Friday, May 8, 2026

தலையற்றவர்கள் சூட்டிய கிரீடம்

 

தலையற்றவர்கள் சூட்டிய கிரீடம்

 

 தெருவெங்கும் பட்டாசுகளும் விசில்களும். ஓயாத சத்தங்கள். 2026ல் த.வெ.க. 100க்குமேல் அதிக தொகுதிகளில் வெற்றி கொண்டாட்டம். தற்குறிகள் அல்ல மாற்றத்தின் அறிகுறிகள் என்ற இறுமாப்புடன் இளந்தலைமுறைகள்.

அரசியலாய்வாளர்களின் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தவிடுபொடி ஆகின. EVM வாக்கு இயந்திர விஞ்ஞானி பொன்ராஜின் வாக்குத்திருட்டு ஆதாரங்களை எண்ணிப் பார்ப்பதற்கு  தயார் இல்லாத நிலையாகச் சமூக பொது மனநிலை.

 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 35 சதவீதம் வாக்கு பெற்று பெரும்பான்மையாக நின்றது  த. வெ. க. 65 சதவிகித வாக்காளர்களுக்கு பேரதிர்ச்சி.

 சாத்தியமற்றதை சாத்தியமாகியுள்ளது த. வெ. க.

 

 தேர்தல் முடிவுகளில் நடிகர் விஜய் தோற்கும் நிலையில் இருப்பதால் இளந்தலைமுறைகளைப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் மன நோயாளியாகவோ தற்கொலை முடிவுகளுக்கோ ஆளாகும் நிலை உள்ளது.

 விசில் சின்னத்திற்கு ஓட்டு போட்டு விஜய் மாமாவ ஜெயிக்க வைக்கணும். நடிகர் விஜயின் கோரிக்கைக்காக அடம் பிடித்த குழந்தைகளை எப்படி பாதுகாப்பது.

தேர்தல் முடிவு வெளியானது. எல்லாம் தலைகீழானது. விசில் வெற்றியின் ஆரவாரங்களால் 65% வாக்காளர்கள் மன அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். பெரும்பாலான பெரியோர்களும் அனுபவசாலிகளும் முகம் செத்துப் போயுள்ளார்கள். இதயத்தில் உரமேற்றிக்கொண்டு எதிர்க்கட்சிகளாக நின்று செயலாற்றும் பொறுப்புணர்ச்சியைக் காட்டி சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

 பல குழந்தைகள் விஜய் மாமாவுக்கு தான் ஓட்டு போடணும் என்று சத்தியம் வாங்கிக்கொண்டு பெரியோர்களை அனுப்பி வைத்துள்ளார்கள். அரசியல் வரலாற்றிலேயே வாக்கு அரசியலுக்காகக் குழந்தைகளைக் கருவியாக்கியது இந்த தேர்தலில்தான் நிகழ்ந்துள்ளது.

குழந்தைக்கு சத்தியம் செய்துவிட்டு மீறினால் குழந்தைகள் பாதிக்கப்படுமோ என்ற பயத்திற்காக ஓட்டு போட்டவர்கள் பலர். இப்போது, இப்படி ஒரு முடிவை  எதிர்பார்க்கலையே என்று அதிர்ச்சியாக சொல்கிறார்கள். எப்படியோ அனுபவமும் கொள்கையும் சமூக அறிவும் இல்லாத வெறும் நடிகனைத் தலைவனாக்கிவிட்டது தமிழ்நாடு. நாடு நாதியற்று போகலாம்.

 

 அடம் பிடித்த குழந்தைகளுக்கு என்ன அரசியல் அறிவு இருந்திருக்கும். விசில் அடித்து ஆரவாரம் செய்த இளம் தலைமுறைகளுக்கு என்ன அரசியல் கருத்துகள் இருந்திருக்கும்.

ஓட்டுரிமை இல்லாத குழந்தைகளே தேர்தல் கருவிகளாகச் செல்வாக்கு பெற்ற பிறகு, ரசிகவெறியில் மிதக்கும் முதல் தலைமுறை வாக்காளர்களிடம் மட்டும் அரசியல் பொறுப்புணர்ச்சியை எதிர்பார்க்கவா முடியும்.

 

த. வெ. க. க்கு ஓட்டு போடுங்க ஐயா என்று சக பேராசிரியர்களே கேட்டார்கள். பல மாணவர்கள் விசிலுக்கு ஓட்டு போடச் சொன்னார்கள். நான் சில கேள்விகளை முன் வைத்தேன்.

த. வெ. க. விஜய்க்கும் உங்களுக்கும்  என்ன கருத்து என்பதை விளக்கச் சொன்னேன்.

 

 

 விவசாய மசோதா பற்றி...

 தொழிலாளர் சட்டத் திருத்தம் பற்றி...

 மகளிர் தினம் இலக்குகள் பற்றி...

 புதிய கல்விக் கொள்கை பற்றி...

 குடியுரிமை பாதுகாப்பு சட்டத் திருத்தம் பற்றி...

 மாநில அந்தஸ்தைப் பாதுகாப்பது பற்றி...

 விடியல் பயணத் திட்டம் பற்றி...

 ஆர்எஸ்எஸ் பிஜேபி அஜந்தா பற்றி...

 சனாதனம் பற்றி...

பாசிச அபாயம் பற்றி...

 காஷ்மீர் மணிப்பூர் நிலைமைகள் பற்றி...

 சர்வதேச அரசியல் பொருளாதாரம் பற்றி...

 பண்பாட்டு பிரச்சினைகள் பற்றி...

 இலாபவெறி போர்களை தடுப்பது பற்றி...

 சமூகப் பொருள் உற்பத்தியில் மக்களின் அதிகாரத்தை உயர்த்துவது பற்றி...

 சாதிவெறி.. மதவெறி.. பாலின ஒடுக்கும் முறை.. சமூக நீதி.. சுயமரியாதை.. சமூக மரியாதை.. இப்படியாக அடுக்கப்பட்டவற்றில் ஒன்றையாவது பேசணுமே! ம்ஹும்.. பேசலையே.

 எதைப்பற்றியும் எந்த கருத்துக்களும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். பலவிதமாக முடி வளர்த்து இருக்கிறார்கள். ஆனால் மூளை வளராதவர்ளாக இருக்கிறார்கள்.

இப்படி தலை இல்லாதவர்களின் செல்வாக்கால்தான் விசிலை வைத்து தமிழ்நாட்டிற்கு சங்கு ஊதப்பட்டுள்ளது.

 ரசிக போதை அரசியலை வென்றுள்ளது. விஜய்க்கு வாய்ப்பு கிடைத்தால் படிப்படியாக அரசியலை கற்றுக்கொண்டு மக்களுக்கு நல்லது செய்வார் என்ற வெற்று பிதற்றல் தமிழகத்தை ஆள வந்துள்ளது.

ஆசிரியர்களே தற்குறிகள் எனில் மாணவர்களை என்னவென்பது! பார்ப்பன சாதி ஆதிக்க சார்பும், தி. மு. க. எதிர்ப்புணர்வும், கருத்துகளற்ற காட்சி பிம்ப நோயும்  சமூகத் தேவை குறித்த மதிப்பீடுகளைப் புறந்தள்ளி தகுதியற்ற நடிகரை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளது.

ஆர். எஸ். எஸ்., ப. ஜ. க. வின் கைப்பவையாக களத்தில் நிற்கிறது த. வெ. க. பாவையாக உருளப்போகும் சனாதன பாசிசத்தின் கோரத்தாண்டவத்தைத் தமிழகம் அனுபவித்ததில்லை. தமிழகத்தை தற்காக்க தி.மு.க.தான் தற்சமய ஆயுதம் என்ற கணக்கு தப்பிவிட்டது. நல்லது. த. வெ. க. வழியாக சனாதன பாசிசத்தின் பேரவல வன்முறைகள் இனி பேரிடியாக இறங்கும் தருணத்திற்கு வந்துள்ளோம். மக்களின் தலை தப்ப தி. மு. க. வந்திருந்தால் நல்லதுதான். ஆனால் த. வெ. க. வந்திருப்பது அதைவிட நல்லது. இலாபவெறிக்கு சேவை செய்யும் சனாதன பாசிசத்திடம் அடிபட்டு மிதிபட்டால்தான் அறிவும் அரசியல் பொறுப்புணர்ச்சியும் தமிழ்நாட்டிற்கு வரும்.

 

 இந்தத் தேர்தல் தமிழ்நாடு பற்றி உலகம் அறியாதிருந்த உண்மையை உணர்த்தி இருக்கிறது.

 இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முற்போக்கானது...

 தமிழக மக்கள் தன்மானத்திற்கும் பேரறிவுக்கும் சொந்தக்காரர்கள்...

 சனாதனத்தை மிரளச் செய்த பெரியார் பூமியின் மைந்தர்கள்...

 இந்தியாவின் எதிர்காலத்திற்கு தமிழகம்தான் கலங்கரை விளக்கம்...

 

 எல்லா பெருமிதத்தையும் 2026 சட்டமன்ற தேர்தல் நிர்மூலம் ஆக்கிவிட்டது.

 

 தமிழ்நாடு வெறும் தற்குறி நாடு என்ற புதிய புரிதலுக்கு ஆட்பட்டுள்ளது.

 தலை இல்லாதவர்களின் அரங்கம் தமிழகம்...

 மூளையற்றவர்களின் மகுடம் தமிழகம்...

 படித்த முட்டாள்கள் உடை உடுத்தி மந்தைகளாகத்  திரிகின்ற பெருவெளி தமிழகம்...

 இப்படியாக தமிழகத்தின் தற்குறி முகங்கள் நிரூபணம் ஆகியுள்ளன.

 

 நமது இளம் தலைமுறைகள்தான் இன்று தற்குறிகள், பொறுப்பற்றவர்கள், ஒழுக்கக்கேடானவர்கள், அலட்சியவாதிகள், மரியாதையற்றவர்கள், அக்கறையற்றவர்கள், சமூக மதிப்பையும் அரசியல் அறிவையும் இழந்தவர்கள்...

 

 இவர்கள் மீது ஏராளமான குற்றங்களை சுமத்துகிறோம். இவர்கள் பண்படாதவர்களாகச் சீரழிந்ததற்கு யார் பொறுப்பேற்பது? நாமும்தானே பொறுப்பு.

 மாணவர்கள் அரசியலில் பங்கேற்றதால் வளர்ந்த திமுகவின் நரித்தனம் நினைவிருக்கிறதா.

 மாணவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று திமுக தொடங்கிய தடைகளின் தொடர்ச்சிதான் இன்று சமூக அறிவும் அரசியல் பொறுப்புணர்ச்சியும் அறுபட்ட தலைமுறைகளாக உருவாகியுள்ளது.

குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுத்துள்ள சுயநலவெறி சிந்தனைகள்தான் தலைமுறைகளை சமூகப் பொறுப்பற்ற அலட்சியவாதிகளாக உருவாக்கியுள்ளது.

 

 அரசியல் பங்கேற்பை அறுத்தெரிந்த வன்முறையை ஒற்றைக் கரங்களால் சமூகம் எழுந்து வீழ்த்தாததன் விளைவுதான் இன்றைய உள்ளீடற்ற இளம் தலைமுறைகள்.

 

 அரசியலில் இருந்து துண்டிக்கப்பட்டதால் படித்த முட்டாள்கள் உருவெடுத்துள்ளார்கள்.

 கல்வி முறையில் தாய்மொழித் திறன் அறுபட்டதால் சிந்தனை திறன் இழந்த தற்குறிகளாக உருவெடுத்துள்ளார்கள்.

 சிந்தனைத்திறன் அறுபட்டதால் வரலாற்று உணர்வை இழந்தார்கள்.

 வரலாற்று உணர்வு மங்கியதால் சமூக  அக்கறையையும் மேம்பட்ட அறிவையும் இழந்தார்கள்.

 சமூக உணர்விலிருந்து துண்டிக்கப்பட்டு சட்டை உடுத்திய மந்தைகளாகத் திரிகின்றார்கள்.

 மனித நிலையில் இருந்து மந்தைகளாகத் தாழ்ந்துதான் தற்குறிகளாக சிதைந்து இருக்கிறார்கள்.

 

 தற்குறிகளிடம் தாய்மொழித் திறன் இருக்காது. தற்குறிகளிடம் சிந்தனை திறன் இருக்காது. சிந்தனைத் திறன் இல்லாததால் செயல் திறன் இருக்காது.

 செயல்திறன் இல்லாததால் கருத்தாளுமை இருக்காது. செயல் தகுதிக்கு அடித்தளமான கருத்தாளுமை இல்லாததால் தகுதியற்ற செயல்களில் ஈடுபடும் தலைமுறைகளாகத் தற்குறிகள் திகழ்கிறார்கள்.

 செயல் தகுதியற்ற இவர்களிடம்தான் தகவல் தொழில்நுட்ப புரட்சிகர தொழில் நுட்பங்கள்  கை சேர்ந்தன.

 தகுதியற்ற செயல்களுக்கு தொழில்நுட்பகளைப் பயன்படுத்தினார்கள். காட்சி பிம்ப நோய்களில் வீழ்ந்தார்கள். காட்சி போதை வன்முறைகளில் செயல்களை மறந்தார்கள். உண்மை வாழ்வின் சவால்களை மறந்து காட்சி போதைகளில் புதைந்தார்கள்.

 காட்சி பிம்ப நோயின் ரசிக போதையிலிருந்து புதிய அரசியலை தொடங்கினார்கள். இந்த அரசியலில் லாபவெறிக்கும் ஆதிக்க வெறிக்கும் பலியாகும் ஆடுகளாக தங்களையும் தன் சமூகத்தையும் மந்தைகளாக நிறுத்தியிருக்கிறார்கள். இது தப்ப முடியாத தருணம். நம்மை மந்தைகளாக்கிய இந்தத் தலைமுறைகளை மனிதர்களாக உயர்த்தாவிட்டால் சமூகம் நரபலியாவது உறுதி.

 சமூகம் முழுதும் தற்குறி மந்தைகளின் பிடியில் சிக்கி இருக்கிறது. தற்குறிகள் நம் தலைமுறைகள்தான். அவர்களை எதிரிகளாக வீழ்த்த முடியாது. அவர்களை இழந்து ஒரு சமூகம் தன் வாழ்வை தொடர முடியாது.

 

 ஒரு சமூகத்தை பலியிடும் முயற்சி நம் தற்குறி தலைமுறைகளின் வழியாக நிகழவிருக்கிறது. ஆனால் இந்த சமூகம் உயிர் வாழும் தொடர்ச்சி நம் தலைமுறைகளை தன்மானமுள்ள மனிதர்களாக உருமாற்றுவதில் இருக்கிறது.

 மொத்த சமூகமும் நம் தலைமுறைகளுக்கு புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டும்.

 தலையற்ற நம் தலைமுறைகளை மனிதர்களாக உயர்த்த வேண்டும்.

 பேரழிவிலிருந்து மனித குலத்தை மீட்கின்ற மேன்மையான சுழற்சியில் தமிழகம் ஈடுபட வேண்டும்.

 அதற்கு தலைமுறைகளை எழச்செய்ய வேண்டும். அதற்கான வியூகங்களை மேற்கொள்ளும் தகுதி பெற்றால் தமிழகத்தின் தலை தப்பும்.

No comments:

Post a Comment

சாதிப்பித்து

  சாதிப்பித்து முனைவர் புதியவன்   உங்களுக்கு எந்த வயதில் சாதியை பற்றி தெரிந்தது?  எப்படி புரிந்து கொண்டீர்கள்?  சாதியை நீங்கள் புரி...

அதிகம் பார்க்கப்பட்டவை