தமிழுக்கு அறிவென்று பேர்
புதியவன் முனைவர் கே.சிவக்குமார்
தமிழை தாய் மொழியாகக் கொண்ட நண்பர்களே. தாய் மொழியில் ஆழமாகவும்
அடர்த்தியாகவும் நடைமுறை அறிவைப் பெற்றிருந்தால் மட்டுமே பழுதின்றி சிந்திக்கும் சுயத்திறம்
உள்ளவர்களாக திகழ்வோம். அதனால்தான் மனிதவளம் மேன்மையடைவதற்கு அடித்தளமாக குழந்தைகளுக்கு
தாய்மொழி வழியில் கல்வி வழங்கும் அறிவியல் பூர்வமான நடைமுறையை உலகம் முழுதும் கடைபிடிக்கப்படுகின்றது.
ஆனால், நாம் கடைபிடிக்கின்றோமா?
தமிழ் வழியில் கல்வி பயில்வதை இழிவாகவும் சாத்தியமற்றதாகவும்
கருதும் நிலையும் இருக்கின்றது. ஐந்து மாத குழந்தையிலிருந்து தமிழ் மொழியில் பழக்கப்பட்டு
வளரும் குழந்தைகளுக்கு அவர்களது மொழியை எழுதவும் படிக்கவும் சிந்திக்கவும் கற்றுக்கொடுக்கும்
கடமையைச் செய்யாமல் தவறுகிறோம். தாய்மொழியில் ஆளுமைத்திறன் உடையவர்களால் மட்டுமே விருப்பமொழியாக
எத்தனை மொழியையும் உரிய குறுகிய கால பயிற்சிகள் மூலமாக பேசவும் எழுதவும் படிக்கவும்
கற்றுக்கொள்ள முடியும் என்ற நடைமுறை உண்மையைப் புரிந்துகொள்ளத் தவறுகின்றோம். இதனால்
விளைவுகளைப் பற்றி அறிவியல் பூர்வமாக யோசித்து தீர்க்கமாக முடிவெடுக்காமல் குற்றம்
புரிகின்றோம்.
குழந்தைகள்
அவர்களது வாழ்வியல் வரலாற்றுச் சூழலில் இயல்பாகப் புரிந்துகொண்டு பேசுகின்ற தாய்மொழி
வழியாக எழுதவும் படிக்கவும் பயில்வது அவர்களது அடிப்படை உரிமை. ஆரம்பக் கல்வி முதல்
உயர்கல்வி வரை தாய்மொழி வழியில் பயில்வது அவர்களது அடிப்படை உரிமையாகும். அவர்களது
கல்வி உரிமைகளை பாதுகாத்து வழங்குவது மனிதகுல சமூகத்தின் தவிர்க்கக்கூடாத கடமையாகும்.
நாம் கடமை தவறி தாய்மொழி அல்லாத அந்நிய மொழியில் கல்வி பெறும்
நிலைக்கு குழந்தைகளை ஆளாக்கினால் அது அவர்கள் மீது சமூகம் தொடுக்கின்ற வன்முறை குற்றமாகக்
கருதப்பட வேண்டும். ஏனெனில், தனக்கு அறிவுத்
தொடர்ச்சி அல்லாத அயல் மொழியில் கற்கும் நிர்பந்தம் நிகழும்போது உள்ளத்தின் இயல்பான
சுதந்திரநிலை உடைந்து செயற்கையான மன இறுக்கத்திற்கு ஆட்பட நேர்கின்றது. உள்ளத்தியல்பில்
சுதந்திரமான இயல்பு நிலையிலுள்ள கற்கும் திறனானது செயற்கையான மன இறுக்கத்திற்கு ஆட்படும்போது
பலமடங்கு குறைபாடுடையதாக வினையாற்றுகின்றது. இதனால் இயல்பு நிலை தாய்மொழி வழியிலான
கற்றல் செயல்பாட்டில் நிகழ வேண்டிய கற்றல் சிந்தித்தல் செயல்படுதல் மேம்பட்டநிலையில்
மேலும் கற்றல் சிந்தித்தல் செயல்படுதல் என்ற சுழல்வட்ட ஏற்ற நிகழ்வானது முற்றிலும்
சிதைவடைகின்றது. மாறாக, அயல் மொழி வழியிலான கற்றல் செயல்பாட்டில் கற்றலாவது நினைவில்
மறவாதிருத்தல் ஒப்புவித்தல் எழுதிமுடித்தல் என்ற தேக்கநிலைக்கு குழந்தைகளை ஆட்படுத்தி
மனித நிலைக்கு உயரவிடாமல் மந்தைநிலைக்கு ஆளாக்குகின்றது.
சுழல்வட்ட ஏற்ற வடிவிலான தாய்மொழி வழிக் கல்வியில் உரிய முறையில்
படித்தல், புதுமைகளைப் படைத்தல், உண்மைகளைக் கண்டுபிடித்தல் என்பதாக சிந்தனைப்பூர்வமான
கற்றல் நடவடிக்கை நிகழ்கின்றது. அதனால்தான் தாய்மொழிக் கல்வி நடைமுறையிலிருந்த காலம்வரை
தமிழ்நாட்டில் தலைசிறந்த அறிஞர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் கண்டுபிடிப்பாளர்களும்
உலகம் அறியும்படி உயர்ந்துள்ளார்கள். ஆனால் தேக்கநிலைக்கு ஆட்படுத்தும் தாய்மொழிவழியற்ற
கல்வியானது சிந்திக்க இயலாத மந்த புத்தியுடைய தலைமுறைகளை உருவாக்குகின்றது. அதனால்தான்
தாய்மொழிவழிக் கல்வி அற்றுப்போன காலத்தில் அயல்மொழி வழிக்கல்வி வழியாக ஆளுமையுள்ள மனிதர்களை
நம்நாடு பெற்றெடுக்க இயலவில்லை. எனவே, மனிதர்களாக உயர்த்தப்பட வேண்டிய நம் குழந்தைகளை
வெறும் மந்தைகளாக உருமாற்றிய குற்றவாளிகள் நாம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
அறிவியல் தமிழைப் பாரம்பரியமாகப் பெற்றுள்ள நாம்…
கணினி தமிழிலும் சிகரம் தொட்டுள்ள நாம்..
இளமைக்கு இளமையாகவும் முதுமைக்கு முதுமையாகவும்
பேரழகின் பேரறிவாகவும் திகழும் தமிழ்மொழியின் குழந்தைகளாகிய
நாம்…
தாழ்ந்து இழிந்தமைக்கு
யார் காரணம்?
ஆரிய பார்ப்பனர்களின்
சூழ்ச்சி, ஆங்கிலேயர்களின் காலணிய அடிமைநிலை, சுயராஜ்யத்தில் பார்ப்பனிய சூழ்ச்சி,
கார்ப்பரேட் காவி பாசிச அரசியல் சூழல் என்று எத்தனை அரசியல் பின்னணிகளைக் கைகாட்டினாலும்
நாம்தான் அரசியல் தெளிவற்று நம் குழந்தைகளின் அறிவை பலி கொடுத்தவர்கள் என்ற உண்மையை
மறுக்க முடியாதல்லவா. எனவே, நாம் குற்றவாளிகள்தான்.
நமது குற்றத்தின் விளைவு என்ன தெரியுமா? நம் குழந்தைகள் கண்ணிருந்தும்
குருடர்களாக வகுப்பறைகளில் மேய்க்கப்படுகிறார்கள். காதுகளிருந்தும் செவிடர்களாக நாடெங்கும்
திரிகின்றார்கள். வாயிருந்து ஊமைகளாக பிதற்றிக்கொண்டு ஓடுகிறார்கள். தாய்மொழியில் நன்கு
படிக்கும் வாய்ப்பை கொடுக்காததாலும் அயல்மொழி வழியில் படித்தாக வேண்டிய நிலைமைக்கு
ஆளாக்கியதாலும் கற்றல் திறனில் குறைபாடுடையவர்களாக பெருந்திரளான மாணவர்கள் மந்தையாக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் படித்து முடித்தப் பாடங்களைப் பற்றி
அவர்களிடம் பேசினாலோ ஆராய்ந்தாலோ இவற்றை அறிய முடிகின்றது. அவர்களது பாட நூல்களில்
சில வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி வாசிக்கச்சொன்னால் வாசிக்கத் தெரியவில்லை. தவறாக
வாசிக்கிறார்கள். சரியாக வாசித்தாலும் சரியான பொருள் புரிதலுடன் விளக்கத் தெரியவில்லை.
மொழியைச் சரியாக கையாண்டு அவர்களால் எழுத முடிவதில்லை.
ஆங்கிலம் விரும்பிப் படிக்கும் மாணவர்களிடம் எண்களைத் தமிழில் சொல்லுகையில் ஒன்று இரண்டு… பத்து. பத்துக்கு பிறகு
வரும் எண்களை பதினொன்று, பன்னிரண்டு என்றுதான் சொல்கின்றோம். அதாவது பிரித்தால் பத்து
ஒன்று, பத்து இரண்டு என்று பொருள்படும். ஆனால் ஆங்கிலத்தில் One … Ten. பிறகு தமிழில்
வழங்கப்படுவதற்கு இணையாக Ten one, Ten two என்று சொல்லாமல் Eleven, Twelve என்று சொல்கிறீர்கள்.
பிறகு உடனடி திருப்புமுனையாக Thirteen முதல் Nineteen வரையிலும் teen பாட்டு பாடுகிறீர்கள்.
பிறகு Twentyல் நின்று தமிழில் வழங்கப்படுவதற்கு இணையாக Twenty one, Twenty two… என்று
நீட்டிச்செல்கிறீர்களே என்ன காரணம் என்று விளக்க முடியுமா? என் கேள்விக்கு ஒருவர்கூட
விடையளிக்கவில்லை. ஒரு மாணவி வகுப்பறையில் ஆசிரியரிடம் கேட்டாராம். இதுமாதிரியான மொக்கை
கேள்விக்கெல்லாம் விடை கிடையாதென்று சொல்லிவிட்டாராம். ஒரு மொக்கை கேள்விக்குக்கூட
பதில் சொல்லத் தெரியாத யோக்கியதையில்தான் வகுப்பறை இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளும்படி
சொல்லிவைத்தேன்.
தமிழை விரும்பிப் படிக்கும் மாணவர்களிடம் எண்களைத் தமிழில் வரிசைபட சொல்லுகையில் பத்துக்கு
முன்பாகவே ஒன்பது என்று பத்து குறிப்பிடப்படுகின்றதே ஏன்? நூறுக்கு முன்பாகவே தொண்ணூறு
என்று நூறுவும் ஆயிரத்திற்கு முன்பாகவே தொள்ளாயிரம் என்று ஆயிரமும் குறிப்பிடப்படுகின்றதே
ஏன்? என்று வினவியதற்கு தெரியவில்லை என்று முடித்துக்கொண்டார்களே அல்லாமல் தவறான பதிலைகூட
முன்வைக்க யாரும் இல்லை. பிறகு என்னை விளக்கச் சொன்னவர்களிடம் முன்பு சொல்லப்பட்டவை
அனைத்தும் தொடு என்பதாக விளக்கம் பெறுகின்றது என்ற கருதுகோளை முன்வைத்தேன். அதாவது,
பத்துக்கு முன்பாகவே பத்தைத் தொடப்போகிறது என்று அறிவுறுத்தும் பொருளில் தொடு பத்து
என்றாகி ஒன்பது என்று திரிந்துள்ளது. நூறுக்கு
முன்பாகவே நூறைத் தொடப்போகிறது என்று அறிவுறுத்தும் பொருளில் தொடு நூறு என்றாகி தொண்ணூறு
என்று திரிந்துள்ளது. ஆயிரத்திற்கு முன்பாகவே ஆயிரத்தைத் தொடப்போகிறது என்று அறிவுறுத்தும்
பொருளில் தொடு ஆயிரம் என்றாகி தொள்ளாயிரம் என்று திரிந்துள்ளது. எனது விடை சரியோ தவறோ
மாணவர்களிடமிருந்து வெளிப்படுவதற்கான சிந்தனைத்திறன்கள் முற்றிலும் தவறியுள்ளது என்பது
மட்டும் உறுதியாகின்றது.
பயிற்றுமொழியும் புரியவில்லை. தாய்மொழியிலும் அறிவில்லை.
மனனம் செய்து வாந்தி எடுப்பதில் என்ன திறன் என்றும் தெரியவில்லை. எப்படி மதிப்பெண்
பெற்றோம், எப்படி மதிப்பெண் இழந்தோம், நாம் எடுக்கும் மதிப்பெண்ணுக்கு என்னதான் மதிப்பு,
எதுவும் புரியவில்லை. படிப்பால் நம் அறிவு வளர்ந்திருக்கிறதா இல்லையா தெரியவில்லை.
தனக்கு எதைப்பற்றி தெரியும், எதைப்பற்றி தெரியாது, எவற்றை தெரிந்துகொள்ள வேண்டும்,
ஏன் தெரிந்துகொள்ள வேண்டும், எத்தகைய சூழலில் நம் வாழ்க்கை இருக்கின்றது, இதன் கடந்தகாலம்
எத்தகையது, வருங்காலம் எத்தகையதாக இருக்க வாய்ப்பிருக்கின்றது எதுவும் தெரியாது. தன்
அறிவின் மீதும் தன்னம்பிக்கை இல்லை. அறியாமையை ஒப்புக்கொள்ளும் துணிச்சலும் இல்லை.
தெரியாதவற்றையும் தெரிந்ததுபோலவே நடித்தாக வேண்டிய நிர்பந்தத்தில் ஓடிக்கொண்டு வெற்றியடைந்ததாக
நம்பும் யாவற்றிலும் தோல்வி பற்றிய அச்சத்துடனே புதைந்துகொண்டிருக்கிறார்கள். தாம்
புதைந்து போதலை பெற்றோரின் விருப்பத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் தாங்கள் ஆற்ற வேண்டிய
தியாக நடவடிக்கைகளாகவும் கருதிக்கொள்கிறார்கள். தமது இயலாமையை பலவீனப்படுதலை வெளிப்படையாக
பெற்றோர்களிடம் வெளிப்படுத்தவும் தெரியவில்லை. மேலும், தங்களை பெரும் சொத்துக்களாகக்
கருதும் பெற்றோர்களிடம் தெரியப்படுத்துவதால் எந்த பிரயோசனமும் இருக்கப்போவதில்லை என்பது
அவர்களது சித்தமாகவும் இருக்கலாம்.
தெளிந்த அறிவு, உறுதியானப் பேச்சு, தன்னம்பிக்கை மிக்க செயல்
இவற்றை இழந்து, இந்தத் தலைமுறை குழந்தைகள் பலவீனப்பட்டு முடங்கியுள்ளார்கள் என்பதே
கல்விச்சூழல் கண்டுள்ள காலத்தின் நிதர்சனம். குழந்தைகளுக்குத் தெரியாத மொழியில் எந்த
அறிவைக் கொடுத்தாலும் சுவைக்க முடியாத கனியாகவோ, செறிக்க முடியாத உணவாகவோ, தொண்டையில்
சிக்கிய முள்ளாகவோ, அறியாமையின் மீப்பெரும் நோயாகவோ வினையாற்றும் என்ற சாதாரண உண்மையை
உணராமல் நாமாற்றிய அயல்மொழிக் கல்வியின் விளைவுகளை மேலும் விளக்குவதற்கு அவசியம் இல்லையென்று
கருதுகின்றேன். இந்தத் தருணத்திலிருந்தாவது குழந்தைகளின் தாய்மொழி வழி கல்வி உரிமைக்கு
வழியமைப்போம். தமிழ் பேசும் நம் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்போம்.
தமிழ் எழுத்தறிவாகிய கல்வியறிவே இந்த உலகிற்கு முதல் கடவுள்
ஆகும் என்கிறார் வள்ளுவர். தாத்தன் வள்ளுவன் வழியில் வந்தவர்கள் நாம். நம் குழந்தைகளுக்குப்
பேசத் தெரிந்த தமிழ் வார்த்தைகளில் இருந்தே அடிப்படை எழுத்துக்களாகிய உயிர் எழுத்துக்களையும்
மெய் எழுத்துக்களையும் கற்றுக் கொடுப்போம். ஆய்த எழுத்து ஃ (அக்) என்பது உயிரெழுத்துக்களாகிய
அகர வரிசை முடிந்து க் என்ற மெய் வரிசையின் தொடக்கம் என்று காரணம் விளக்குவோம். உயிர்
மெய் எழுத்துக்களை மெய்யும் உயிரும் உயிர்மெய் ஆகின்ற வழியில் (க்அக.. களி, அகம்) சொற்களோடு
இணைத்தறியும் வழியில் பயிற்சி வழங்குவோம். சொற்களற்று ஒலிக்கும் எழுத்துக்களை எளிதாக
புரிந்துகொள்ள வழியமைப்போம். கலை மற்றும் அறிவியல் இலக்கியங்களை படிப்பவர்களாகவும்
படைப்பவர்களாகவும் உருமாற்றுவோம். எந்தத் துறையிலும் இலக்குடைய மனிதர்களாக வெற்றியடைய
வாழ்த்துரைப்போம்.