Monday, June 8, 2026

கற்றதனால் ஆய பயன்

 கற்றதனால் ஆய பயன்

 முனைவர் புதியவன்

 

 அப்பாவிடம் எங்க அம்மா சொல்வாங்க. ஏங்க இவனுக்கு பரோட்டா கடைக்காரர் மகளைப் பார்த்து கட்டிக் கொடுக்கணும். மூணு நேரமும் புரோட்டாவா தின்பான்.

 விளையாட்டுக்குச் சொன்னாலும் நடந்தா நல்லாருக்குமே என்று ஆசைப்பட்டதுண்டு. அந்தச் சிறுவயதில் பெண்ணை விட புரோட்டாவை விரும்பி இருக்கிறேன்.

 

 சிறுவயதில் பெண்ணின் மீது விருப்பம் வருமா என்று நினைக்கிறீர்களா. நான் இரண்டாம் வகுப்பிலேயே மூன்றாம் வகுப்பு சுதாவை காதலித்தவன். நாலாம் வகுப்பில் ஜீவா. ஐந்தாம் வகுப்பில் சரண்யா, கீர்த்தனா, தீபிகா. காதலுக்கு வயது எட்டும்  முன்பே எல்லோரையும் காதல் செய்த பருவம்.

 

 நவகிரக தெய்வங்களின் சுற்றுச் சுவரில் திரிஎண்ணெயால் அந்தப் பெண்களின் பெயர்களையும் எழுதி இருக்கிறோம். அந்தக் குழந்தைகளெல்லாம் நான் குழந்தையாக இருந்தபோது பெண்களாகத்தான் தெரிந்தார்கள். அதாவது என் நண்பர்களுடன் சேர்ந்து எழுதி இருக்கிறோம். கடவுள் அருளால் யாருக்கு யார் கிடைப்பார்களோ. யார் கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளும் ஒப்பந்தத்துடன் நண்பர்களுடன் போட்டிப்போட்டு  காதலித்திருக்கிறோம்.

 

இன்று நினைத்துப்பார்த்தால் அசிங்கமாக உணர்கிறேன். எப்படி இப்படி கீழ்த்தரமான உணர்வுநிலைக்கு ஆட்பட்டேன். இதில் நான்காம் வகுப்பு காதல் கடிதத்தில் ஆபாச சொற்களை நிறைத்து எழுதியதை நினைத்துப் பார்க்கிறேன். இன்று நினைத்தால் என்மேல் எனக்கே அருவெறுப்பாய் இருக்கிறது. என் கடிதம் சிக்காததால் நான் தப்பித்தேன். என் நண்பர்கள் ஆசிரியரிடம் வாங்கிய இடிகளை இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது. ஆசிரியரின் மகளுக்கல்லவா எழுதியிருந்தார்கள். ஆனால், இயல்பாக ஆழ்மன விருப்பத்திலிருந்து எழுதப்பட்ட கடிதம். எப்படி ஆபாச வார்த்தைகளால் நிறைந்திருந்தன. ஆபாச ஊடகங்களைத்தான் சொல்ல வேண்டும்.

 

குழந்தைகளின் பிஞ்சு உள்ளத்தில் பெண்களை ஆபாசப் பொருட்களாக உணர வைத்தது யார் குற்றம்? ஆபாச உணர்ச்சிகளை சினிமாத்தனங்களில் இயல்பாகப் பரப்பியது யார் குற்றம்? சீரழிவான குற்ற நடத்தைகளை ஊடகங்களால் ஊடுருவி இயல்பாக விதைத்தது யார் குற்றம்? பலகோடி மனங்களில் ஆபாச உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் ஆழமாக விதைத்துச் செல்லும் பொது ஊடகங்களைக் கண்டிக்காதது யார் குற்றம்? மக்களின் ஆழ்மன விதைப்புகளுக்கு ஆட்படும் எல்லா உணர்ச்சிகளும் கருத்துகளும் இயல்பான செயல்களாகவே விளைகின்றன. நல்லுலகக் கனவுகளை விதைத்திருந்தால் பிஞ்சு விரல்களால் நல்லுலகையே செதுக்கத் தொடங்கியிருப்போம். பிஞ்சு உள்ளங்களில் நச்சு விளைச்சல்களுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாவது. சமூகத்தில் வேர் பிடித்துள்ள எல்லா ஒழுங்கீனமும் பிஞ்சுகளிடமிருந்தே வெளிப்படத் தொடங்குகின்றன.

 

 சினிமா படக்காட்சியில் உருகும் நாயகனைப்போல அன்று எனக்கும் காதல் பித்து ஏராளம். எனக்கு நினைவு சரியென்றால் இரண்டாம் வகுப்பில் இருந்தே காதல் பித்து வந்துவிட்டது. ஆனால் புரோட்டா பித்து எப்போது வந்தது? என் நினைவுக்கு எட்டாத காலம் தொட்டு வந்திருக்கிறது. 

 

என் பெரியப்பா சித்த வைத்தியர். புரோட்டா சாப்பிட்டால் மலக்குழாய் பாதிக்கப்படும். புரோட்டா சாப்பிட்டால் பலவிதமான நோய்களுக்கு ஆளாக நேரும். எங்க அப்பாவுக்குப் பலவிதமாக வகுப்பெடுப்பார். எப்போதாவது சாப்பிட வேண்டிய நிர்பந்தம் இருந்தால் இரண்டு மடங்கு சால்னா குழம்பில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்று பரிகாரமும் சொல்லியிருக்கிறார்.

 

என் அப்பாதான் புரோட்டா பிரியராயிற்றே. பரிகாரத்தைப் பற்றிக்கொண்டே அடிக்கடி சாப்பிடுவார். நான் அவருக்குப் போட்டியாக வளர்ந்த பிறகு செலவைக் கட்டுப்படுத்த புரோட்டாவைக் குறைத்துக் கொண்டார். மற்றபடி தவறு என்பதற்காக அல்ல. ஏனெனில் பெரியப்பா கூறும் அறிவுரை எங்கள் அறிவு நிலையிலேயே தேங்கிவிடும். ஆழ்மனதில் பற்றிக்கொள்ளப்படாத எந்த அறிவும் செயலாக விளைவதில்லையே.

 

அப்பா வாங்கி வரும் புரோட்டாவிற்காக வாசல் கதவில் காத்திருப்பேன். புரோட்டா சாப்பிடும் கனவுடனேயே படிக்கட்டில் தூங்கி இருப்பேன். காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் அழுவேன். நேற்று புரோட்டா வாங்கித் தருவதாக ஏமாற்றி விட்டீர்கள் என்பது என்பாடு. அம்மா சிரித்துக் கொண்டே சொல்வார். நீ தூங்கிட்டே. எழுப்பி ஊட்டி விட்டேனே. தூங்கிக்கிட்டே அம்புட்டையும் முழுங்கிட்டே! 

 

எனக்கு பேரதிர்ச்சி ஆகிவிடும். எவ்வளவு எட்டினாலும் புரோட்டா சாப்பிட்ட நினைவு எட்டவே எட்டாது. தூக்கத்தில் ஊட்டிவிட்டு என்னை ஏமாற்றி விட்டீர்கள். எனக்கு சாப்பிட்டதே தெரியவில்லை. இன்னைக்கு புரோட்டா வேணும். வூம்.. ம்.. என்று அழுவேன். அதெல்லாம் கிடையாது. மாசம் ரெண்டாவது தடவை சாப்பிட்டாச்சு. இனி அடுத்த மாசம் வாங்கி தருவேன். அடிக்கடி புரோட்டா வாங்க காசு மரத்துலயா காய்க்குது என்று திட்டி வீசுவார் அம்மா. 

 

 அம்மா கணக்குப்படி மாசம் ரெண்டுதடவதான் புரோட்டா செலவு. அப்பா வாங்க அம்மா ஊட்டி விடுவார். சாமி உண்டியலில் குறைந்தது மூன்று தடவையாவது அஞ்சு ரூபா திருடிடுவேன். பக்தியோடு மன்னிப்பு கேட்டு திருடுவதால் சாமியும் கோபிப்பதில்லை. மாதம் அஞ்சு தடவையாவது புரோட்டா சாப்பிடலனா மனசு தாங்காது.

 

 ஒருமுறை அப்பா புரோட்டா கடைக்கு அழைத்துச் சென்றார். அவரிடம் காசு இல்லாததால் எனக்கு மட்டும்தான் புரோட்டா. உதயம் ஹோட்டலில் வாழை இலையில் புரோட்டா. ஆறாத சூடுடன் பஞ்சு போல் குவிந்து இருந்தது. கொழுப்பு மிதக்கும் சால்னாவை ஊற்றி பிரட்டினேன். அருகில் குளிர்ச்சியான தயிர் வெங்காயம்.   

 

முதலாளியின் வீட்டுக்கு புரோட்டா வாங்குவதற்காக ஒரு சிறுவன் நிற்கிறான். என் வயது இருக்கலாம். அவன் பார்வை என் இலையின் மீது ஏக்கத்துடன் மிதந்தது. அவன் எச்சில் ஊற சப்புக்கொட்டிக் கொண்டிருந்தான். எனக்கு பாவமாக தெரிந்தது. நான் அவனது உணர்ச்சிகளைக் கடந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். சரியாகச் சொல்வதென்றால் அவனுக்கும் சேர்த்தே சாப்பிடத் தொடங்கினேன்.

 

 என் அப்பாவிற்கும் புரோட்டா பிடிக்கும்தானே. சுவையை எனக்காகச் சிறைபடுத்தியிருந்தார். ஆனால், அந்தச் சிறுவனைப் பார்க்க வைத்து புரோட்டாவை விலாசினேனே. என்னை எப்படி பொறுத்திருப்பார்? என்னை அவரால் ஒப்புக் கொள்ளவே முடியவில்லை.

 

 டேய்! அந்த தம்பி பார்க்கிறான் பாரு. அவனையும் சாப்பிடச் சொல்லு என்றார். நானும் என் குற்றத்தை உணர்ந்தேன். அவனிடம் வா சாப்பிடலாம் என்றேன். அவன் வேண்டாம் என்று வார்த்தையை உதிர்த்தான். ஆனால் மனதையும் சுவையையும் என் இலையின் மீதே வைத்திருந்தான்.

 

 என் அப்பா அவனை மடியில் அமர்த்தினார். ரெண்டு புரோட்டா தாங்கண்ணே. புரோட்டாவும் வந்தது. ஒரு வாய் ஊட்டி விட்டார். மறுவாய் அவனே எடுத்துச் சாப்பிடத் தொடங்கியிருந்தான். அப்பா அவனுக்கும் சேர்த்து கடைக்காரரிடம் 12 ரூபாய் காசு கொடுத்தார். நாங்கள் வேலையை முடித்து வெளியே வந்திருந்தோம்.

 

 பகிர்ந்து சாப்பிடுவதுதான் உயர்ந்த அறிவுடா தம்பி என்றார் அப்பா.

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை” என்ற திருக்குறளைப் பாட்டாகவும் பாடினார். இன்று நம் பிள்ளைகளுக்குப் பகிர்ந்து உண்ணும் வாழ்க்கை இருக்கிறதா?

 

 யாருக்கும் கொடுக்காமல் பார்க்க வைத்து சாப்பிடுகிறார்கள்.

ஒளித்துவைத்தும் மறைத்துவைத்தும் சாப்பிடுகிறார்கள்.

சமூக அக்கறையின் மரணமும்.. சுயநல வெறியின் பிரசவமும்..

இங்கிருந்துதான் தொடங்குகிறது. 

நாளை இந்த வித்தைகளைப் பெற்றோர்களிடமே காட்டத் தொடங்குவார்கள்.

தட்டைத் திருப்பிப்போட்டுத் தட்டுகின்ற வலியைத் தாங்கமுடியாத வேதனையைப் பெற்றோர்கள் உணர்வார்கள்...

பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகின்ற சுயநல வெறி வாழ்க்கையின் விளைவு மிகவும் அநாகரிகமானது.

பெற்றோர்கள் முதியோர் இல்லத்திற்கு தூக்கி வீசப்படுவார்கள்.

குற்ற உணர்ச்சி துளியும் இன்றி குழந்தைகள் இதைச் செய்வார்கள்.

தம் நுகர்வு போதை வெறிக்காக எத்தகைய படுகொலைகளையும் துணிச்சலாக செய்வார்கள். 

தலைமுறைகள் தலை எடுக்கத் தொடங்கினால் உலகம் தப்பாது.

விபரீதம் உணர்ந்து குழந்தைகளை மனிதர்களாக உயர்த்தப் பழகுங்கள்.

குழந்தைகள் பெற்றோர்களின் சொத்துக்கள் அல்ல.

பழமையை உரமாக்கிக் கொண்டு புதுமையை எட்டும் மனிதகுலத்தின் தொடர்ச்சி. பெற்றோர்களின் வழியாக வெளிப்படும் மனிதகுலத்தின் புதுமைகள்.

நாளைய நல்லுலகக் கனவுகளைச் சுமந்திருக்கும் பேரழகுப் பருவங்கள்.

நல்ல வளர்ப்புமுறை குழந்தைகளை நல்லுலகச் சிற்பிகளாகப் பிரசவித்து காட்டும்.

 

நல்லுலகச் சிற்பிகளால்தான் தாய்மை உணர்ச்சிகளோடு மனித குலத்தையும், 

குழந்தை பாசத்தோடு பெற்றோர்களையும்  பராமரித்து பாதுகாக்க முடியும். மாறாக,  குழந்தைகளைத் தன் சொத்துக்களைப்போலவோ அடிமைகளைப்போலவோ வளர்த்தால் விளைவு விபரீதந்தான்.

இருக்கும் வரை சொத்தா! செத்த பிறகு சொத்தா! என்று கணக்கு போட்டு நாள் குறித்து பெற்றோர்களுக்குக் கொள்ளி வைப்பார்கள். 

சமூகக் குற்றங்களைத் துணிச்சலாக மேற்கொள்வார்கள்.

நாம் இறந்த பிறகும் நம் குழந்தைகளின் நினைவுகளாக வாழ விரும்புவோம் அல்லவா! ஆனால், அவர்களது கேடுகளால் பின்னப்பட்ட உலக நிலைமைகளுக்கும், பொறுப்பற்ற துரோகங்களுக்கும், சமூகக் குற்றங்களுக்கும் நம்மைக் காரணங்களாக்கி நினைவுலகத்திலும் நிம்மதியற்ற  துயரங்களில் நம்மை ஆழ்த்தி விடுவார்கள்.

மீளமுடியாத குற்ற நெருப்பில் நாம் வேகாத கட்டைகளாக முனங்கிக்கொண்டே காலமும் கிடக்க வேண்டியதுதான்.

 

 எனவே குழந்தைகளை சொத்துகளாக வளர்க்காமல் நல்ல மனிதர்களாக உயர்த்த பாடுபடுங்கள்.

 

 நல்ல மனிதர்களாக உயர்கின்ற குழந்தைகளின் அளவுகோல்கள் ஐந்து.

1. நல்லுலகக் கனவு 

2. பன்முகத் திறமைகள் 

3. இலக்கியப் பண்பாடு 

4. முன்மாதிரிகள் பத்து

5. முன்மாதிரியாகத் திகழ்தல்

 

 1.நல்லுலகக்கனவு 

 நம் குழந்தைகள் சமூக மேன்மையின் தேவைகளை ஆழ்மனக்கனவுகளில் உணர்ந்திருக்க உதவ வேண்டும். சாதி வெறியற்ற உலகம், மதவெறியற்ற உலகம், பாலின ஒடுக்குமுறையற்ற உலகம், லாப வெறியற்ற உலகம், ஆதிக்க வெறியற்ற உலகம், போர் வெறியற்ற உலகம், போதை வெறியற்ற உலகம், மகிழ்ச்சியும் ஒழுக்கமும் நிம்மதியும் ஒற்றுமையும் நிறைந்த பேரழகான ஓர் நல்லுலகம்...

இப்படியாக வருங்கால உலகம் பற்றிய பண்பட்டக் கனவுகளை நம் குழந்தைகளின் ஆழ்மனக் கற்பனைகள்  பற்றிக் கொள்வதற்கு உதவ வேண்டும்.

 

2.பன்முகத் திறமைகள் 

 குழந்தைகள் தங்களது தனித்துவங்களையும் பன்முகத் திறமைகளையும் உணர்ந்து செயல்பட உதவ வேண்டும். அவர்களது செயல் திறன்களை அதிகரித்து செயல் தகுதியாக அரவணைக்கும் வாய்ப்புகளை  நாம் வழங்க வேண்டும்.

 

*மொழித்திறன் சார்ந்த திறமைகள் 

*கலைத்திறன் சார்ந்த திறமைகள் 

*அறிவியல் திறன் சார்ந்த திறமைகள்

* உடல் திறன் சார்ந்த திறமைகள்

* மனித உறவுகளின் அணுகுமுறை சார்ந்த திறமைகள்  

* முடிவெடுக்கும் திறமைகள்

* நெறிப்படுத்தும் திறமைகள்

* தலைமைப்பண்பின் திறமைகள் 

* போராட்டத் திறமைகள் 

* எதிர்கொள்ளும் திறமைகள்....

 இப்படியாக பன்முகத்திறமைகளில் சமூகமதிப்பும் தன்னம்பிக்கையும் பெற்றுயர்வதற்கு உதவ வேண்டும்.

 

3.இலக்கியப் பண்பாடு 

 நம் குழந்தைகளை இலக்கியப் பண்பாடு உடையவர்களாக உருவாக்க வேண்டும் . வாசிப்பு தியானம்... எழுத்து தியானம்... செவி தியானம்...  போன்ற தியான பயிற்சிகளின் வழியாக இலக்கியப் பண்பாட்டை அடையச் செய்ய வேண்டும். 

 இலக்கியங்கள் தான் ஒரு சமூகத்தையும் அதன் மனிதர்களையும் பண்படுத்துகின்றன. பண்பட்ட மொழியில் இலக்குகளை வெளிப்படுத்துவதும், இலக்குகளை பண்பட்ட முறையில் முன்னேறி அடைவதும் இலக்கியவழி செயல்பாடுகள் ஆகும். எனவே, நம் குழந்தைகள் நல்ல மனிதர்களாக பண்படுவதற்கு இலக்கியப்  பண்பாட்டில் ஈடுபடுத்த வேண்டியது அவசியம். சமூகம் தேவைகளை உணர்ந்து கலை இலக்கியங்களையும் அறிவியல் இலக்கியங்களையும் தியானித்துப் படித்துச் செயலாற்றுவதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். தன் வாழ்வை நெறிப்படுத்துகின்ற இலக்கியங்களாக குறைந்தது பத்து இலக்கியங்களையாவது நம் குழந்தைகள் பின்பற்ற வேண்டும்.

 

 

4.முன்மாதிரிகள் பத்து

நம் குழந்தைகள் செயல் தகுதி உடைய சமூக ஆளுமைகளாக புகழ் பெறுவது அவசியம். எனவே, தன் நிலையிலும் சமூகத் தேவைகளிலும் இலக்குகளுடைய மனிதராக செயல்படுகின்ற இயல்பைப் பெற்றிருக்க வேண்டும். இலக்குகள் நிறைந்த நம் குழந்தைகளின் ஆளுமை பண்பிற்கு முன்மாதிரிகள் அவசியம். எனவே, நம் குழந்தைகள் தங்களது முன்மாதிரிகளாகக் குறைந்தது பத்து மனிதர்களையாவது கண்டடைந்திருக்க வேண்டும். அவர்களை ஆழ்மனதில் பாடங்களாகப்  பற்றிக்கொண்டு சமூகச் செயல்பாடுகளில் முன்னேற வேண்டும். உள்ளூர் மனிதர்கள் முதல் உலகப்புகழ் பெற்றவர்கள்வரை முன்மாதிரிகளாக இடம் பெற்றிருக்கும்படி நெறிபடுத்த வேண்டும். அப்பா, அக்கா போன்ற இரத்த உறவு முன்மாதிரிகள் பத்தில் இருவராக இருக்கலாம். ஆனால், பரந்த உலக மனப்பான்மையில் இரத்த உறவு கடந்த  முன்மாதிரிகளைக் கண்டடையும் வகையில் நாம் நெறிப்படுத்த வேண்டும்.

 

5.முன்மாதிரியாகத் திகழ்தல்

 நம் குழந்தைகள் தங்களது ஆற்றலும் பேரன்பும் நிறைந்த செயல்களால் புகழ் பெற்றிருக்க வேண்டும். சமூகத் தேவையில் தவிர்க்க முடியாதவர்களாகத் தங்களை நிரூபித்து வாழ வேண்டும். அதற்காகக் குறைந்த பட்சம் பத்து மனிதர்களுக்காவது தங்களை முன்மாதிரிகளாக நிரூபித்திருக்க வேண்டும். தங்களை முன்மாதிரிகளாகக் கருதக்கூடிய பத்து நபர்களையாவது கண்டறிந்து செயல்பட வேண்டும். அவர்களுக்கும் மனிதகுலம் முழுமைக்கும் மேன்மையான செயல்வீரர்களாக வாழ்வதுதான் நல்ல மனிதர்களுக்கு அழகு. 

நம் குழந்தைகள் பேரழகானவர்கள். நாளையத் தலைமுறைகளுக்கும் முன்மாதிரிகளாகத் திகழ்வார்கள்.

காலமும் தலைமுறைகளும் கடந்து இசைக்கும் மனிதகுலத்தின் இசைத்தூண்களாக நீடித்திருப்பார்கள்.

காலத்தின் நீண்ட சுழற்சியில் மனிதகுலத்தின் அறுபடாத தொடர்ச்சியை இயற்கை இசைத்துக்கொண்டே இருக்கும்.

 

 இந்த ஐந்து நிலைகளும் நல்ல மனிதர்களாக உயர்கின்ற குழந்தைகளின் அளவுகோல்கள் மட்டுமல்ல. நல்லுலகத்தை எட்டிப்பிடிக்கும் மனித விருப்பங்களின் அளவுகோல். இயற்கை அழைத்துக் கொள்ளும்வரை ஆகச் சிறந்த மனிதராக வாழ்ந்து முடிவதற்கான அளவுகோல். 

 

 வாழ்க்கை என்பது ஆகச் சிறந்த கல்வி. தன் வாழ்க்கை நெறிகளைப் பின்தொடரும் தலைமுறைகளை உருவாக்காவிட்டால் வாழ்ந்ததில் ஒரு பயனும் இல்லை என்கிறது இரண்டாம் திருக்குறள்.

 கற்றதனால் ஆய பயனென்கொள் வாலறிலன் 

 நற்றாள் தொழாஅர் எனின்

வாழ்ந்ததினால் ஆக வேண்டிய பயன் எதுவென்றால் தம் வாழ்வின் முடிவை அறிந்து, அங்கிருந்து போற்றித் தொடர்கின்ற தலைமுறைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பதாகக் குறள் அர்த்தப்படுகின்றது.

 

 சுயநல வெறியின் அறிவு 

 தன் கொள்ளியைத் தானே ஏற்றும்...

 

 சமூக அக்கறையின் அறிவு

 நல்லுலகக் கூட்டில் தன்னுயிரையும் கூட்டிச் சேர்க்கும்!

 

நம் குழந்தைகளுக்கு நல்லுலகக் கனவைத் தாய்ப்பாலுடன் ஊட்டுங்கள்...

நம் தலைமுறைகளுக்குக் காலத்தை உணர்த்துங்கள்...

நேற்றைய மரணங்களைக் கடந்து இன்றைய மனிதகுலம் நாளையும் சுழலும்... மகிழ்ச்சியின் சுழற்சியில் இசைபாடும்!

மனிதகுலக்  கனவுகள் நனவுலகில் நடனமிடுவதைக் காலம் பார்க்கத்தான் போகிறது!

 

 

 

Thursday, June 4, 2026

தத்துவ அறிவியல்

 

தத்துவ அறிவியல்

 

 முனைவர் பட்டம் என்பதே கல்வியில் மிக உயர்ந்த பட்டமாக திகழ்கிறது. எந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சி கல்வியில் ஈடுபட்டாலும் தத்துவத்தின் மாமேதை என்றுதான் முனைவர் பட்டம் வழங்குகிறார்கள். Ph. D - Doctor of Philosophy என்பது ஆங்கில விளக்கம். 

 

 எந்தப் பல்கலைக்கழகமாவது ஆய்வாளர்களுக்கு பாடத்திட்டத்தில் தத்துவத்தை ஒரு பாடமாக இடம்பெறச் செய்துள்ளதா?

 

 பல பேராசிரியர்களிடம் விசாரித்துள்ளேன். எவருக்கும் அப்படி ஒரு பாடம் இருந்ததாகத் தெரியவில்லை. M. Phil முடித்து வந்ததால் எங்களுக்குத் தத்துவம் பாடமாக அமையவில்லை என்கிறார் ஒரு கணிதப் பேராசிரியர். அவர் புன்னகையிலும் குழப்பத்திலும் இந்தக் கேள்விகள் எழுந்திருக்க வேண்டும். Master of Maths அதாவது கணிதத்தில் மாமேதை என்று ஏன் பட்டம் வழங்கவில்லை. எதற்காக தத்துவத்தின் மாமேதை Ph. D - Doctor of Philosophy என்று பட்டம் வழங்குகிறார்கள். 

 

 வணிகவியல் துறைத்தலைவர் உறுதியாகச் சொல்கிறார். எங்களுக்குக் கருதுகோள்தான் தேவைப்படும் ஐயா. தத்துவம் தேவைப்படாது. புள்ளி விவரங்கள், தரவு பாகுபாடுகள் இவைகள்தான் எங்களுக்கு அடிப்படை என்கிறார். அதனால் தத்துவம் என்ற பாடம் எங்களுக்குக் கிடையாது என்கிறார். 

மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பதைப்போல பேசுகிறார்.  இந்த ஆளுமைக்கு ஏன் Doctor of Commerce வணிகவியலின் மாமேதை என்று பட்டமளிக்கவில்லை. எதற்காக தத்துவத்தின் மாமேதை Ph. D - Doctor of Philosophy என்று பட்டம் வாங்கிக்கொண்டார். தத்துவம் குறித்த அடிப்படையே இல்லாமல் நம் நாட்டில் முனைவர் பட்டங்கள் நிகழ்கின்றன என்பதுதான் இதன் பொருள்.

 

 மொழி, கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல் என்பதாக எல்லா துறைகளிலும் உயர்மட்ட ஆராய்ச்சிக் கல்வியின் சான்றிதழ்கள் Ph. D - Doctor of Philosophy தத்துவத்தின் மாமேதை என்பதாகத்தான் வழங்கப்படுகின்றன. ஆனால் கல்விச்சூழல் ஆராய்ச்சிகளில் தத்துவம் ஒரு பாடத்திட்டமாக இடம் பெற்றுள்ளதா?

 

 ஆராய்ச்சியின்  வகைகள், நோக்கம், தரவு சேகரிக்கும் முறைகள், புள்ளிவிவர முறைகள், கணினி மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுகள், ஆய்வு அறிக்கை எழுதும் முறைகள், ஆய்வு மேற்கொள்ளப்படும் துறை சார்ந்த பாட முறைகள் ஆகியன எல்லாம் இடம்பெறும். ஆனால், தத்துவம் ஒரு பாடத்திட்டமாக உள்ளதா? இல்லையெனில் எதற்காக பாடத்தின் பெயரில் முனைவர் பட்டத்தை வழங்காமல் தத்துவத்தின் பெயரில் வழங்குகிறார்கள். தத்துவம் என்பதுதான் என்ன?

 

 தத்துவம் என்பது சமஸ்கிருத சொல். இருநிலை கண்ணோட்டங்கள் உள்ளடங்கியதாகத் தமிழில் பொருள்படுகின்றது.

 

புறநிலை உண்மைகளின் இருத்தல் பற்றிய நம்பிக்கைகளைக் குறிக்க தமிழில் பல சொற்கள் உள்ளன.  அஞ்ஞானம், பொய்யறிவு, அகநிலை வாதம், இயங்காவியல் கருத்து முதல் வாதம் போன்றன அத்தகையத் தமிழ்ச்சொற்கள். தத்துவம் என்ற சொல் மேல் கண்ட தமிழ்ச் சொற்களுக்கு இணையாகப் பயன்படுத்தப்படுவது முதல் நிலை.

 

புறநிலை உண்மைகளின் இருத்தல் பற்றிய கருத்துக்களைக் குறிக்க தமிழில் பல சொற்கள் உள்ளன. மெய்ஞானம், மெய்யறிவு, மெய்ப்பொருள், மெய்யியல், புறநிலைவாதம், இயங்கியல் பொருள் முதல் வாதம் போன்றன அத்தகையத் தமிழ்ச்சொற்கள். தத்துவம் என்ற சொல் மேல்கண்ட தமிழ்ச் சொற்களுக்கும் இணையாகப் பயன்படுத்தப்படுவது இரண்டாம் நிலை.

 

இரு நிலைகளும் உள்ளடங்கியதாகத் தத்துவம் திகழ்கிறது. இதன் அடிப்படையில் உலகளாவியத் தத்துவங்களை இரு வகைப்படுத்தலாம்.

1. ஆன்மீகத் தத்துவம்

2. அறிவியல் தத்துவம் 

 

மனிதர்கள் தங்களுக்கு வெளியில் இயங்குகின்ற பொருள்களை இயற்கை, மனிதர்கள், சமூகம், சிந்தனை ஆகிய நான்கு வகைகளுக்குள் விளங்கிக்கொள்ள முடிகின்றது. இந்த நான்கிற்கும் பொதுவான விதிகளைப் பற்றிய அறிவே தத்துவம் என்று பொருள்படுகின்றது. ஆன்மீகத் தத்துவம் என்பது அஞ்ஞானங்களின் அஞ்ஞானமாக அமைகின்றது. அறிவியல் தத்துவம் என்பது விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாக அமைகின்றது.

 

ஆன்மீகத் தத்துவம் என்பது  வெளியில் இயங்குகின்ற உண்மைகள் குறித்து மனித உணர்வுகளால் எழுப்பப்படுகின்ற கற்பனைகள். மாறாத உண்மைகளாக நம்பிக்கையில் ஆழ்த்துகின்ற கண்ணோட்டமாக அமைகின்றது.

இந்த உலகையும் பொருளையும் வெறும் மாயை என்கிறது. ஆன்மா, கடவுள் போன்ற நம்பிக்கைகளை உண்மை என்கிறது. உலகப்பொருள்கள் கடவுளிம் படைப்பு என்கிறது. இயக்கமும் மாற்றமும் உண்மையல்ல. இயக்கமற்ற நிலைத்த தன்மையே உண்மை என்கிறது. பொருளற்ற கருத்தே பொருள்களைப் படைத்து இயக்குகின்ற முதற்பொருள் பரம்பொருள் என்கிறது. உலகின் எல்லா மாற்றங்களும் கடவுளால் ஆதிமுதலாக தீர்மானிக்கப்பட்ட  மாற்றங்களே. உலக மாற்றங்கள் அனைத்தும் மாயை. ஆனால், மாற்றங்களைத் தீர்மானித்துள்ள கடவுள் நிலையானவர். இத்தகைய நம்பிக்கைகளைச் சாரமாகக் கொண்டே ஆன்மீகத் தத்துவம் அமைகின்றது.

 

நாட்டு மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டிய ஜனநாயகக் கடமைக்கு கல்விநிறுவனங்கள் பொறுப்பு. எனவே, ஆன்மீகத் தத்துவங்கள் குறித்த பயிற்சி அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்விவரை அவசியமற்றதாகின்றது. ஆனால், அறிவியல் தத்துவப் பயிற்சி இன்றியமையாததாகின்றது.

 

அறிவியல் தத்துவம் என்பது வெளியில் இயங்குகின்ற உண்மைகள் குறித்து மனித அறிவில் எழுகின்ற கருத்துக்கள்.  முரண்பாடுகளைக் கடந்து செயல்பாடுகளில் பொருந்துகின்ற கண்ணோட்டமாக அமைகின்றது.

அறிவியல் தத்துவம் என்பது பிரபஞ்சம் முழுமையையும் பொருட்களின் இயக்கங்களாக அறிந்துகொள்ளுதலாகும். எல்லாக் கருத்துக்களுக்கும் முதன்மையாகப் பொருள் சார்ந்த வாழ்க்கை இருப்பதாக அறிந்து கொள்ளுதல் ஆகும். எல்லாவற்றையும் மாற்றங்களுக்கு இடைப்பட்டதாக அறிந்துகொள்ளுதல் ஆகும். எல்லாக் கருத்துக்களையும் சமூக வாழ்வியல் காரணங்களுக்கு உரியதாக அறிந்துகொள்ளுதல் ஆகும். அனைத்து அறிவும் செயல்களுக்கு உரிமையானதாக அறிந்துகொள்ளுதல் ஆகும்.

1.இயங்குதலின் நான்கு தன்மைகளை உணர்தல்,

2.பொருளையும் கருத்தையும் உணர்தல்,

3.வரலாற்றை உணர்தல்,

4.பொதுத்தன்மையையும் தனித்தன்மையையும் உணர்தல், 5.நடைமுறையையும் தத்துவத்தையும் உணர்தல்

இவை ஐந்தும் அறிவியல் தத்துவத்தின் அடிப்படை விதிகளாகும். (சிவக்குமார்,கே.2016:7)

 

தத்துவ வரலாற்றின் தொடக்கம் என்பது மனிதகுலத்தின் தொடக்கம். மேற்கண்ட இரண்டு தத்துவங்களில் காலத்தால் முந்தையது அறிவியல் தத்துவமாகும். ஏனெனில், தத்துவக் கண்ணோட்டம் என்பது ஆறாம் அறிவு சார்ந்தது. மனிதர்கள் அல்லாத உயிரினங்களுக்கு ஆறாம் அறிவு கிடையாது. அறிவியல் தமிழின் தொல்காப்பியர் கூற்றுப்படி ஆறாவது அறிவு என்பது மனதால் நடக்கக்கூடிய மனித அறிவாகும்.

 

மனித அறிவு என்றாலே அது ஆறாவது அறிவுதான். அல்லது ஆறாவது அறிவு என்றாலே அது மனித அறிவுதான். பிரபஞ்ச வரலாற்றிலேயே திட்டமிட்ட மாற்றம் என்பது மனிதர்களின் செயல்பாடுகள்தான்.  ஒன்றுகூடி சிந்தித்து திட்டமிட்ட உழைப்பில் ஈடுபடுவதே மனித செயல்பாடுகளாகும்.

 

மனிதரல்லாத உயிரினங்கள் நிகழ்த்துகின்ற மாற்றங்கள் இயல்பூக்கத்தின் விளைவுகளாகும். இயல்பூக்க மாற்றங்கள் அனைத்தும் இயற்கையின் சூழல்களுக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொள்கின்ற விதிமுறைகளை மீறாதவையாகும். உயிரின வரலாற்றில் மனிதர்கள் நிகழ்த்துகின்ற மாற்றங்கள் செயலூக்கத்தின் விளைவுகளாகும். செயலூக்க மாற்றங்கள் அனைத்தும் இயற்கையின் அங்கமாகிய மனிதர்கள் தங்களது வாழ்வியல்  சூழல்களின் தேவைகளுக்காகப் போராடி இயற்கை சூழல்களையே மாற்றியமைக்கின்ற விதிமுறையை மேற்கொள்வதாகும். அதனால்தான் வரலாற்று அறிவியல் உயிரினங்களுக்கு எச்சங்களையும் மனிதர்களுக்கு செயல்பாட்டுக் கருவிகளையும் ஆதாரங்களாக்குகின்றன.

 

மனித வரலாற்றில் காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்திலும், வேட்டை நாகரிகத்திலும் மனிதர்களின் அடிப்படை கண்ணோட்டம் அறிவியல் தத்துவக் கண்ணோட்டமாகவே அமைந்திருந்தன. இயற்கையின் அங்கமாகவே தங்களை உணர்ந்திருந்த தாய்தலைமை சமூகத்து மனிதர்கள் இயற்கையின் இயங்கியல் உண்மைகளை உணர்ந்து சேகரிப்புக் கருவிகளையும் வேட்டைக் கருவிகளையும் கண்டடைந்தார்கள். இயற்கை பொருள்கள் குறித்து அறிந்துகொண்ட கூட்டுச் சமுதாய அறிவிலிருந்துதான் இயற்கை பொருள்களைக் கருவிகளாகக் கண்டடைந்தார்கள். மேலும், புதியக் கருவிகளைக் கண்டுபிடித்து முன்னேறினார்கள்.

 

கருவிகளோடு முன்னேறிய ஆதிமனிதர்களின் இயற்கை கண்ணோட்டம் அறிவியல் தத்துவம் சார்ந்ததாக அமைந்திருந்தது. மனித கற்பனைகளைக் கடந்து எழுந்த அறிவியல் உண்மைகளின் கருத்தாக்கங்களே கருவிகளுக்கு அடித்தளம்.

அறியப்பட்ட ஒவ்வொரு உண்மையும் அறியப்படாத உண்மைகளின் மீது கற்பனைப் பெருங்கடலாக மேலெழுந்தன. அறியாமைப் பேரலைகளின் கற்பனைகளே ஆன்மீகத் தத்துவத்தின் நம்பிக்கைகளாக அடித்தளமிட்டன.

 

அறிவியல் தத்துவம் என்பது மனித வரலாற்றில் சமூகபொருளுற்பத்தி சார்ந்த நடைமுறை கண்ணோட்டமாகத் திகழ்கிறது.

ஆன்மீகத் தத்துவம் என்பது மனித பண்பாட்டு உறவுகளின் நம்பிக்கைகளாகத் திகழ்கிறது. அறியாமை பெருங்கடலை கோப்பைக்குள் அடைக்கின்ற ஆற்றலாக அறிவியல் தொழில்நுட்பத்தின் சமகால வளர்ச்சி கட்டமைந்துள்ளது. அறிவியல்  தத்துவக் கண்ணோட்டத்தின் நடைமுறையை சமூகப் பொருளுற்பத்தியிலிருந்து வாழ்வியல் பண்பாட்டு உறவுகள்வரை நடைமுறையாக்குவதே சமூகவிஞ்ஞானச்  செயல்பாடுகளின் சவாலாக அமைந்திருக்கின்றது. இத்தகைய சவால்களின் கரம் பற்றியே கல்விக்கூடச் செயல்பாடுகளும் கட்டமைய வேண்டும்.

 

எல்லாத்துறைகளுக்கும் பொதுவான அறிவியல் தத்துவ விதிகளில் தெளிவுபெற்றுள்ளதன் விளைவாக எந்த ஒரு குறிப்பிட்டத் துறையினரும் தன் புலமையில் செம்மையாக ஆய்வில் ஈடுபட்டு புதிய உண்மைகளைக் கண்டடைந்து சமர்பிக்கிறார் என்பதாக அறிவிக்கப்படுகின்றது. அதனால்தான் எல்லாத் துறை சார்ந்த ஆய்வுகளுக்கும் அறிவியல் தத்துவப் புலமையே அடிப்படையாகிறது. எனவே, எந்தத்துறை சார்ந்த ஆய்வாளராக இருப்பினும் அவர்  தத்துவத்தின் மாமேதையாக அறிவிக்கப்படுகிறார் (Ph.D - Doctor of Philosophy ). இந்த அறிவிப்பு வெறும் சடங்காக அல்லாமல் அறிவியல் மனப்பான்மையின் ஜனநாயகக் கடமையை சாதிக்கின்ற கல்விக்கோட்டைகளின் சாதனைகளாக நிரூபிக்கப்பட வேண்டும்.

துணைசெய்தவை

1.இலக்கிய அறிவியல் 

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5444:2019-10-24-12-39-00&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82

2. அறிவியல் தத்துவப் பார்வையில் ஔவைக்குறள்

https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/47523-2024-12-02-04-05-34

3.   தேவிபிரசாத்சட்டோபாத்யாயா (தமிழில் எஸ்.தோதாத்ரி). 2010. உலகாயதம். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

4.   ஸ்டாலின்,ஜே.வி.2013. இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்று பொருள்முதல் வாதமும். சென்னை: கீழைக்காற்று.

ஜார்ஜ்தாம்சம். 2005. மனித சாரம். கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம்.

சிவத்தம்பி,கா. 2011. இலக்கியமும் கருத்துநிலையும். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

5.எங்கெல்ஸ்பிரெடெரிக்.2008. குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின்தோற்றம்மதுரை : கருத்து=பட்டறை.

6.சிவக்குமார்,கே.2016. தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு. முனைவர் பட்ட ஆய்வேடு. புதுச்சேரி : புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம். 

 

வெளிவந்த விவரம்

கீற்று 04 ஜுன் 2026

https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/49450-tattuva-ariviyal

இசை விழாவில் தமிழ்மொழி தீட்டா?

இசை விழாவில் தமிழ்மொழி தீட்டா?

முனைவர் புதியவன்

 

 தமிழ் மக்கள் இசை விழா என்ற பண்பாட்டு நிகழ்ச்சியை மக்கள் கலை இலக்கிய கழகம் 1994ல் தஞ்சையில் தொடங்கியது. கர்நாடக இசை மரபின் தனித்துவமாகத் திகழ்ந்த ஸ்ரீ சத்குரு தியாகராசர் நினைவாக 1904 இல் தொடங்கிய திருவையாறு ஆராதனை இசை விழாவிற்கு எதிராகத் தொடங்கப்பட்டதுதான் தமிழ் மக்கள் இசை விழா.

 இதன் நோக்கம் தமிழ் மக்களின் இசை கலையை எடுத்துக்காட்டுவது மட்டுமல்ல. மாறாக, தமிழிசையிலிருந்து களவாடப்பட்டதே கர்நாடக இசை என்பதையும் உணர்த்தத்தான். 

 மூளையை வளர்க்காமல் குடுமி வளர்க்கும் பார்ப்பன வன்முறையாளர்கள் தமிழை நீச பாசை என்று அவமதிப்பதை எதிர்த்து கர்ஜிப்பதற்காக மட்டுமல்ல. மாறாக, சமஸ்கிருதம் தேவ பாசை அல்ல என்பதை நிறுவுவதற்காகவும்தான்.

 

 இசை நிகழ்ச்சிகள் உட்பட்ட பண்பாட்டு விழா என்பதன் பொருள் என்ன? சக மனிதர்களின் உணர்வுகளையும் உறவுகளையும் பழைமையின் புண்படுத்தல்களில் இருந்து மீட்டு புதுமையின் பண்படுத்தல்களுக்கு உயர்த்துவதுதான் பண்பாட்டு விழா. 

 வெகுஜன மக்களின் ஆழ்மன உணர்வுகளில் ஆற்றல் மிக்க கருத்துகளை விதைப்பதுதான் கலையின் மகத்துவம். விதைக்கப்பட்ட

 நச்சுக் கருத்துக்கள் நச்சு செயல்களாகவும், நல்ல கருத்துக்கள் நல்ல செயல்களாகவும் விளைகின்றன. அறிவு நிலையில் இருந்து ஆழ்மன உணர்வுவரை பற்றிக்கொள்ளப்பட்ட கருத்துக்களே சமூகச் செயல்பாடுகளாக உருவெடுக்கின்றன.

 அறிவியல் தத்துவமாகிய மார்க்சிய சமூக விஞ்ஞானத்தை இதயமாகத் துடித்துக் கொண்டிருக்கின்ற ம.க.இ.க. மனிதகுல மேன்மையின் கருவியாகக் கலையை இசைத்துக் கொண்டே இருக்கிறது.

 மனித குல தேக்கத்தை இசைக்கின்ற ஆன்மீக பக்தி இசையிலிருந்தும், ஆபாச சீரழிவு கருத்துக்களில் இருந்தும் கலையை மீட்டு புதிய சிந்தனைகளையும் புரட்சிகர கருத்துகளையும் தமிழ் மக்கள் இசை விழாவாக அரங்கேற்றி வருகிறது.

 

 கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்ற முழக்கத்துடன் இயங்குகின்ற மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தமிழ் மக்கள் இசை என்பது கர்நாடக இசையிலும், தெலுங்கு பஞ்சரத்தின கீர்த்தனையிலும், சமஸ்கிருத மந்திரத்திலும் வெளிப்படும் பக்தியின் உள்ளீடு அல்ல. மாறாக, புரட்சிகர கலை உணர்ச்சிகளின் இசை ஜாலங்கள்...

 பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு, நாடு மறுகாலனியாக்கத்தின் மறுப்பு, கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பு, சாதி வெறி, மதவெறி, ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், கார்ப்பரேட் லாபவெறி ஆகியவற்றின் இறுதி சடங்கிற்காக ஏற்றப்படும் கொள்ளி நெருப்பு...

 அரச வன்முறைகள், போலீஸ் குண்டாந்தடிகள், கைதுகள், சிறைகள், வழக்குகள் போன்ற இடர்பாடுகளைக் கடந்து நெருப்பாகப் பற்றி படர்ந்த தமிழ் மக்கள் இசை விழாவின் சிந்தனைகள் கிளர்ச்சிகரமானவை!

 

 தமிழே தீட்டு என்றால் தமிழர் கொடுக்கும் பணம் மட்டும் இனிப்பா!

 

 தெய்வங்களுக்கு சமஸ்கிருதமாம் பாடுவதற்கு தெலுங்காம் ஆனால் பேசுவதற்கு மட்டும் தமிழா!

 

 தமிழிசையே தீட்டு என்று ஒதுக்குவது தமிழ் மண்ணிற்கு செய்யும் துரோகம்!

 

கிளர்ச்சிகர சிந்தனைகள் மக்களைப் பற்றிப்படர்வது சவாலாகவே தொடர்கிறது...

 

 பொது உணர்வும், சுய உணர்வும் சாதியாகவும் மதமாகவும் பாலினமாகவும் பிளவுபட்டுள்ள சமூக மனநிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

 

நாம் தமிழ் பேசும் ஒரே இனம்.

 நாம் தமிழினம் என்ற ஒருங்கிணைந்த உணர்ச்சி இல்லாதவர்களாகவும், சர்வதேச நிலையில் உழைக்கும் மக்கள் என்ற வர்க்க உணர்ச்சி இல்லாதவர்களாகவும் கட்டமைந்திருக்கிறார்கள். 

 பிளவுகள் நிறைந்த மக்களை உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைக்கும் கருவியாக தமிழ் மக்கள் இசை விழா அமைந்திருக்கின்றது. 

 புரட்சிகர ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மையம் வீதி நாடகங்கள் நிகழ்ந்தன. புரட்சிகர கருத்துகளுடன் ஒயிலாட்டங்களும் நாட்டார் கலைகளும் அரங்கேறின. தோழர் மருதையன் போன்ற அறிஞர்கள் பண்பட்ட வார்த்தைகளால் தீட்டப்பட்ட ஓவியங்களாக பேருரை வழங்கினார்கள். ஆனாலும், புரட்சிகர பாடல்களை வழங்கும் கோவன் குழுவினரின் பாடல்கள் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் ஒலிப்பேழைகளாகவும், பட்டிதொட்டியெங்கும் இசைத்து பறக்கும் புரட்சி குயில்களாகவும் பற்றிப் படர்ந்தன. பாடல்களைப் போர் கருவிகளாக பயன்படுத்தும் மரபிற்குரியவர்கள் என்பதாலும், மக்கள் படும் பாட்டையே நாடெங்கும் புரட்சிகர பாடல்களாக இசைப்பவர்கள் என்பதாலும் மக்கள் பாட்டு இலக்கிய கழகம் என்று பெயர் சூட்டி பாராட்டினாலும் பொருந்தும்.

 

 தமிழ் மக்கள் இசை விழாவின் ஒன்பதாம் ஆண்டு உரையில் தோழர் மருதையன் இவ்வாறு கூறுகிறார்.

' நம் அமைப்பு பிரபலமாகி இருக்கலாம். முன்பை விட புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடியிருக்கலாம். ஆனாலும் நாம் தோற்றுப் போய் உள்ளோம். நம்மால் மகிழ்ச்சி அடைய முடியாது. ஏனெனில், பாசிச பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கிறது..'

 

 தோழரின் அன்றைய உரை இன்றும் பொருந்துகிறது.

 நாம் கீழடியில் இருந்து இந்திய வரலாற்றை திருத்தி எழுத சொல்கிறோம்..

 தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது என்கிறோம்..

 பெரியார் பிறந்த மண் என்று இறுமாப்பு கொள்கிறோம்..

 2026 ஜூன் 6 தமிழ் மக்கள் இசை விழாவை கொண்டாடப் போகிறோம்..

 ஆனால் பாசிச பாஜக இன்றும் ஆட்சியில் இருக்கிறது. நாம் மகிழ்ச்சி அடைய ஒன்றும் இல்லை. நாம் தோற்றுப் போய் நிற்கிறோம்.

 

 நமது புரட்சிகர கருத்துகளால் கவரப்பட வேண்டிய இளம் தலைமுறைகள் காவி கார்ப்பரேட் பாசிசப் பேயை எதிர்த்து களமாட வேண்டிய கடமைக்குரியவர்கள். ஆனால் நிலைமை என்ன? அவர்கள் ரசிக மாயையிலும், காட்சி போதையிலும் கஞ்சா மது போதைகளிலும் முடமாகிக் கிடக்கிறார்கள்.

 கருத்தாளுமை மரத்துப்போய் பிம்ப நோய்களில் செத்து கிடக்கிறார்கள்.

 முன்னோர்கள் விட்டுச் சென்ற விடுதலைப் போரின் வீர மரபை தொட்டுத் தொடர வேண்டிய நம் தலைமுறைகள் கார்ப்பரேட் காவி பாசிச அபாயத்தை உணராதத் தலைகளாக இருக்கிறார்கள். அவர்கள் தலைகளில் பிம்பங்கள் வண்ணக் குமிழ்களாகத் திரண்டெழுந்து வெடித்துச் சிதறுகின்றன. இன்ப நோயின் பெருந்திரையில் உண்மை உலகின் சவால்களைக் காணத் தவறுகிறார்கள். செயல்களாக விஸ்வரூபம் எடுக்கும் எந்த கருத்துக்களும் அவர்கள் தலைகளில் உதயமாவதே இல்லை. 

 

 தலைமுறைகள் எழா விட்டால் நடைமுறை உலகம் பிழைக்காது.

 நடைபிணமாகியுள்ளது நாடு. சமூகப் பொருளுற்பத்தி முதல் வாழ்வியல் பண்பாட்டு அரசியல் முழுமையிலும் கார்ப்பரேட் காவி பாசிச நஞ்சு பரவியிருக்கிறது. எல்லா முனைகளிலும் நஞ்சை முறிக்கும் புரட்சிகர மருத்துவம் அவசியப்படுகின்றது. ஆனால், வாழ்வா சாவா போரில் துயருற்றுள்ள மக்களை இவர்கள் எண்ணத் துணியவில்லை.

 மறுகாலனியாக்கத்திற்கும் கார்பரேட் காவி பாசகத்திற்கும் எதிரான விடுதலைப் போரில் களமாட வேண்டிய இவர்கள் காட்சி போதை வன்முறைகளில் விளையாடிச் சாகிறார்கள். 

 மாவீரர்களாக எழுந்து வராமல் உடை உடுத்திய மந்தைகளாகத் திரிகிறார்கள். 

 கார்ப்பரேட் லாப வெறியையும் அதன் பாசிச பாஜகவையும் வீழ்த்துகின்ற பெருவிழாவாகத் தமிழ் மக்கள் இசை விழாவை நடத்திக் காட்டுவதும், இளம் தலைமுறைகளையும் உழைக்கும் மக்களையும் உசுப்பேற்றி புரட்சிகர உணர்வூட்டி எழுப்பி காட்டுவதும் புரட்சிகர அமைப்புகளுக்குக் காலம் முன்வைத்துள்ள சவால். 

 மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இசை பாடலுக்குக் காலமே காலனாக எழுந்து விடுதலை கூத்து ஆடும். காலத்தில் வினையாற்றும் புரட்சிகர கலைஞர்கள் நிச்சயம் சாதிப்பார்கள். மக்கள் கலை இலக்கியக் கழகம் நிகழ்த்தவிருக்கும் 2026 ஜூன் 6 தமிழ் மக்கள் இசை விழாவில் விடுதலை கூத்து விஸ்வரூபம் காட்டும்.

 

வெளிவந்த விவரம்

யாவரும் கேளீர்

மே 2026 பக் 41-43









கற்றதனால் ஆய பயன்

  கற்றதனால் ஆய பயன்   முனைவர் புதியவன்    அப்பாவிடம் எங்க அம்மா சொல்வாங்க. ஏங்க இவனுக்கு பரோட்டா கடைக்காரர் மகளை ப் பார்த்து கட்டிக் ...

அதிகம் பார்க்கப்பட்டவை