Saturday, May 23, 2020

காவல்கோட்டம் நாவலில் பாலின அரசியல் 1

இயல் 1
     காவல்கோட்டம்  நாவலில் பாலின அரசியல்

நாவலின் ஆரம்பம் மதுரா விஜயம். முதல் அத்தியாயத்தில் மாலிக்காபூர் மதுரைக்குப் படையெடுத்து வருகின்றான். ‘மாலிக்கபூர்’ இவர் திருநங்கை. இந்த வரலாற்று உண்மை நாவலுள் பதிவு பெறவில்லை. மதுரையின் காவலன் கருப்பு. கருப்பனின் கண்ணெதிரே மதுரை கொள்ளைபோகிறது. சொத்துக்களைச் சூறையாடுகிறார்கள். பெண்களைத் தூக்கிச் செல்கிறார்கள். குழந்தைகளையும் முதியவர்களையும் கொடுமைப் படுத்துகிறார்கள். மாலிக்காபூரின் படையைத் தடுக்க முயற்சி செய்து வீரத்துடன் போராடி ஏதும் செய்ய முடியாத நிலையில் கைகள் கட்டப்பட்டு ரத்தத்தில் மூழ்கியிருந்தான் கருப்பன். கருப்பனின் மனைவி சடச்சியைக் கர்ப்பிணிப் பெண் என்ற காரணத்தால் அடித்ததோடு விட்டுவிட்டார்கள். இந்நிலையில் சடச்சியின் வீரஉணர்வை நாவலாசிரியர் பதிவு செய்கிறார். ‘அவள் வலது கையில் வேல்கம்பும்இடது கையில் அரிவாளும். அவனைக் கண்டு அவள் அழவில்லை நேராகப் பின்னால் போய் கட்டை அறுத்துக் கொண்டே சொன்னாள் “உசுரு இருக்குற வரைக்கும் கருப்பு காவல்ல களவு போகக் கூடாது” என்று வேல்கம்பை நீட்டினாள்’.(சு.வெங்கடேசன்: 2008,பக்-09) 

கருப்பனின் வீரஉணர்வுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத சடச்சியின் வீர வெளிப்பாடானது சங்க இலக்கியத்தின் வீரத்தாய்க்கு நிகரான ஓர் வெளிப்பாடாகும். இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ள தாதனூரும்தாதனூர்க்காரர்கள் ஒவ்வொருவரும் நாவலின் கதாநாயகர்கள். தாதனூரின் முதல் தெய்வம் ஆதிக்கிழவி சடச்சிபிறகுதான் கருப்பு. தாதனூரின் ஆதிக்கிழவி சடச்சியே இந்தக் கர்ப்பிணிப்பெண்.

   மதுரை முகமதியர்களின் கையில் இருந்த போது குமாரகம்பணனின் படை துவாரசமுத்திரத்திலிருந்து மதுரைக்குப் படையெடுத்தது. மதுரையைச் சுற்றிலும் அணிவகுத்திருந்த கம்பணனின் படைகளில் ஒரு குதிரைப்படையின் தலைமைப் பொறுப்பில் ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் நலகாவுலசிவக்கா. அவரது படையில் உள்ள முன்னூறு வீரர்களும் பெண்களே. இந்தப்படை முந்நூற்றுவர் குதிரை வீராங்கணைகள் பிரிவு என்று குறிப்பிடப்படுகிறது.
குமாரகம்பணனின் துணைவி கங்காதேவியும் வீரப்பெண்ணாகவே பதிவு செய்யப்பட்டுள்ளார்.

 குமாரகம்பணனின் படைத்தளபதி பொய்யாவுலமங்கனிடம் கங்கா ஒரு கட்டளையைப் பிறப்பித்தாள். அது பெண் வீராங்கணைகளின் படை குறித்த ஒரு கட்டளை. ‘கோட்டைக்குள்நுழையும் முதல் குதிரை முந்நூற்றுவர் அணியினதாய் இருக்க வேண்டும்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-23)  என்பதே அந்தக் கட்டளை. அதன்படியே இரவில் துவங்கிய போரில் கோட்டைக்குள் நுழைந்த பெண் வீராங்கனைகளின் வீரச்செயல்கள் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. ‘வடுகச்சிகளில் ஒருத்தி கூட வாளை எடுக்கவில்லை. ஈட்டியாலேயே குத்தித்தள்ளினர். போர்செய்த வீராங்கனைகளில் பலரும் காணவில்லை. சிலர் கடுமையான காயங்களுடனும்சிலர் சிறிய காயங்களுடனும் இருந்தனர். கவுலாவுல காமாட்சி. கோவுதால கிருஷ்ணம்மாகாலமு ரேணுகாதாமசாணி ஆரம்மாகோதண்டஅகுமஞ்சிபோடாவுல சுராதேவி போன்ற பெண் வீராங்கனைகள் காணவில்லை’ (சு.வெங்கடேசன்: 2008,ப-24-25). 

போர் செய்ததில் வீரமரணம் அடைந்துள்ளார்களாஅல்லது மருத்துவ தேவைக்காகக் குற்றுயிருடன் தவிக்கிறார்களாஎன்பதே தெரியாமல் போனது. மதுரை சுல்தான் ஓடி ஒளிந்திருந்த இடம் அறிந்து கங்காதேவி படையுடன் புறப்பட்டாள். மொட்டைப்பாறையில் வாளோடு கத்திக் கொண்டிருந்த முகம்மதியர்கள் மீது முதலாவதாக ஈட்டியோடு முன்னே பாய்ந்தவர் ஒரு பெண் வீராங்கனை. அவர் பெயர் கோலவாரி கிருஷ்ணை.

போர் தொடங்கியதும் எல்லம்மன் வழிபாடு நடைபெறுவது வழக்கம். உயரமான இடத்தில் எல்லம்மன் தெய்வம் இருக்கும். முதலில் எல்லம்மனின் மாலையை எடுக்கும் பூஜை. எல்லம்மனின் அருகே ரேணுகை தெய்வமும் அதனது சிவப்புக்கச்சையில் குறுவாளும் இருக்கும். ஆர்வமுள்ள இளைஞர்கள் எல்லாம் அலைமோதுகிறார்கள். மாலையை எடுக்க யார் முதல் எட்டு வைப்பது என்பதில்தான் தாமதம் ஏற்படும். பிறகு ஆளாளுக்கென்று அனைவரும் எல்லம்மனை நோக்கி ஓட ஆரம்பித்து விடுவார்கள். இந்த பூஜையில் முந்நூற்றுவர் குதிரைப்படை வீராங்கனைகளிலிருந்து ஸ்ரீஜானகிவாரிகனகநூஜாதான் எல்லம்மனை நோக்கி முன்னேறி மாலையை எடுத்துத் தனது கழுத்தில் அணிந்துகொண்டு ரேணுகை தெய்வத்தின் குறுவாளை எடுத்துத் தன்னைத்தானே பலியிட்டாள்.

பக்தி நடவடிக்கையாக இருந்தாலும் கூட ஒருபெண் தானே முன்வந்து தன்னைத்தானே பலியிட்டுக்கொள்ளும் துணிவை இங்கு நாவலாசிரியர் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்ல இதுபோன்ற பக்தி நடவடிக்கைகள் ஆண் பெண் வேறுபாடில்லாமல் பொதுவானதாக அமைந்துள்ள  சமத்துவ போக்கையும்  பதிவு செய்துள்ளார். இவ்வாறு பெண்கள் போர்க்களத்தில் போட்டிப் போட்டு;க் கொண்டு தங்களது வீரஉணர்வையும்ஆற்றலையும் வெளிப்படுத்தி உள்ள பாங்கினை நாவலாசிரியர் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.

            அரசன் குமாரகம்பணன்துணைவி கங்காதேவியின் கட்டளைக்கும்அதிகாரத்திற்கும் அடிபணிந்து நடந்து கொள்வதாக நாவலில் பதிவாகியுள்ளது. கம்பணனின் படை மதுரையைச் சுற்றி வளைத்திருந்தது. மறுநாள் காலையில் போர் நடைபெறப் போகிறது. போர்க் குறித்துத் தளபதிகளுடன் ஆலோசனையில் இருக்கிறான் கம்பணன். அமண மலையில் இருக்கும் தீர்த்தங்கரர்களைத் தரிசிக்கத் தயாராகுமாறு கங்காதேவியிடமிருந்து வந்த அழைப்பிற்கு ‘போர் முடிந்தவுடன் அங்கு போகலாம்’ என்று பதில் அனுப்பினான். உடனே அமண மலைக்குக் கிளம்ப வேண்டும் என்று கங்கா ஆணையிடுகிறாள்;. வேறுவழியின்றி கம்பணன் அமண மலைக்கு வந்து காத்திருந்தான்.

கங்கா அந்த அழகான மாலை நேரத்தில் நீராடிக் கொண்டிருந்தாள்;. தோப்புக்குள் பறந்து போகின்ற கிளிக்கூட்டத்தை இரசித்துக் கொண்டிருந்தாள். இருட்டப்போகும் நேரம். அம்பு போன்ற ஒன்று கிளிக் கூட்டத்தில் தைத்து ஆலமரத்தின் பின் மறைந்தது. உடனே கங்கா முடிவெடுத்தாள். பணிப்பெண் ஜோகம்மாவின் மூலம் உடனே போரைத் தொடங்க வேண்டும் என்று கம்பணனுக்குத் தெரிவித்தாள். கம்பணன் கோபத்தோடு கங்காவிடம் கத்தினான் “கங்கா! இது விளையாட்டல்லபோர். இன்னும் சற்று நேரத்தில் இருட்டிவிடும். முழு அமாவாசை…”. (சு.வெங்கடேசன்: 2008,பக்-19)  கங்கா கேட்டபாடில்லை. நான் தீர்மானித்து விட்டேன்இனி மாற்றமில்லைஉடனே தயாராகுங்கள் என்றாள்.

 கம்பணனுக்குக் கோபம் முட்டியது. கங்காவை எச்சரித்தான். “உன் பிடிவாதத்திற்கு அளவில்லையாஎன்னோடு விளையாடலாம் ஆயிரமாயிரம் உயிர்களோடு விளையாடுவது சரியல்ல.” (சு.வெங்கடேசன்: 2008,பக்-19)  என்று மறுத்துரைத்தான். அப்பொழுது கங்காவின் குரலானது கம்பணனை நடுங்க வைத்தது. “குமாரகம்பணா! விலகி நில். விஜய நகரப் போர் இதுவல்ல. இது என் யுத்தம். கம்பிளியின் யுத்தம். இதற்காகவே நான் பிறந்தேன். இந்த நாளுக்காகவே  காத்திருந்தேன்.  இதற்காகத்தான் வாளெடுத்தேன். ஆயிரமாயிரம் கொல்லவாருகளை இழந்தாலும் அந்த இரத்தத்தில் நடந்து போய் இன்று இரவே பலியெடுப்பேன். ஆனைக் குந்தியின் பகை முடிப்பேன். போ! அந்த ரேணுகையின் மேல் ஆணை.”  (சு.வெங்கடேசன்: 2008,பக்-19) 

கங்கையின் உத்தரவை மீறாமல் கம்பணன் நடந்து கொண்டான். அன்று இரவே கங்கையம்மன் வழிபாடும்எல்லம்மன் பூஜையும் முடிந்து இரவோடு இரவாக போரும் நடைபெற்றது. இறுதியில் மதுரை சுல்தானைக் கங்கையே தனது  வீர ஈட்டியால் வீழ்த்தினாள்.

கங்கா என்ற ஒரு பெண்ணின் முடிவும்சொல்லும். வீரமுமே மதுரைசுல்தான் மீதான போரைத் துவக்கியும் வைத்துள்ளதுமுடித்தும் வைத்துள்ளது. ஆனாலும்தாய்வழிச் சமூகத்தின் தோல்வியும்தந்தை வழிச்சமூகத்தின் வெற்றியும் ஆண்களை முதன்மைப்படுத்தியதிலிருந்து பெண்களின் மூளைக்கூட ஆண்களின் நலன் சார்ந்தே சிந்திப்பதற்கு கட்டாயப்படுத்தப்பட்டும்பயிற்சி கொடுக்கப்பட்டும்ஆண்டாண்டுகாலமாய் பெண்ணடிமைத்தனம் பழக்கப்படுத்தப்பட்டும் வந்திருக்கிறது. ஆகவே பெண்ணின் சிந்தனையில் இருக்கும் ஆண் நலன் சார்ந்த  போக்கே கங்காவின் பெண்ணடிமைத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது.

இரவு நேரமாகிவிட்டது. கங்கா எழுத்தாணியைப்பற்றி எழுதிக்கொண்டிருந்தாள். கம்பணன் கங்காவின் குடிலுக்குள் நுழைந்தான். கங்கா! இன்னும் தூங்கவில்லையா என்று வியந்தான். ‘மதுரா விஜயம்’ என்ற வரலாற்றுக்காதையை எழுதுவதாகக்  கங்கா பெருமிதத்துடன் கூறினாள். விஜய நகர இளவரசன் குமாரகம்பணனின் போர் வெற்றிகளை விவரிக்கும் சமஸ்கிருத கவிதை என்று மேலும் விவரித்துச் சொன்னாள். ‘மதுரா விஜயம்’ என்று பெயர் சூட்டுவதை விட ‘கங்கா ரௌத்ரம்’ என்று பெயர் சூட்டு. ஏனெனில் ஆனைக்குந்தி இளவரசியின் சாகசமல்லவா இந்த வெற்றி என்று கங்காவை நெகிழவைத்தான். உடனே கங்கா சிரித்துக் கொண்டே சொல்கிறாள். “என்நிகழ் காலம் உங்கள் நிழலிலேயே கழிந்து விட்டது. இது போதும் எனக்கு.” (சு.வெங்கடேசன்: 2008,பக்-28) 

இந்த வார்த்தைகள் முழுவதும் பெண் என்பவள் ஆணிற்கு கட்டுப்பட்டு வாழ்வதிலேயே சிறப்புப் பெறுகிறாள் என்ற பெண்ணடிமைச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. வாசகர் உள்ளத்தில் வீரப்பெண்ணாகவே வலம் வந்த கங்காதேவியின் இத்தகைய வார்த்தைகளால் பெண்ணடிமைச் சிந்தனையை வெளிப்படுத்தியது எதுஅதுதான் ஒரு ஆண் படைப்பாளியின் ஆண்நலன் சார்ந்த சிந்தனையின் வெளிப்பாடு. அதனால்தான் கங்காவின் வீரவரலாறை கம்பணனின் நிழலில் காயப் போட்டுவிட்டார்நாவலாசிரியர்.

குமாரகம்பணன் தன்மனைவி கங்காவின் சொல்லுக்கும்செயலுக்கும்முடிவிற்கும்உணர்விற்கும் மதிப்பளித்து நடந்து கொள்கின்றான்;. அவனது பெருந்தன்மையைப் பாராட்டத் தூண்டுகிற வகையில் நாவலாசிரியர் அமைத்திருக்கிறார். பெருந்தன்மையின் அரசியலைப் பின்னால் பார்க்கலாம்.
கிருஷ்ணதேவராயரின் மூன்றாவது பட்டத்தரசியாக வரவழைக்கப்பட்டவள் துக்காதேவி. இவள் கலிங்க இளவரசி. இவளது திருமணம் ஓர் ஒப்பந்தத்தின் விளைவால் நிகழ்ந்தது. கலிங்க இளவரசி விஜயநகரத்தில் தனது வீரஉணர்வை வெளிப்படுத்தும் பாங்கு சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. விஜயநகரம் கலிங்கத்தின் மீது போர் தொடுத்து பல பகுதிகளைக் கைப்பற்றியது. கலிங்க வீரர்களும் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் இறுதிவரையிலும் புறமுதுகிடாமல் போர்க்களத்தில் வீரமரணம் அடைவதை நிகழ்த்திக் கொண்டே இருந்தார்கள். 

விஜயநகர வீரக்கதைப்பாடல்களின் நாயகனும்அரசன் கிருஷ்ணதேவராயரின் மெய்க்காப்பாளனும்நண்பனுமாகிய விஷ்வநாதனே ‘உண்மையில் விஜயநகரம் ஆட்பலத்தைக் கொண்டுதான் முன்னேறுகிறது’ என்று கலிங்கத்தின் வீரத்தை வியந்து கூறுகிறான். ராயர்தான் போரை நீடிக்கும் எண்ணம்  இல்லாமல் சமயோசிதமாக ஓர் ஒப்பந்தத்தின் மூலம் நிறைவு செய்கிறார். ஒப்பந்தத்தின் அடிப்படையில் விஜயநகர அரசு கைப்பற்றியிருந்த கலிங்கப் பகுதிகளைக் கலிங்கத்திற்கே ஒப்படைத்தது. கலிங்க இளவரசி துக்காதேவி ராயரின் பட்டத்தரசியானாள்.


இளவரசி துக்காதேவியால் கலிங்கத்தின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதைவிட அவளது அண்ணன் வீரபத்ரனின் இறப்பையும்அதற்கு காரணமான விஜயநகரையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வீரபத்ரன் விஜயநகரில் கைதியாக இருந்த போது விஜயதசமி விழாவில் ராயர் அறிவித்தார். லட்சம் மக்கள் கூடியிருந்த அவ்விடத்தில் விஷ்வாவுடன் வாள்போட்டியில் வென்றுவிட்டால் வீரபத்ரனுக்கு விடுதலைசுதந்திர புருசனாய் நாடு திரும்பலாம் என்பதே ராயர் அறிவித்தது. அரச குலத்தினனோடு மட்டும்தான் போரிடுவேன் என்று மறுத்துரைத்தான் கலிங்க இளவரசன். வீரபத்ரனின் தன்னம்பிக்கையின்மையை விஷ்வா கணித்திருந்தான். இறுதியில் வீரபத்ரன் தற்கொலை செய்து கொண்டான். அண்ணனின் இறப்பு பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை துக்காதேவி. ஆனாலும் அதற்குப் பலிதீர்க்க வேண்டும் என்பதே துக்காதேவியின் நோக்கம்.
கிருஷ்ண தேவராயர் தன்னை நெருங்கி வரும் போதெல்லாம் துக்காதேவியின் கோபமும்வீர உணர்வும் வெளிப்படுகிறது. ராயர் பலமுறை அவளை அன்போடு நெருங்கி வந்துள்ளார். துக்காதேவியோ அவரைத் தொடக்கூட அனுமதிக்கவில்லை. மீண்டும் ஓர் இரவில் ராயர் முயற்சி செய்திருக்கிறார். அன்று அவரை அமைதியாக ஏற்றுக்கொண்ட துக்காவின் நோக்கம் தோல்வியடைந்தது. தலையணையின் கீழ் ஒளித்துவைத்திருந்த குறுவாளை எடுத்து ஓங்கிக் குத்தியிருக்கிறாள். எப்படியோராயர் விலகிக் கொண்டு அவளிடமிருந்து தப்பித்து ஓடியிருக்கிறார். இதனால் ராயர் மிகவும் மன வேதனை அடைந்தார். ராயரின் உயிர் போன்றவனான விஷ்வநாதனும் வருத்தமுற்றான். ராயருக்காக துக்காதேவியை சந்தித்து பேசினான்.

ஒருமுறை தன் அண்ணன் வீரபத்ரனோடு வாட்போருக்கு தயாரானவனே இந்த விஷ்வநாதன் என்பதை அறிந்ததும் துக்கா தன் வீர உணர்வை வெளிப்படுத்தினாள். சடாரென எழுந்து போய் சுவரில் இருந்த வாளை எடுத்துக் கொண்டு விஷ்வாவின் கண்ணைப் பார்த்து சொன்னாள். “உன் வாளை எடுத்துக் கொள். இப்போது நான் நிரூபிக்கிறேன். கலிங்க சிங்கம் வராகத்திற்கு அடிபணியாது. எடு உன்வாளை” (சு.வெங்கடேசன்: 2008,பக்-63)இவ்வாறு துக்காதேவி என்ற அந்தப் பெண்ணின் வீரஉணர்வு அவளது சொல்லிலும்செயலிலும் வெளிப்படுவதை நாவலாசிரியர் காட்டுகிறார்.
அதே நேரத்தில் ஒரு அரசகுலப்பெண் ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்கு உட்பட்டே தன் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும் என்ற பெண்ணடிமைத்தனத்தின் போக்கை அவளது வார்த்தையிலேயே வெளிப்படுத்துகிறார் நாவலாசிரியர். 

விஷ்வநாதன் விஜயநகரின் நியாயம் பற்றியும்வீரபத்ரனின் தற்கொலை  பற்றியும் துக்காதேவி;க்கு உணர்த்தி சமாதானப்படுத்தியப்பிறகு ஒருகேள்வி கேட்கிறார். ராயர் நிராயுதபாணியாக இருக்கும் போது அவரை ஆயுதங்;கொண்டு தாக்க முயற்சிப்பது ஒரு வீரபெண்ணுக்;கு நியாயமானதாஎன்பதே அந்தக் கேள்வி. ‘பெண்மனதின் குமுறல்களை நீ அறியமாட்டாய். அந்தப்புரத்தின் சுவர்களுக்குள்தான் அவள் எதையும் செய்ய முடியும்.’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-64). இதுவே அந்த வீரப்பெண் விஷ்வநாதனுக்கு உரைத்த பதில்.

 ராயரின் விருப்பத்திற்கு இணங்காதவளாகவே துக்காதேவியின் நடத்தை தொடர்கிறது. இருந்த போதிலும் ராயர் தனது அதிகாரத்தையும்அடக்குமுறையையும் பயன்படுத்தி துக்காவின் உணர்வுகளை ஒருபோதும் இழிவுபடுத்தவில்லை. மாறாகவன்மம் இருக்கும் வரைதான் அரசகுலங்கள் நிலைத்திருக்கும் என்று அவளது வன்மத்தை புகழ்கிறார். அதுமட்டுமல்ல அவளது இறுதி முடிவான துறவு வாழ்விற்கும்அவளது ஆசிரமத்திற்கும்அவள் ஈடுபடும் பொதுக்காரியங்களுக்கும்தேவையான அனைத்து செலவுகளையும் ராயர் தொடர்ந்து செய்வதோடு மட்டுமல்லாமல் அவளைச்சுற்றிலும் பாதுகாவலர்களை மக்களோடு மக்களாக நியமித்து அவளுக்கான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்றால் துக்காதேவியிடம் ராயரின் இத்தகைய பண்புகளைப் பாராட்டியே ஆக வேண்டும்.

ராயருக்காக விஷ்வநாதன் துக்காதேவியிடம் பேசச்சென்றான். அந்த நேரத்தில் துக்கா தனது வீரஉணர்வை வெளிப்படுத்தும் வகையில் விஷ்வாவை தன்னோடு வாள் போருக்குத் தயாராகுமாறு சொல்கிறாள். பெண்ணுக்கு எதிரே நான் வாளெடுப்பதில்லை என்று பதில் உரைத்தான் விஷ்வா. என்னதான் பெண்கள் வாளெடுத்தாலும் ஆணின் வீரத்திற்கு இணையாக மாட்டார்கள் என்ற ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடாகவே அவனது பதிலை அமைத்திருக்கிறார். இருந்தாலும் கூட ‘என்னை வாள் சண்டைக்கு அழைத்ததற்காக உங்கள் மீது என்மதிப்பு உயர்கிறது’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-64)என்று இறுதியாக அவன் சொன்ன போது பெண்ணின் வீர உணர்வை மதிக்கின்ற அவனது பெருந்தன்மையும் எட்டிப் பார்ப்பதைஉணர முடிகிறது.


உற்பத்தியில் ஈடுபடுகின்ற உழைக்கும் மக்களின் மீது அதிகாரம் உடையவன் அரசன். அரச மாளிகை ஓர் அதிகாரத்தின் சின்னம். அரசனும்அரசனைச் சேர்ந்தவர்களும்அரசப்படைகளும் அதிகாரத்தின் பேரலைகள். பணிப்பெண்களும்அந்தப்புரப்பெண்களும்உழைக்கும் பெண்களும் அரச மாளிகையின் அடிமைகள். அரசகுல ஆண்களை மகிழ்விக்கும் காமப்பண்டங்கள். நிலவுடைமைச் சமூகத்தில் இதுதான் நிலமை. ஆனாலும் ஆணாதிக்கத்தின் சின்னங்களுள் அடங்கும் அரசர் கிருஷ்ணதேவராயர்  மற்றும் விஷ்வநாதனின் சொல்லிலும் செயலிலும் பெண்ணை மதிக்கின்ற பெருந்தன்மையை நாவலாசிரியர் வெளிப்படுத்துகிறார். இந்தப் பெருந்தன்மையின் அரசியல் எத்தகையது என்பதை பின்னால்பார்ப்போம்.


1 comment:

  1. கங்கா ரௌத்ரம் என்ற இலக்கியம் இருந்தால் நீங்கள் முன்வைக்கும் வெங்கடேசன் மீதான விமர்சனம் சரி. ஆனால் மதுரா விஜயம் என்பதுதானே உள்ளது. எங்கிருந்து ஆணாதிக்கப் போக்கு எழுகிறது?

    ReplyDelete

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை