காவல்கோட்டம்
நாவலில் சமய அரசியல் 2
மதுரை கோட்டைச்சுவர் இடிபட்டுக் கொண்டிருந்தது. நகரின் முக்கியஸ்தர்கள்
ஆளாளுக்குக் கைவைத்தார்கள். அவர்களில் கணேஷமுதலியும் ஒருவர். மேஸ்திரி பெருமாள் முதலி இவருக்கு பேரன். ஒரு இரவில் தாத்தா
என்று அலறிய போது பாட்டனார் மீது அவர் வைத்திருந்த அன்பை அளவிடமுடிந்தது. அவரை அலற
வைத்தது ஓரு கனவு. அவர் கண்ட கனவு இதுதான்.
பரவிக்கிடக்கும் சிற்பங்களால்
பொழிவு பெற்றிருந்தது மதுரை. உளிகளின் நாக்கால் கற்களை ருசித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்
சிற்பாசிரியர்கள். சிற்பிகளுக்கெல்லாம் தலைமைச் சிற்பி சரிந்து கிடந்தார். மண்டபத்தின்
மையத்தூண் சிற்பியின் பிடரியை அடித்து முதுகுத்தண்டில் தலை வைத்து படுத்திருந்தது.
தலைமைச்சிற்பியின் மரண பயங்கரம் மதுரையை பயத்தில் உறைய வைத்தது. பாட்டனாரிடம் மரணச்
செய்தியை சொல்வதற்கு ஓடுகிறார் பெருமாள் முதலி. கோட்டைச் சுவருக்குக் கீழே பேசிக் கொண்டிருந்தார்
கணேசமுதலி. ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருக்கிறான் குதிரைலாயத் தலைவன். மேலே சுவரை இடித்துக்
கொண்டிருக்கிறார்கள் முஸ்லிம்கள். முக்கியஸ்தர்களில் ஒருவர் சும்சுதீன்பாய் என்ற இஸ்லாமியர். இவ்வேலையை நடத்திக் கொண்டிருக்கும்
மனிதர் இவர்தான்.
மேலே இடிப்பவர்கள் கீழே பார்க்கவில்லை. கீழே பேசுபவர்கள்
மேலே பார்க்கவில்லை. அவர்கள்; வேலை அவர்கள்
போக்கில் நடந்து கொண்டிருக்கிறது. தூரத்திலிருந்து கவனித்த பெருமாள் மேஸ்திரிக்குத்தான்
விபரீதம் தெரிகிறது. தாத்தாவைக் கவனிக்காமல் இடிக்கிறார்களே என்ற கோபமும் பயமும் அவரைத்தூக்கிப்
போட்டது. இடிக்காதீர்கள் என்று கதறிக் கொண்டு ஓடி வந்த போது கணேசமுதலி நசுங்கினார்.
முஸ்லீம்கள் தள்ளிவிட்ட பெருங்கல் மேலே விழுந்தது. மேஸ்திரியின் மூஞ்சியில் தெரித்தது
தாத்தாவின் இரத்தம். ஒரே அலறலில் கனவு கலைந்தது. இரவு நடுங்கியது.
அருட்தந்தை ஜேம்ஸ, அமெரிக்க மிஷினரிமார்களுள் ஒருவர். இவரது கடிதங்களுள் பதிவு பெற்றுள்ள செய்திகளிலிருந்து
சில…
அமெரிக்க மிஷினரியில் அருட்தந்தை ஜேம்ஸ். உண்மையான கிறிஸ்துவராக
வெளிப்படும் மனிதர். பசுமலையிலிருந்து கம்பத்தின் மேற்கிலுள்ள மலை உச்சிக்கு பயணம்.
அவர் பயணத்திற்குக் காவல் புரிந்தவன் மொக்கச்சாமி. இவன் தாதனூரைச் சேர்ந்த காவல்காரன்.
இருட்டுக்குப் பயப்படும் மனிதர்களுக்குள் தாதனூர் காவல்காரர்கள் மட்டும் விதிவிலக்கு.
ஜேம்ஸின் பயம் கர்த்தரைப் போர்த்தியிருந்தது.
வண்டியோட்டி வாய்திறந்து சொன்னான். ‘வண்டிய கொஞ்சம் நிறுத்திட்டு வேற வண்டிக வந்த பெறகு சேந்து போவமே’(சு.வெங்கடேசன்: 2008,பக்-475) சேர்ந்து போவது மொக்கையனுக்கு சிக்கல். புதிய வண்டிகளுக்கு காவல்
கொடுக்கும் சிரமம் ஏற்படும். ‘வண்டிய
விடப்பா வேகம்மா’(சு.வெங்கடேசன்: 2008,பக்-475) என்றவன் இருட்டைக்கிழித்துக் கொண்டு நடந்தான். தண்ணீருக்குள்
நீந்தும் மீனைப் போல இயல்பாக நீந்தினான் இருட்டில். அவனது கால்தடத்தை பற்றிக்கொண்டு
உருண்டது, வண்டி.
திருமங்கலம், சிந்துப்பட்டி இரண்டு ஊர்களிலும் வண்டியை நிறுத்திவிட்டுக் கடவுளை
வழிபட்டு வருகிறான், வண்டியோட்டி. சைவ வைணவக் கோயில் இரண்டும் இரண்டு ஊர்களிலும்
இருக்கின்றன. ஜேம்ஸின் மண்டையைக்குழப்பிய விஷயம் இதுதான்.
மொக்கச்சாமி எந்தக் கோயிலையும்
கண்டுகொள்ளவே இல்லை. வைதீக சமயங்களில் துளியும் ஒட்டிக் கொள்ளாவன் போல நடந்துகொண்டான்.
அதனால்தான் ஜேம்ஸ் தன் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்துகிறார். ‘அவனது இனத்தின் நம்பிக்கை வைதீக சமயத்திலிருந்து இவ்வளவு விலகி
இருக்கிறது என்பதை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தகுந்தாற் போல்
நமது பணிகளைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-481) இரண்டு இரவும் மூன்று பகலும் தாதனூர்க்காரனையே சுற்றி சுற்றி அளவிட்டன அருட்தந்தை
ஜேம்ஸின் கண்கள். அவரது கடிதமே இதற்கு சாட்சி.
அருட்தந்தை ஜேம்ஸின் நண்பர் சவுரிராயர். மூன்று தலைமுறைகளாக
கிறிஸ்தவராக வாழ்ந்திருக்கிறார். மூன்று தலைமுறைக்கு முன்பு வேறொரு மதம். இல்லையில்லை
வேறொரு சாதி. சரியான வரையறை இந்து மதத்திற்குக் கிடையாதல்லவா. தேவாலயம் கட்டும் பணியில்
பெருமளவில் பங்காற்றிய இவர் உண்மையான கிறிஸ்துவராகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
உடல்நலமின்றி உயிரிழந்த சவுரிராயரைக் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்ய முயற்சித்துள்ளனர்.
இந்திய மண்ணில் இருக்கும் கிறிஸ்தவ இடுகாடு ஐரோப்பியர்களுக்கு மட்டுமே உரியதாம். சவுரிராயரை
இந்தியர்களின் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள், இங்கு அனுமதிக்க முடியாது என்று உறுதியாகச் சொல்லி விட்டனர்.
அதாவது, சவுரிராயனை சாதியின் மரபிற்குள் தள்ளிவிட்டார்கள். அதனால்தான் கர்த்தரிடம் இவ்வாறு அழுது புலம்புகிறது அவரது கடிதம். ‘ஒருகிறிஸ்துவனை கிறிஸ்தவ இடுகாட்டில் புதைப்பதைக் கூட அனுமதிக்க
முடியாத அளவு இனப்பாகுபாடு இவர்களது கண்களைக் கட்டியிருக்கிறது. நான் என்ன செய்ய?’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-553)
முல்லைப்பெரியாறு அணைகட்டும் பணியே ஒரேவழி. தாதுப் பஞ்சத்திலிருந்து
லட்சக்கணக்கான மக்களை நிச்சயம் காப்பாற்றும். ஆனால், ஏராளமான லாபத்தை வழங்கும் பாம்பன் கடவு பணிக்காக அணைகட்டும்
பணியைக் கைவிட்டது ஆங்கில அரசு. ராமநாத போலீஸ் ஸ்டேசனோ, பரமக்குடி நீதிமன்றமோ பார்த்திடாத அளவிற்கு மதுரைச் சிறையினும்
பெரிய சிறைச்சாலையை பாம்பனில் உருவாக்கியது. எல்லாப்பகுதியிலிருந்தும் கைதி என்ற பெயரில்
ஏராளமான மனித மந்தைகள் இழுத்து வரப்பட்டார்கள். போலீஸ் ஸ்டேசன், நீதிமன்றம் என்ற எந்த அடிப்படையும் இல்லாத பாம்பனில் சிறை அமைந்துள்ள
நோக்கம் என்ன தெரியுமா? கைதிகளை பாம்பன் கடவு பணியில் ஈடுபடுத்துவதுதான்.
இந்த நோக்கம் எவ்வளவு கொடூரமானது
தெரியுமா? கடலுக்கடியில் கால்வாய் தோண்ட வேண்டும். கால்வாயின் இரண்டு கரையிலும்
பாதுகாப்பான அரண் அமைக்க வேண்டும். நீராவி தூர்வாரும் கருவிகளும், ராட்சத இயந்திரங்களும் செய்ய வேண்டிய பிரம்மாண்டமான இவ்வேலையை
வெறும் மனிதர்களை இறக்கிவிட்டு செய்ய வைப்பது கொடூரம் இல்லையா! கைதி என்ற முறையில்
இவ்வேலையில் கட்டாயப்படுத்தப்படுபவர்களின் நிலை என்ன தெரியுமா? தண்ணீரில் தலையை முக்கி மூச்சு முட்டி கொலை செய்யப்படுவதைவிட
பலமடங்கு கொடூரமானது. சாதாரண விசாரணைக் கைதிகளையும் இப்பணியில் ஈடுபடுத்தியுள்ளார்கள்
என்பது மேலும் கோரமான உண்மை. இருபத்தியொரு வயது இளைஞரான ராசையன் என்ற கிறிஸ்தவ இளைஞரின்
மரணம் இதற்கு சாட்சி.
இவர் ஏசுசபையில் மிகத்தீவிரமாகப்
பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞர் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். நூறில் அறுபது
கைதிகளுக்கு திடீர் மரணம். ராசையன் இறந்த வாரத்தில் மட்டும் நாற்பத்தாறு பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இவர்களது தண்டணைக்கு காரணம் கடலில் முக்குளிக்கும் திறமையுடையவர்கள் என்பது மட்டுமே.
அதனால்தான் அவரது கடிதம் கோபமும் வேதனையும் நிறைந்த வார்த்தைகளை கவர்னரின் மூஞ்சியில்
துப்புகிறது. ‘கடலை அறிந்தவன் கர்த்தரை அறிந்தவனாக இருந்தாலும் உங்களுக்கு
கவலை இல்லை’(சு.வெங்கடேசன்: 2008,ப்க-630).
களவுக்குப் போனவர்கள் போலிசிடம் சிக்கிக் கொண்டால் தாதனூர்க்காரர்கள் உரிமையோடு தேடி வருவது
நகர செல்வந்தருள் ஒருவரான நேமிநாத செட்டியைத்தான். இவர் தாதனூர்க்காரர்களுக்கு உதவியாக
தகவலை அறிந்து சொல்லுவார். தாதனூர்க்காரர்களிடம் உண்மையான நேசம் கொண்டிருந்த இவரது
சமயம் சமணம். இம்மனிதர் மட்டுமே தாதனூர்க்காரர்களின் முழுநம்பிக்கையைப் பெற்றிருந்தார்.
வேறு எந்த சமயத்தைச் சேர்ந்தவர்களும் தாதனூரிடம் உண்மையானவர்களாக இல்லை. டேவிட் சாம்ராஜ் என்ற கிறிஸ்தவர் இருக்கிறார்
என்கறீர்களா?
அவரது இரத்தமும், சதையும், நாடி நரம்புகளும்
தாதனூர்காரர்களால் பின்னிப்பிணைந்திருப்பதை நினைத்துப் பாருங்கள். கழுவன் கூட்டத்தின்
பனைமரத்தான் வகையறாவான கழுவாயி என்ற பெண்ணுக்கும், சாத்தங்குடிக்காரனுக்கும் பிறந்தவர் டேவிட் சாம்ராஜ் என்பதை
மறந்து விட வேண்டாம். இவரது பெயர் பொன்னாங்கன். தாது பஞ்சத்தில் தாய் தகப்பனை இழந்து
கிறிஸ்தவ மிஷினரியால் எடுத்து வளர்க்கப்பட்டபோது டேவிட் சாம்ராஜ் என்று பெயர் மாறுகிறார்.
பசுமலை பள்ளியில் வேத பாடங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற போது போதகராக புகழ்பெறுகிறார்.
தாதனூர்க்காரர்களை ஒட்டுமொத்தமாக ஒடுக்குவதற்கு ஆங்கில ஏகாதிபத்திய அரசு தன்னைக் கருவியாக
பயன்படுத்திக் கொண்ட அயோக்கியத்தனத்தை நினைத்து ஆதங்கப்படுகிறார். பொன்னாங்கனுடைய இனத்தின்
பலம், பலவீனம் முழுவதையும் அடக்குமுறை அரசுக்குக் காட்டிக் கொடுத்து
விட்டேனே என்று தன்குற்றத்தை எண்ணியெண்ணி நொந்து கொள்கிறார். ‘கர்த்தரின் பெயரால் கருப்பனைக் காட்டிக் கெடுத்தேன்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-1024) என்று அவரது டைரிக் குறிப்பு தேம்பி அழுகிறது. டேவிட்சாம்ராஜாக
வேசமிட்டிருந்தாலும், வாயில் கர்த்தரைப் பேசினாலும் அவரது இதயத் துடிப்பு சடச்சி, கருப்பனையே இசைத்திருக்கிறது.
பாதியில் கிறிஸ்துவான பொன்னாங்கன்
என்ற டேவிட் சாம்ராஜ் இறுதியில் தாய் வழி சமயமான நாட்டுப்புறச் சமயத்திற்கே திரும்பி
விடுகிறார். இறப்பதற்கு முன் இவர் எழுதியிருக்கும் டைரிக்குறிப்புகள் பொன்னாங்கனையே
வெளிப்படுத்துகிறது. அதனால்தான் டைரியை வாசித்து முடித்த அவரது மனைவி ஆரோக்கியமேரி
தாதனூர்க்காரியாக வெளிப்படுகிறாள். தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து கிறிஸ்தவராக மாறிய
ஆரோக்கியமேரி கதறி அழுகிறாள். தாதனூர்க்காரி எவளோதான் கதறி அழுகிறாள் என்று சுற்றியிருந்த
வீடுகளில் நினைக்கிறார்கள். ஒரு நிறுவன சமயத்தில் இருப்பவரை இன்னொரு சமயத்திற்கு மாற்ற
முடியும். ஆனால் மூதாதையரை வழிபடும் மரபுடைய ஒருவரை மதமாற்றம் செய்ய முடியாது என்பது நாவலாசிரியரின் கருத்து.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின்
கிறிஸ்தவ சமய நிறுவனமான அமெரிக்க மிஷினரியில் செயல்படுகின்ற அருட்தந்தை ஜேம்ஸ் எழுதியுள்ள
கடிதங்கள் மற்றும் தாதனூர்க்காரரான பொன்னாங்கனும் ஆரோக்கியமேரியின் துணைவருமான டேவிட்சாம்ராஜின்
டைரிக்குறிப்புகள். இவை இரண்டும் நமக்கு உணர்த்துவது இதைத்தான்.
உழைப்பை உறிஞ்சும் அதிகார வர்க்கத்தினுடைய அரச மாளிகைக்கும், உலகைப் படைத்த உழைக்கும் மக்களுக்கும் கடவுளைப் பற்றிய நோக்கம்
ஒரே மாதிரி அல்ல. இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.
பக்தி உணர்வை வெளிப்படுத்துவது, பிரச்சனைகளைச் சொல்லி அழுவது, வாழ்க்கை இலட்சியங்களுக்குத் துணை செய்ய வேண்டுவது இவ்வளவுதான் நோக்கம், கடவுளை
வழிபடும் மக்களுக்கு. ஆனால், அரச மாளிகையின்
நோக்கம் என்ன தெரியுமா? தன் அதிகாரத்தைப் பாதுகாக்க கடவுளை ஆயுதமாகப் பயன்படுத்துவது.
எப்படி தெரியுமா? அதன் செயல்பாட்டைக் கவனியுங்கள். மக்களின் தெய்வங்களைச் சமய
நிறுவனங்களாக கட்டியிருக்கிறது. சமய நிறுவனங்களுள் தன் அதிகாரத்தைக் கொட்டியிருக்கிறது.
சமய நிறுவனங்களும் அரச மாளிகையின் ஒருவகைக் கோட்டைகளாகவே செயல்படுகின்றன. சமயங்களின்
வரலாறு இப்படித்தான் வளர்ந்திருக்கிறது.
எந்தச் சமயக்கடவுளை வழிபட்டாலும்
அந்தந்த சமய நிறுவனங்கள் மூலம் மக்களைத் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கிறது, அரச மாளிகை. சமயம் என்பது ஆயுதம். தங்கள் அதிகார நலனைப் பாதுகாத்துக்கொள்ள பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இதை உணராத மக்களின் கருத்து இப்படி இருக்கிறது. ‘சமயம் என்பது வெறும் பக்தியுணர்வை வெளிப்படுத்துகின்ற களம்’
இஸ்லாமியர்களின் ஈர உணர்வைச் சடச்சி விஷயத்தில் மட்டும் பதிவு
செய்திருக்கிறார். கருப்பனை வீழ்த்தும் இஸ்லாமிய வீரனும், மக்களைச் சூறையாடும் இஸ்லாமியப் படையும், இம்மிடி செட்டியின் இஸ்லாமிய எதிர்ப்பும், பெருமாள் முதலியின் கனவு வெளிப்பாடும் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பைத்
தூண்டுவதாகவே அமைந்துள்ளது. இது இன்றைய இந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஒருவகையில் வலிமை
சேர்க்கிறது. ஒரு மார்க்சிய படைப்பாளியின் இத்தகைய படைப்பு அதிர்ச்சியைத் தருகிறது.
ஒரு சில இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது, சமண சமயம். ஒப்பீட்டளவில் சமணத்திற்கு ஆதரவான ஆசிரியரின் குரல் மென்மையாக எதிரொலிக்கிறது.
No comments:
Post a Comment