உழுபடைக் கருவிகளும் பாதிவிலையில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது கடந்த கால அனுபவத்திலிருந்து இத்தகைய அறிவிப்புகளை மலையாளி மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை. உழுகின்ற நிலத்தை அரசுக்குச் சொந்தமானது என்பதாகக் கூறி வருவாய் ஆய்வாளரும் கணக்குப்பிள்ளையும் தடுக்கிறார்கள். பிறகு பட்டா வாங்கித் தருவதாக கூறி நூறு இருநூறு என்று பணத்தை லஞ்சம் பெற்றுக்கொண்டு உழுவதற்கு அனுமதியளிக்கிறார்கள். பிறகு இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வருவாய் ஆய்வாளர் வந்ததும் இது பட்டா நிலமல்ல என்று மிரட்டி உழுவதைத் தடுக்கிறார்கள். பிறகு யாரிடம் பணம் பெறுகிறார்களோ அவர்களிடம் நிலத்தின் உரிமையை ஒப்படைத்துவிடுகிறார்கள். எனவே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கீழ்வருமாறு பேசிக்கொள்கிறார்கள்.
“நாம தரிசா கெடக்கற பொறம்போக்கு நெலத்துலே, பாரஸ்டு காட்டுலெ வயத்துப்பாட்டுக்கு ஏதாவது பயிரிட்டாலே சர்க்காரா வந்து நம்ம பயிரிட்டத அழிச்சு வெட்டறதும், கேசு போட்டு ஜெயில்லே மூடறதும் செய்யும்போது இவுங்க நமக்கு சும்மா அதக் கொடுக்கறோம். இதக்கொடுக்கறோம்னு சொல்றதே எப்படி நம்புறது?”
(சின்னப்ப பாரதி,கு. 2008: 72).
2.11.13.படகர்களின் விவசாயம் - ராகி, சாமை, தினை போன்ற பயிர் கதிர்கள், உருளைக் கிழங்குச் செடிகள், முள்ளங்கிச் செடிகள், இலைக் கோசு செடிகள், பூக்கோசு செடிகள் போன்ற உணவுப்பயிர்கள் ஆகியவை மரகதமலையில் விவசாயம் செய்யப்படுகின்றன. மார்கழி மாத இறுதிக்குள் அல்லது தைப் பொங்கல் பண்டிகைக்குள் உணவுப் பயிர் விளைச்சலை அறுவடை செய்து முடித்துவிடுகிறார்கள். மீண்டும் மாசி மாதம் விதைப்பினைத் தொடங்குகிறார்கள்.
2.11.14.படகர்-கோத்தர் உற்பத்தி உறவு – படகர்களது தொழிலுக்கும் வாழ்வுக்கும் தேவையான கலங்கள், ஆயுதங்கள் முதலிய உபகரணங்களைக் கோத்தர்கள் செய்து கொடுக்கிறார்கள். கோத்தர்களின் ஒத்துழைப்பிற்குப் பிரதியாக ஆண்டுதோறும் அவர்களுக்குத் தேவையான தானியங்களைப் படகர்கள் வழங்குகிறார்கள்.
2.11.15.தேயிலை காபி பயிரிடுதல் - தேயிலை என்ற சீன நாட்டு விதைகளையும் காபி என்ற எத்தியோப்பியா நாட்டு விதைகளையும் விவசாயம் செய்கின்ற முறை அறிமுகமாகி வளரத்தொடங்கியிருக்கின்றது. ஆங்கில வெள்ளைக்கார துரைமார்களால் இந்த விதைகள் பணப்பயிர்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காபி விவசாயம் சிறப்பிடம் பெற வில்லை. தேயிலை விவசாயம் பரவலாக வளர்ந்திருக்கின்றது. படகர்களில் சிலர் தங்களது நிலங்களில் தேயிலையைப் பயிரிட்டுப் பணக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். கரியமல்லர் தனது தேயிலைத் தோட்டங்களில் வெளியூர் ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி விவசாயம் செய்கிறார்.
2.11.16.கருப்பு மண் பூமி – மரகத மலையில் அருவிக்கரை பக்கம் இருக்கின்ற கருப்பு மண் பூமி நல்ல விளைச்சலைத் தரும் இயல்புடையதாக இருக்கின்றது. இந்த மண்ணில் விளைகின்ற ஒவ்வொரு கிழங்கும் தேங்காய் அளவிற்குப் பெரியதாக இருக்கின்றது. இந்த மண்ணிலுள்ள ஆரஞ்சு மரப் பழங்களின் இனிப்பு மிகவும் தனிச்சிறப்புடைய சுவையைப் பெற்றிருக்கின்றது. கிருஷ்ணனுக்குச் சொந்தமான இந்தப் பூமியிலிருந்து ஒரு ஏக்கர் பூமியை நூற்றைம்பது ரூபாய்க்கு வாங்க வேண்டுமென்று பாரு விரும்புகிறாள்.
2.11.17.குத்தகை விவசாயம் செய்தல் – விவசாய நிலத்தை உரிமையாளரிடமிருந்து குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்து விளைச்சலுக்கான உரிமையைப் பெறுகின்ற முறையாகும். குத்தகை என்பது நிலத்தின் மீதான தற்காலிக உரிமையாகும். நஞ்சனைப் கோயம்புத்தூருக்கு அனுப்பிப் படிக்க வைப்பதற்காகப் பாரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து கிழங்கு விவசாயம் செய்கிறாள்.
2.12.விலங்குகளை வளர்த்தல்
2.12.1.நாய்களை வளர்த்தல் – வேட்டையாடுவதற்கும் காவல் செய்வதற்கும் உதவியாகப் சோளகர்கள் நாய்களை வளர்க்கிறார்கள்.
காவல் பரணில் காவல் செய்வதற்கு உதவியாக படகர்கள் காவல் நாயை வளர்க்கிறார்கள்.
இருளர்கள் தாங்கள் வளர்க்கும் நாய்களைக் கொண்டு பாம்புகளைப் பிடிக்கிறார்கள்.
2.12.2.மாடுகளை வளர்த்தல் – விவசாய நிலத்தில் ஏர் பூட்டி உழவு செய்வதற்காகப் பசு மாட்டையும் காளை மாட்டையும் சோளகர்கள் வளர்க்கிறார்கள். கொல்லி மலை மலையாளிகள் மயிலை கிடா, காரி மாடு, பிள்ளை மாடு எனும் வகைகளில் மாடுகளை வளர்க்கிறார்கள். விவசாயப் பணிகளுக்கு மாடுகளைப் பயன்படுத்துகிறார்கள். படகர்கள் பால் கறப்பதற்காக நீலி எருமை, சீலிப் பசு ஆகிய மாடுகளை வளர்க்கிறார்கள். தொதவர்களின் மந்துவில் கொட்டில் அமைத்து எருமைகள் வளர்க்கப்படுகின்றன. தாணிக்கண்டி இருளர்கள் செந்நாய் போன்ற வேட்டை மிருகங்கள் மாடுகளை வேட்டையாடாமல் பாதுகாக்க வேண்டும் என்று மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் வளர்க்கிறார்கள். கொல்லிமலை மலையாளிகள் மாடுகளை வளர்க்கிறார்கள். அவற்றின் கழுத்துக்களில் ஓசை எழுப்புகின்ற கழுத்துமணியைக் கட்டிவைத்துள்ளார்கள்.
2.12.3.பன்றி வளர்த்தல் – மலையாளிகள் பன்றியை இசு என்று அழைக்கிறார்கள். பன்றிகள் வளர்வதற்கு பன்றிகூண்டினை அமைத்திருக்கிறார்கள். பன்றிகளுக்கு உரிய தொட்டியில் உணவிடுகிறார்கள். கேழ்வரகு கஞ்சி செய்து வெள்ளாட்டு பாலினைக் கலந்து பன்றிகளுக்கான கஞ்சித் தொட்டியில் ஊற்றுகிறார்கள். அந்தக் கஞ்சியில் நொய்த் தவிட்டைத் தூவி மேலும் பக்குவப்படுத்துகிறார்கள். பழச்சோலைகளிலிருந்து அழுகிப்போனக் கொய்யா, அன்னாச்சி, கூழாம்பழங்களையும் பன்றிகளுக்கு உணவாகக் கொடுக்கிறார்கள். காட்டில், வயலில், மலையில் ஆகிய இடங்களிலிருந்து கிடைக்கின்ற வேர், கிழங்கு, கழிவுப்பொருட்களைச் சேகரித்துவருகிறார்கள். இவற்றையும் பன்றிகளுக்கு உணவாக வழங்குகிறார்கள். இசுக்குட்டிகளை நாய்கள் கடிக்காமலும் சிறுவர்கள் கல்லால் அடித்துவிடாமலும் மிகக் கவனமாகப் பாதுகாக்கிறார்கள்.
2.12.4.மேய்ச்சல் தொழில் - சொந்தமாகப் புல்லுக்காடு வைத்திருப்பவர்கள் தங்களது ஆடு மாடுகளை தங்களது புல்லுக்காட்டிற்கு அழைத்துச் சென்று மேய்ப்பார்கள். ஆனால் சொந்தமாக புல்லுக்காடு இல்லாதவர்கள் தங்களது ஆடு மாடுகளை வனத்திற்கு மேய்த்துச் செல்வார்கள். வனத்துறையினரின் அதிகாரத்திற்குப் பயந்து ஆடுமாடுகளுக்குத் தலைக்கு குறிப்பிட்டத் தொகையாகக் கப்பம் கட்டிவிடுகிறார்கள். மேலதிகாரிகள் சிறைபிடித்தால் குற்றப்பணமாகப் பெருந்தொகையைக் கட்டுகிறார்கள். மஞ்சு, கொடகரை, பெட்டமுகலாளம், தொளாமலை போன்ற மலைகிராம மக்கள் தங்களது ஆடு மாடுகளை வனங்களுக்குச் சென்று மேய்க்கிறார்கள்.
படகர்கள் தங்களது கால்நடைகளை மேய்ப்பதற்கு மரகதமலையில் ஒரு குன்று முழுவதையும் பயன்படுத்திவந்தார்கள். தேயிலைத் தோட்டங்களால் குன்றின் ஒரு சரிவு முழுதும் ஆக்கிரமிக்கப்பட்ட பிறகு கால்நடைகள் மேய்வதற்கான இடங்கள் போதாமையாகியிருக்கின்றன.
2.12.5.அரசினது கால்நடை வளர்ப்பு நடவடிக்கை – கொல்லிமலை மலையாளிகளுக்கு அரசு மானிய விலையில் ஆடு, மாடு, பன்றிகளை வழங்குகின்ற திட்டம் இருக்கின்றது. கால்நடைகளை வாங்குவதற்குப் பாதி தொகையைக் கடனாகவும், அவற்றை பராமரிப்பதற்காக ஒரு தொகையை மானியமாகவும் வழங்குவதாகத் திட்டம் இருக்கின்றது. ஆனால் இந்தத் திட்டத்தை மலையாளி மக்கள் பெற்றுப் பயனடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக இந்தத் திட்டத்திற்குரிய அதிகாரிகள் கால்நடைகளை வாங்குவதற்குக் கடன் கொடுத்ததாகக் கணக்குக் காட்டுவதற்கு மலையாளிகளிடம் நேர்மையற்ற முறையில் கடன் தொகையை வழங்குகிறார்கள். மலையாளிகளும் தங்களுக்குக் கடன் தொகையாவது கையில் கிடைக்கின்றதே என்ற விருப்பத்தின் காரணமாக அடிபணிகிறார்கள். கால்நடை வாங்கக் கடன் பெற்ற மலையாளிகளுக்கு வழங்க வேண்டிய முழு மானியத் தொகையையும் அதிகாரிகளே தங்களுக்குள் பிரித்துக்கொள்கிறார்கள்.
2.13.உற்பத்தி பாதுகாப்பு செய்தல்
2.13.1.குத்தாரி அமைத்தல் - குத்தாரி என்பது ராகி தானியங்களை அறுவடைக்கு பின்பு பாதுகாப்பதற்காக அமைப்படும் முறையாகும். சோளகர்கள் தரையில் கருங்கற்களைப் பரப்பி தளமாக்குவர். அந்தத் தளத்தில் மூங்கில் படல்களை நிறுத்தி வைப்பர். அந்தப் படல்களைச் சுற்றிலும் குதிரைவாளிப் புற்களைக்கொண்டு நெருக்கமாக பின்னுவர். அறுவடையான ராகி தானியங்களை அதனுள் சேகரித்துப் பாதுகாப்பர். மழை நீர் புகாமலும் பூச்சி அரிக்காமலும் இந்த முறையில் தானியங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
2.13.2.காவல் செய்தல் அறுவடை செய்யப்பட்ட தானியங்களைப் பாதுகாப்பதற்குக் காவல் செய்தல் என்ற வேலைமுறை பின்பற்றப்படுகின்றது. குடிசையில் குத்தாரியிலுள்ள தானியங்களின் வாசனையை நுகர்ந்துகொண்டு மூன்று காட்டுயானைகள் நுழைகின்றன. காவல் பொறுப்பில் இருந்த சிவண்ணா கவனமின்றி உறங்கிவிடுகிறான். யானைகள் மூங்கில்படல்களால் அமைத்த வேலியை முறித்துக்கொண்டு வருகின்றன. விழித்துக்கொண்ட சிவண்ணா யானைகளை விரட்ட மூங்கில் கட்டிய தகரத்தால் ஒலி எழுப்பியும் வெடி வெடித்தும் விரட்ட முயல்கிறான். ஊரிலுள்ளவர்களும் விழிப்படைந்து யானைகளை விரட்டுகிறார்கள். அனைவரின் ஒத்துழைப்புடனும் யானைகள் வனத்திற்குள் விரட்டப்பட்டன.
“ஒரு வருட உழைப்பைச் சிறிது நேரத்தில் இழந்து வருடம் முழுவதற்கும் கால் வயிற்றுப் பட்டினி கிடந்திருக்க வேண்டி வந்திருக்கும். என்னடா உனக்கு குத்தாரியைப் பார்க்காமல் தூக்கம்” என்று சிவண்ணாவின் தாய் ஜோகம்மாள் கடிந்து கொள்கிறார்.
(பாலமுருகன்,ச.2013: 7).
2.13.3.காவல் பரண் – விளைச்சல் நிலங்களையொட்டி உயரத்தில் குடிசை அமைத்திருப்பர். இதனைக் காவல்பரண் என்கிறார்கள். அறுவடைக் காலம்வரை பயிர்களை யானை, காட்டெருமை, பன்றிகள் போன்ற மிருகங்களிடமிருந்து பாதுகாக்க சோளகர்கள் இத்தகைய காவல் பரண்களை அமைத்து இரவிலும் தங்கி மூங்கில் தப்பை போன்ற கருவிகளின் உதவியுடன் பயிர்களைப் பாதுகாப்பர்.
2.13.4.ராகிக் குழி வெட்டுதல் – சோளகர்கள் தங்கள் குடிசையின் வாசலில் மண் தரையில் கெட்டியானப் பகுதியில் மூன்று அடிக்கு நீண்ட பள்ளத்தைத் தோண்டுவார்கள். ஆழம் செல்ல செல்ல பள்ளத்தின் அகலத்தை அதிகரித்து ஒரு கிணறு போன்று தோண்டி மண்ணை எடுப்பார்கள். பள்ளம் பதினைந்து அடியை எட்டிவிட்டப்பிறகு பள்ளத்தின் அடிப்பகுதியை சதுரவடிவில் வெட்டி மண்ணை எடுப்பார்கள். மண் எடுக்கப்பட்ட பகுதியில் செம்மண்ணைக் குழைத்து நாற்புறமும் பூசினார்கள். வனத்திலுள்ள மரங்களின் பச்சை மற்றும் காய்ந்த இலை தழைகளை பள்ளத்தில் நிரப்பி தீயிடுவார்கள். தீயின் வெப்பத்தில் பள்ளத்தில் செம்மண் பூசிய பக்கச் சுவர்கள் கெட்டிப்படுகின்றன. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்பத்தினால் பள்ளம் பக்குவப்படுகின்றது. பிறகு பள்ளத்தில் இறங்கி சுத்தம் செய்து சாணத்தினால் மெழுகினார்கள். இந்த ராகிக் குழியானது குடுவை வடிவிலான வீட்டின் பாதாள அறையைப் போன்று இருக்கின்றது. குடிசை வாசலிலுள்ள அந்த ராகிக் குழியில் தானியங்களைக் கொட்டி மரக்கட்டையாலான மூடியைக் கொண்டு அடைத்து மண்போட்டு மறைத்து விடுவார்கள். அந்தக் குழியில் கொட்டப்படுகின்ற தானியங்கள் எவ்வளவு காலத்திற்காயினும் கெட்டுப்போகாமலும் முளை விடாமலும் பாதுகாக்கப்படுகின்றன.
2.13.5.காவல் கொட்டகை – விளைச்சல் நிலங்களை இரவில் காவல் செய்வதற்காக மலையாளிகள் அமைக்கின்ற குடிசை காவல் கொட்டகை என அழைக்கப்படுகின்றது.
2.13.6.காட்டுக் கொட்டகை – சோளகர்கள் விவசாயத்திற்குப் பயன்படுகின்ற பொருட்களைப் பாதுகாப்பதற்காக கணாங்கு புல்வேய்ந்த குடிசைகளை அமைக்கின்றனர். இதனைச் கொட்டகை, காட்டுக்கொட்டகை என்கிறார்கள். சீர்காட்டில் கணாங்கு புல் வேய்ந்த கொட்டகையில்தான் உழவுக் கலப்பையும், மரக் கூடைகளும் பாதுகாக்கப்படுகின்றன.
2.13.7.மாட்டுத் தொழுவம் – மாடுகள் கட்டப்படுகின்ற இடத்தை மாட்டுத் தொழுவம் என்று அழைக்கின்றார்கள். இங்குதான் மலையாளிகள் மாடுகளைப் பாதுகாத்துப் பராமிக்கிறார்கள்.
2.13.8.காவல் பரண் – சரிவுப் பகுதியில் பெரிய மூங்கில் கால்களையும், மேட்டுப் பகுதியில் சிறிய மூங்கில் கால்களையும் கொண்டு படுகர்களின் காவல்பரண்கள் அமைந்திருக்கின்றன. முள்ளம் பன்றி, மான் போன்ற மிருகங்களிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக இருவர் வருகிறார்கள். இவர்கள் இரவில் காவல்பரணில் தங்கி காவல் செய்வதற்கு ஊதுகுழல், தீப்பந்தம், காவல்நாய் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
2.13.9.மாட்டுக் கொட்டில் – படகர்கள் தங்களது மாடுகளைப் பாதுகாத்துப் பராமரிக்கின்ற இடத்தை மாட்டுக்கொட்டில் என்று அழைக்கிறார்கள். மாட்டுக்கொட்டில் நீளமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. மாட்டுக்கொட்டிலில் ஹொணே எனும் மூங்கில் பாத்திரத்துடன் வந்து பாலைக் கறந்து செல்கிறார்கள். மாடுகளின் சாணத்தைச் சுமந்து சேகரிக்கின்ற எரு தொட்டி ஒன்றும் இருக்கின்றது.
2.13.10.ஆட்டுப்பட்டி –இருளர்கள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளைப் பாதுகாப்பாக வளர்க்கிறார்கள். ஆடுகளை அடைத்துப் பாதுகாத்து வளர்க்கப் பயன்படுத்துகின்ற இடத்தை ஆட்டுப்பட்டி என்கிறார்கள்.
2.13.11.வேட்டைக்கு அழைத்தல் – மரகதமலையில் படகர்கள் தங்களது கால்நடைகளுக்கு ஆபத்தாக வேட்டை விலங்குகள் நுழைந்துவிட்டால் பாதுகாப்பு நடவடிக்கை கருதி வேட்டையாடுவதற்காக வேட்டைக்காரர்களை அழைத்துவருகிறார்கள். அருவிக்கரையில் புலியைக் கண்டதாகச் செய்தியை அறிந்ததும் லிங்கையா வேட்டைக்காரர்களை அழைக்க நடவடிக்கையை மேற்கொள்கிறார்.
2.13.12.குடிநீர் காவல் – தேன்கனிக்கோட்டை பகுதிகளில் வாழும் மக்கள் வறட்சியின் காரணமாக குடிநீருக்காக தினந்தோறும் அலைகிறார்கள். காட்டாறுகளிலும் ஓடைகளிலும் மண்ணைத் தோண்டி ஊற்று நீரை உருவாக்குகிறார்கள். இந்த ஊற்று நீர் தோண்டுவதைச் செலம்பு தோண்டுதல் என்று அழைக்கிறார்கள். மண்குடத்தை மொடா என்று அழைக்கிறார்கள். ஒரு வீட்டிற்கு ஒரு மொடா என்று தண்ணீரை அளந்து கொடுத்து முறைப்படுத்துகிறார்கள். முறையை மீறாமல் கவனிப்பதற்காகக் குடிநீருக்கு காவல் போடப்படுகின்றது.
2.13.13.கொல்லை காவல் – பழமரத்துப்பட்டியில் விளைச்சல் பயிர்களைக் காட்டுப்பன்றிகள், யானைகள் போன்ற வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காகக் கொல்லை அமைத்துக் காவல் செய்கிறார்கள். கொல்லைக் காவலர்கள் தகர டின்களில் சத்தம் எழுப்பிக்கொண்டு இரவெல்லாம் தூங்காமல் பயிர்களைப் பாதுகாக்கிறார்கள்.
No comments:
Post a Comment