புதியவன்
இலாப வெறி தன்
தூரிகையில் வரைந்த ஓவியம்
நாம் சுயநலப் புழுவாய் நெளிகின்றோம்
எத்தனை விதமான
வண்ணங்கள்
எண்ண முடியாத
ஜாலங்கள்
கண்கள் கூசும்
வெளிச்சங்கள்
எச்சில் ஊறும்
விருப்பங்கள்
மூக்கைத் துளைக்கும்
வாசங்கள்
முடிவே இல்லாத்
தொடக்கங்கள்
பொய்யாய் பந்த
பாசங்கள்
தொலைந்தன மனித
உறவுகள்
கண்ணியமற்ற
வாழ்க்கைக்கும்
கவர்ச்சிமிக்க
ஆடைகள்
இலாப வெறி தன்
தூரிகையில் வரைந்த ஓவியம்
அதில் சுயநலப்
புழுவாய் நெளிந்து சாவதே
ஒவ்வொரு மனிதரின்
பாத்திரம்
இயற்கை சமூகம்
இரண்டுடனும்
மனிதருக்கு
இருக்கின்ற
இடைப்பட்ட உறவென்பது
பிழைப்பு நுகர்வு
மரணம்
என்ற மும்முனை
உறவுதான் என்பது
நவீன முதலாளியத்தின்
இலாபவெறி
நமக்கு நிர்பந்தித்திருக்கும்
நிலைப்பாடு
இது மனிதகுலம்
கண்டுள்ள
ஆகப்பெரிய அறியாமை
இலாபவெறியால்
நாம் சுமந்த
ஆகப்பெரிய இழிநிலை
பிழைப்பிற்கான
முயற்சிகளில்
நாம் வாழ்வதற்கே
மறந்துபோனோம்
பிழைப்பு நுகர்வு
மரணம்
என்ற மும்முனை
சுழற்சியில்
வாழ்ந்தோமோ
இல்லையோ!
இழந்ததும் தொலைத்ததும்
ஏராளம்…
நாம் நாங்கள்
என்ற ஒற்றுமையைத் தொலைத்து
நான் எனக்கு
என்ற அகந்தையில் விழுந்தோம்
எல்லோருக்குமான
அறிவைத் தொலைத்தோம்
மேன்மையான உழைப்பைத்
தொலைத்தோம்
உயர்வதற்கானப்
பண்பாட்டைத் தொலைத்தோம்
அரசதிகாரத்திற்கு
குனிந்து குனிந்தே
தலைமைத்துவத்தைத்
தொலைத்தோம்
நம் தலைமுறைகளின்
நல்லுலகம் பற்றிய கனவுகளைத் தொலைத்தோம்
இலாப வெறியின்
வேகத்தில்
சுயநல வெறியின்
மயக்கத்தில்
நாம் பிழைத்தது
துளிதான்
தொலைத்தவை கடல்தான்