Wednesday, December 8, 2021

இலக்கிய தாகம்

 

இலக்கியத் தாகம் இல்லாதவர்களும்

இலக்கியம் அனாவசியம் என்பவர்களும்

இலக்கியம் போதையென ருசிப்பவர்களும்


வெளியிலுள்ள ஆபத்துக்களை அறியாமல்

கண்ணாடி உலகில்

சுதந்திரமாக நீந்தும்

முட்டாள் மீன்கள்

வந்த வழியை மறந்தவர்கள்

செல்லும் பாதை புரியாதவர்கள்

பொருளியல் போக்கை உணராதவர்கள்

பண்பாட்டை உயர்த்த முயலாதவர்கள்

அரசியல் தெளிவு இல்லாதவர்கள்

மனித மாண்புகளைப் புதைத்தவர்கள்

 

மொத்தத்தில் இவர்கள்தான்

மன வளர்ச்சியற்ற முடவர்கள்

தம்மை முழு மனிதரென

தாமே நம்பிக்கொள்ளும் கோமாளிகள்

 

உண்மையில்

இலக்கிய உணர்வற்ற இத்தகைய நோயாளிகள்

பாசிசப் பாம்பும்

இலாபவெறி கழுகும்

சூழ்ந்திருக்கும் வாழ்வில்

குஞ்சுகளை மறந்து இரைபொறுக்கி பிழைக்கும்

பொறுப்பற்ற மனிதர்கள்

 

அறிவு முதல் ஆழ்மன உணர்வுவரை

மனிதகுலத்திலிருந்து அறுபட்டவர்கள்

இயற்கையின் அரவணைப்பை மதிக்காதவர்கள்

எதார்த்தத்தின் இதயத்துடிப்பை உணராதவர்கள்

சுயநல வெறி புழுவாய் நெளிபவர்கள்

நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படும் சருகுகள்

மனிதகுல இலக்குகளில் துளியும் எண்ணமில்லாதவர்கள்

குப்பைத்தனமான இலக்குகளை மூச்சில் சுமப்பவர்கள்

மனிதர்களால் பிழைப்பவர்கள்

ஆனால்

மனிதர்களாக இல்லாதவர்கள்

 

நாளைய தலைமுறைகளின் இன்றைய கல்லறைகள்

 

மனித செயல்களில்

உயர்ந்த இலக்கிய வெளிப்பாடு

இல்லாத சமூகம்

சமூகமல்ல

வெறும் நடைபிணம்

 

 

 

 

Wednesday, November 24, 2021

சவக்குழி

 

சவக்குழி 

புதியவன்


இலாப வெறி தன் தூரிகையில் வரைந்த ஓவியம்

நாம்  சுயநலப் புழுவாய் நெளிகின்றோம்

 

எத்தனை விதமான வண்ணங்கள்

எண்ண முடியாத ஜாலங்கள்

கண்கள் கூசும் வெளிச்சங்கள்

எச்சில் ஊறும் விருப்பங்கள்

மூக்கைத் துளைக்கும் வாசங்கள்

முடிவே இல்லாத் தொடக்கங்கள்

பொய்யாய் பந்த பாசங்கள்

தொலைந்தன மனித உறவுகள்

கண்ணியமற்ற வாழ்க்கைக்கும்

கவர்ச்சிமிக்க ஆடைகள்

 

இலாப வெறி தன் தூரிகையில் வரைந்த ஓவியம்

அதில் சுயநலப் புழுவாய் நெளிந்து சாவதே

ஒவ்வொரு மனிதரின் பாத்திரம்

 

இயற்கை சமூகம் இரண்டுடனும்

மனிதருக்கு இருக்கின்ற

இடைப்பட்ட உறவென்பது

பிழைப்பு நுகர்வு மரணம்

என்ற மும்முனை உறவுதான் என்பது

நவீன முதலாளியத்தின் இலாபவெறி

நமக்கு நிர்பந்தித்திருக்கும் நிலைப்பாடு

இது மனிதகுலம் கண்டுள்ள

ஆகப்பெரிய அறியாமை

இலாபவெறியால் நாம்  சுமந்த

ஆகப்பெரிய இழிநிலை

 

பிழைப்பிற்கான முயற்சிகளில்

நாம் வாழ்வதற்கே மறந்துபோனோம்

 

பிழைப்பு நுகர்வு மரணம்

என்ற மும்முனை சுழற்சியில்

வாழ்ந்தோமோ இல்லையோ!

இழந்ததும் தொலைத்ததும் ஏராளம்…

 

நாம் நாங்கள் என்ற ஒற்றுமையைத் தொலைத்து

நான் எனக்கு என்ற அகந்தையில் விழுந்தோம்

எல்லோருக்குமான அறிவைத் தொலைத்தோம்

மேன்மையான உழைப்பைத் தொலைத்தோம்

உயர்வதற்கானப் பண்பாட்டைத் தொலைத்தோம்

அரசதிகாரத்திற்கு குனிந்து குனிந்தே

தலைமைத்துவத்தைத் தொலைத்தோம்

நம் தலைமுறைகளின் நல்லுலகம் பற்றிய கனவுகளைத் தொலைத்தோம்

 

இலாப வெறியின் வேகத்தில்

சுயநல வெறியின் மயக்கத்தில்

நாம் பிழைத்தது துளிதான்

தொலைத்தவை கடல்தான்

 

Tuesday, September 28, 2021

புதியவன் எழுத்துக்கள் மீதான விமர்சனப் பதிவுகள்...

 


புதியவன் எழுத்துக்கள் மீதான விமர்சனப் பதிவுகள்...


விமர்சனப் பதிவுகளுக்கு முன்பாகச் சில வார்த்தைகள்... “அறிவெனும் பெரும் பசி” (ஊடாட்டம் ஆய்விதழில் இக்கட்டுரையின் இறுதிப்படுத்தப்படாத வடிவம் வெளிவந்திருக்கிறது.) என்றக் கட்டுரையிலிருந்து  “நீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம்” என்ற நூலை திரும்பிப் பார்க்கிறேன்.
      குறைந்தபட்சம் எனது சக்தியால் சேகரிக்கப்பட்ட நேர்மையான விமர்சனங்களிலிருந்து மட்டுமே திரும்பிப் பார்க்க விரும்புகிறேன். இவற்றில் நேர்மறையான விமர்சனங்கள் நிறைய விடுபட்டுள்ளன.. ஆனால் எதிர்மறையான விமர்சனங்களை முழுக்கவும் பதிவு செய்துள்ளேன்.
       சமூகவிஞ்ஞானக் களங்களிலிருந்து இந்தச் சமூகத்திற்கு எவை தேவையென நான் உணர்ந்திருக்கிறேனோ அவற்றையேச் செய்ய முயன்றிருக்கிறேன். இத்தகைய அடிப்படையிலிருந்து மட்டுமே எனது எழுத்து முயற்சி தொடர்கின்றது.
      இந்த முயற்சி சமூகளாவிய நிலையில் பல்வேறு பரிமாணங்களில் விரிந்து பரவ வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த விருப்பமும் சமூகத் தேவையின் அடிப்படையிலேயே தோன்றியிருப்பதாக உணர்கிறேன். இதற்கானப் புரிதலை உருவாக்கிப் படிப்பினை பெறுவதற்காகவே கிடைத்த விமர்சனங்களை நேர்மையாகத் தொகுத்திருக்கிறேன்.
      நான் எத்தகையவர்களை வாசகர்களாகக் கருதி எழுத்து முயற்சியில் ஈடுபடுகிறேனோ அவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட விமர்சனங்களே பெரும்பகுதி. சமூகவிஞ்ஞானக் களங்களில் புதிதாக அறிமுகமாகிறவர்களுக்காக... சமூக விஞ்ஞானிகள் அமைப்பாக்க விரும்புகின்ற வெகுமக்களுக்காக... எழுத்துக்களைப் படிப்பதன் மூலமாக சிந்தனையையும் செயலையும் உணர்வுகளையும் சமூகளாவிய நிலையில்  பக்குவப்படுத்த முடியுமா என்றக் கேள்வியுடன் படிக்க முயல்கின்ற படிக்கத் தெரிந்த மக்களுக்காக... படிக்கத் தெரியாத மக்களுக்குப் பேச்சிலும் செயலிலும் சமூக அறிவை ஊட்ட முயல்கின்ற சமூக அக்கறையுடையத் தோழர்களுக்காக... சமூக அக்கறை, சமூக அறிவு, சமூகப் பாதுகாப்பு இவை மூன்றும் சங்கமித்திருக்கின்ற சமூக விஞ்ஞானிகளின் புத்துலகை நோக்கி கவனம் பெறுகின்ற சகமனிதர்களுக்காக... என இவர்களுக்காகவே நான் எழுத முயல்கிறேன்.
      நான் எழுத்து வடிவில் பேசுவது உரியவர்களின் உணர்வுகளுக்குச் சரியாகப் பயணப்படுகிறது என்பதை இவர்களின் விமர்சனங்களிலிருந்து உணரமுடிகிறது. இந்த அங்கீகாரங்கள் எனக்கு உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தருகின்றன.
      நான் எத்தகையவர்களுக்காக எழுதியிருக்கிறேனோ அவர்களிடமிருந்து விலகியிருக்கக்கூடியவர்களுக்கும், எழுத்துக்களை பரிந்துரைப்பதன் மூலமாக சமூகஅறிவை சகமக்களிடம் விரிவுபடுத்துவதில் தெளிவான வேலைத்திட்டம் இல்லாதவர்களுக்கும் எமது எழுத்தை வாசிப்பது மிகவும் சிரமமான வேலையாகவே அமையும். அவர்களுக்கு இந்த எழுத்துக்கள் கூரிய கற்களாகவும், சகிக்க முடியாதவையாகவும், புரிந்துகொள்ள இயலாததாகவும், சிறுபிள்ளைத்தனமாகவும், முகம்திருப்பிச்செல்ல வைப்பவையாகவும் இருக்கின்றன. இவற்றையும் கடந்து எனக்குரிய வாசகர்களென நான் கருதாத இத்தகையவர்களிலும் எமது நோக்கத்தை அங்கீகரித்து எழுத்துக்களை ஏற்றுக்கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
      சமூக மாற்றம் என்பது தன்னையும் சக மனிதர்களையும் மாற்ற முயல்வதிலிருந்துத் தொடங்குகிறது.
சமூக நெருக்கடிகளில்
மன அழுத்தங்கள் தற்கொலைகளைத் தூண்டுகின்றன...
சமூக அழுத்தங்கள் தியாகங்களைத் தூண்டுகின்றன...

      நாம் ஒவ்வொருவரும் தியாக வாழ்க்கை வாழ்கிறோமோ இல்லையோ சமூகமாற்றத்தில் அவரவர் சக்திக்கு உட்பட்ட அளவிலேனும் பங்கேற்க முயல்கிறோம் என்பதாக நம்புகிறோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே நான் படிப்பினைக்காகச் செய்த விமர்சனத் தொகுப்பின் சிறிய முயற்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள முயல்கிறேன்.
      இத்தகையப் பகிர்வை சுயவிளம்பர ஆர்வத்தில் செய்யவில்லை. ஒரு வேளை இதனைச் சுயவிளம்பர முயற்சியாக கருத விரும்பினால் நான் தலையிட விரும்பவில்லை. அது உங்கள் கருத்துரிமை. பகிர்வுக்கான எமது விருப்பம் ஒன்று மட்டுமே. என் புரிதலுக்கு எட்டிய சமூகத்தேவையின் அடிப்படையில் இதனைச் செய்வது எனது சமூகக்கடமையாக உணர்கிறேன்....
அறிவன்புடன்
 
*
“அறிவெனும் பெரும் பசி” என்றக் கட்டுரையின் விமர்சனங்களிலிருந்து தொடங்கி “நீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம்” என்ற நூலுக்கான விமர்சனங்களுக்குச் செல்வோம்..
*
“அறிவெனும் பெரும் பசி” விமர்சனப் பதிவுகள்...
1.திரு. ------ ( பெயர் சொல்ல விரும்பவில்லை. இவர் மிகச்சிறந்த இலக்கிய ரசனையாளர், படைப்பாளி, புதுச்சேரியில் மக்களுக்கான இலக்கிய மையத்தை உருவாக்குகின்ற முயற்சியில் இருப்பவர். பெரும் பெரும் இலக்கிய ஜாம்பவான்கள் பலரிடமும் நட்பு கொண்டிருப்பவர். இலக்கியச் சுவைஞர் என்று அறிமுகம் செய்தால் மிகவும் பொருந்தும்.. திருத்தப்பட்ட பழைய வடிவிலிருந்து விமர்சித்தார்.)
      கட்டுரை சுத்தமாகப் புரியல. கேடி சிதம்பரம்னு எப்படி ஒரு சகமனிதரைத் திட்டலாம். தன்னுடைய பாத்திரம் பற்றிய விமர்சனத்தை வாசகர்களிடம் விட்டுவிடுவதுதான் நல்ல படைப்பாளருக்கான நாகரீகம். நீங்களே கேடி என்று விமர்சிக்கக் கூடாது. இந்தக் கட்டுரையில முன்னுக்குப் பின்னான முரண்பாடு நிறைய இருக்குது. மேனி அழகைச் சோகக் கண்கள் முழுங்கிவிட்டன. இந்த வரியே முரணாக இருக்கு. இந்தப் பெண்ணை அறிமுகத்திலேயே கருத்த மேனி, பாத்திரம் தேய்த்துக் காய்த்துப்போன கைகள் என்றெல்லாம் அழகில்லாதவளாகச் சித்தரித்துவிட்டு இந்த வரியை எழுதியிருப்பது பொருத்தமற்றது. கட்டுரை முழுதும் விரக்தியே வெளிப்படுகிறது. இது 1980களில் உருவான எழுத்து வடிவம். நீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம் என்ற  புத்தகத்தைப் படிச்சேன். சிறுபிள்ளைத்தனமானப் புத்தகம். கதைகள் பலவும் உடன்பாடில்லாதவை. கோட்பாடுகளைத் திணிக்கிறது, கோட்பாடுகளை விளக்குறது, இதுன்னா எதுக்கு? எடுத்துக்காட்டுக் கதைகளைச் சொல்வதற்கு என்னத் தேவை இருக்கு? அதுவும் ஒரு மட்டமானக் கதை. கொஞ்சங்கூட பொறுத்தமில்லாதக் கதை. சமூகவிஞ்ஞானிகள்னா யாரு? தனிமனிதக் கருத்துநிலைப்பாட்டை நான் ஏன் தெரிஞ்சுக்கணும்? நான் ஏன் சமூகத்தை மாற்றனும்? யாரோ உங்க மூளையில் திணிச்சதையெல்லாம் பேசிட்டிருக்கீங்க. தனி அறையில் கண்ணை மூடிட்டுப் பேசிட்டிருக்கீங்க. இந்தக் கட்டரைய யாராவதுப் படிச்சா தலை சுத்திக் கீழே விழுந்திடுவாங்க.. தயவு செய்து கொடுத்துறாதீங்க, உங்க பெயர் கெட்டுவிடும்.. ஏன் எழுதுறீ்ங்க? யாருக்காக எழுதுறீங்க? வெறும் தலைப்புக்காக எழுதாதீங்க. நல்ல தலைப்புக் கிடைச்சுட்டா நாலு நாளு உட்கார்ந்து மடமடன்னு கட்டுரை எழுதுறத நிறுத்துங்க. நல்ல தலைப்பு ஆனால் கட்டுரை பெரிய ஏமாற்றத்தைத் தருது. உங்க கட்டுரை என் வேலையைக் கெடுத்துருச்சு. காலைல நான் ஒரு வேலையத் திட்டமிட்டு வந்தேன். ஆனால் உங்களிடம் ஒரு மணி நேரமா பேசிட்டிருக்கேன். உங்கள்ட்ட துணிச்சல், உணர்வு, சிந்தனை இருக்குது, ஆனால் வடிவம் இல்லை. நீங்க நிறைய வாசிக்கனும். வாசிப்பு போதாது. நீங்க நல்லா எழுத முடியும் புதியவன். ஆனால் இதுமாதிரி எழுதுவதை தயவு செய்து நிறுத்திருங்க.. நம்ம நல்ல இலக்கியங்களை உருவாக்குவோம்.
2இணையாளர்கள் செல்லப்பன் & கலைமணி (திருத்தப்படாத பழைய வடிவிலிருந்து விமர்சித்தார்கள்)
      காமுகன் காமுகி சொற்களைப் பயன்படுத்தியிருப்பதை வன்னையாகக் கண்டிக்கிறோம். கயவர்கள் என்ற சொல்லை மாற்ற வேண்டும். சமூக அறிவுக் கேள்விகளைச் சுருக்கலாமே... சமூகவிஞ்ஞானிகள் யார்? மற்றபடி நல்லாருக்குது. விசயமுள்ளக் கட்டுரை. பார்த்ததும் ஆர்வத்தோடு படிக்கிற கட்டுரை இல்லை. விசயம் தேடி படிக்க விரும்புறவங்களுக்கான கட்டுரை. எனக்குப் படிக்கையில் முன்பக்கம் படிச்சது பின்பக்கம் மறந்துபோயிடுது.  குமாரு படிச்சாருண்ணா புரியாமல் தலைசுத்திரும், அப்பறம் பேருக்குன்னு நல்லாருக்குண்ணு சொல்லிக் கொடுத்திருவாரு. அறிவியல் கண்ணோட்டம் என்ற வார்த்தை திடீர்னு வருது.
3.தோழர் சத்யபாலன்
      நல்லா வந்துருக்கு தோழர். வாழ்த்துக்கள். உணரும் விதமாக அமைந்திருக்கு. உங்க முயற்சி எனக்கு செ. கணேசலிங்கனுடைய குந்தவிக்குக் கடிதங்களை நினைவுபடுத்துது.
4.தோழர் சுரேஷ்
      நல்லா வந்துருக்குத் தோழர். பயன்படக்கூடியக் கட்டுரை. குழந்தைக்குச் சொல்வது போல வாசகர் எல்லோரையும் கருதிச் சொல்வது சரியாக முடியுமானு யோசிங்க.. தத்தவம் குழந்தைக்கு உரியதா? அறிவெதிர் தத்துவம் என்ற சொல் சரியானதா?
5.ஹரி கிருஷ்ணன் ME1st
      சமூகத்திற்குத் தேவையானது. படிக்கப் புரியுது. சோர்வு இல்லை. குற்ற உணர்வு ஏற்படுது. மாற்றிக்கணும்னு தோணுது. மாற்றிக்க நினைச்சாலும் மாற்றிக்க முடியாதுங்கிறமாதிரியும் தோணுது. கதைக்கு முன் அறிமுகம் தேவையில்லை. நீங்க சொல்லவருவதை உணர்வதற்குப் இது பொருத்தமானக் கதை.
6.சு. குமார் – முனைவர் பட்ட ஆய்வாளர்
      நல்ல கட்டுரை. அவசியம் தேவையானது. கதையில் 2 இடத்தில் வரியை மாற்றலாம்னு தோணுது. இந்த விசயம் கண்டிப்பாகத் தேவைனு புரியது. வழிகாட்டுறவங்க யாருண்ணு தெரிஞ்சிக்க முடியல. அவங்களைத் தெரிஞ்சுக்கனும்னு ஆர்வம் இருக்குது. இது எல்லோருக்கும் போய் சேரனும். சோர்வில்லாத மொழிநடை. 8 கேள்விகளுக்கும் விடை தெரிஞ்சுக்கனும்னு ஆர்வம் வருது. விடைகளை விளக்காமல் போயிருப்பதுதான் பலவீனம்..
7.ராஜகுமாரி – முனைவர் பட்ட ஆய்வாளர்
      ரொம்ப நல்லா எழுதுறீங்க. நல்ல எதிர் காலம் உங்களுக்கு உறுதி. வார்த்தைகள் புதுசாக இருக்கு. தேவையான எழுத்துமுறை. சமூக விஞ்ஞானிகளைப்பற்றியும் உலகப்பார்வை போன்றவை பற்றியும் விளக்கி எழுதிருக்கலாம்னு தோணுது. கேள்விகள் அதிகமாகத் தெரியுது. முதல் பக்கம் மாற்றக் கூடாது. 2ம் பக்கக் கேள்விகளைச் சாராம்சமாகச் சுருக்கி அமைக்கலாம். மடையர்கள்னு திட்டும்போது நானும் ஒரு சக மனிதர் என்பதால் எனக்குக் கஷ்டமாக இருந்துச்சு. அதை மாற்றிக்கனும்னு தோணுது.
8.ரீகன் (page டிசைனர்)
      ரொம்பச் சரியா இருக்கு. நல்லா போகுது. கேள்வி நெறயா கேக்குறீங்க. பதில் விளக்கினால் எங்களுக்கும் பயனுடையதாக இருக்கும். தேவையை உணர்த்துற எழுத்து..
9. தோழர் ராம்குமார்
      வாழ்த்துக்கள் தோழர். நேரில் விவாதிப்போம்..
10.தோழர் காமராசர்
      கட்டுரை நல்லா வந்துருக்கு. கதை ரொம்ப மொக்கையா இருக்குது. மோசமான கதை என்று உணர்கிறேன். ஒரு போர்னோகிராப்பி கதையை எடுத்துப் பயன்படுத்தியுள்ளீர்கள். இதற்குப் பதிலாக ஒரு நாட்டுப்புறக் கதையையோ அல்லது எழுத்தாளளர்களின் கதையையோ பயன்படுத்தியிருக்கலாம்.
11. அமுரா ராஜவேலு (B.A.english)
      1st ரொம்ப அருமையாக இருக்குண்ணா. 3 இடத்தில் தடையாகுது. சரிபடுத்துங்கண்ணா. மனிதன் இயற்கையைப் பகைத்துத் தோன்றியுள்ளான், நீங்கள் எப்படி இல்லைனு சொல்லலாம். பல இடங்களில் அருமையானதாக தேர்ந்த மொழிநடை அமைந்திருக்கு. இந்தக் கட்டுரையைப் படிக்கயில எனக்கு “கடவுள் என்பது என்ன” அஷ்வகோஸ் புத்தகம் படிச்சது நினைவுக்கு வருது.
      2nd அண்ணா இந்தக் கட்டுரைய 2வது தடவ படிக்கயில ரொம்ப சந்தோசமாக இருக்குண்ணா. நீங்க எழுதுனதிலேயே ரொம்ப எஸ்ட்ரீமா வந்துருக்குண்ணா. ரொம்ப முக்கியமானக் கட்டுரை. எல்லாருக்கும் பரப்பனும். 1st படிச்சப்ப இந்த அளவு நான் நினைக்கல்ல. நல்லாருக்குதுண்ணா. மொழிநடையை மட்டுமே கவனிச்சிட்டுப் போயிட்டேன். விசயம் புரிஞ்சது, ஆனால் முக்கியத்துவத்தை இப்பதான் உணருகிறேன். நான் டீவி பார்க்கும் போது கிரிக்கெட் படம் எதுப்பார்த்தாலும் உங்க கட்டுரை நினைவுக்கு வந்து டிஸ்டர்ப் பண்ணுதுண்ணா. நான் முடிஞ்சவரை ஜெராக்ஸ் போட்டு பரப்புவேன். ஒருசில வார்த்தைகளை இன்னும் சரி செய்ய முடியும்னு தோணுது. அதாவது, சமூக அறிவுன்னா இந்த எட்டு மட்டுந்தான் என்பதுபோல ஏன் சொல்லனும். இதத்தாண்டி அடுத்து கண்டுபிடிக்கிறதுக்கு வழிவிடுவதுபோல வார்த்தைகளை அமைக்கலாமேன்னு தோணுது.. ரொம்ப எஸ்ட்ரீம்மான கட்டுரைண்ணா.. எனக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கிறதுன்னே தெரியல...
      3rd பல வரிகள் மிக அழகாக அமைந்திருக்கு. திரும்பவும் படித்துப் பார்க்கத் தூண்டுகிறது. திரும்பத்திரும்பப் படிச்சப் பிறகே அடுத்துப் படிக்கிறேன். தொடர்ந்து படிச்சு முடிக்கணும்னு நினைக்கிற மாதிரி வரிகள் உற்சாகமாக அமைந்திருக்கு. கதையைப் பிறகுச் சொல்வேன் என்ற அணுகுமுறையே நல்லாருக்குண்ணா.. கொல்லிக்கட்டைகளா வாழ்க்கை... இருட்டு மடிந்து பேரொளி பெருகிற்று...இந்தப் பத்திகள் என்னை திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டின. நமது சமூகஅறிவின் தேடல்கள் தகவலறிவுக் களஞ்சியங்களைத் தாண்டுவதே இல்லை... காலங்காலமாக அறிவெதிர் தத்துவத்தின் ஆதிக்கத்திலேயே வாழ்ந்து பழகியவர்கள் நாம்... நாம் எவற்றெயெல்லாம் பார்க்க வேண்டும்... சமூகம் ஒரு வீட்டின் அமைப்பு போல என்று எடுத்துக்காட்டி விளக்கிட்டுப்போற விதம்... இன்று மணலும் இல்லை நீரும் இல்லை... நம் கண்களுக்கு வீடுகள் தெரிகின்றன வீட்டின் அடித்தளங்கள் தெரிவதில்லை... உற்பத்திமுறை பற்றி விளக்கும்போது இந்தியச் சூழலில் சாதியக் குலத்தொழில் பற்றிய அறிவும் இவற்றில் அடங்கும்னு குறிப்பிட்டுப்போறது... எல்லாமே அருமையாக இருக்குண்ணா. பூவைப்போலன்னு சொல்லாம வெறும் குழந்தையாகவே சொல்றது சரியாக இருக்கும்னு தோணுது. கீழ்வீடு என்ற வார்த்தைக்குப் பதிலாக வேறு வார்த்தை பயன்படுத்த முடியுமான்னு பாருங்கண்ணா..  “AIM என்ற சமூகவிஞ்ஞான அமைப்பில்..” என்ற பத்தியை “நம் கவனங்கள் சமூக விஞ்ஞானிகளை நோக்கி அமையட்டும்..” என்ற பத்திக்கு முன்னதாகச் சேர்த்தால் ரொம்பப் பொருத்தமாக இருக்கும்ண்ணா. புகழ்றதா நினைக்காதீங்கண்ணா.. நான் உங்களுக்காகச் சொல்லல்ல. உங்க எழுத்தைப்பற்றிப் பேசும்போது உண்மையைச் சொல்லியாகனும். உங்க எழுத்தைப்பற்றி சொல்றேண்ணா.. மிகப் பெரிய விசயங்களை மிகச் சாதாரணமாக அழகாகச் சொல்றது அனுபவம் முத்திய பெரிய எழுத்தாளர்களுக்குத்தான் வரும். அவர்களுக்கே ஒரு 70 சதவிகிதம்தான் சாத்தியம். ஆனால் உங்களுக்கு இப்பவே 20சதவிகிதம் வந்துருச்சுண்ணா. எனக்குத் தெரிஞ்சு நான் வாசிச்சதிலேயே உங்கள்ட்டதான் அதிகம் உணர்ந்திருக்கிறேன். உள்ளம் சுடும் கட்டுரையிலும், உன்னைக் காதலிக்கக் காத்திருக்கிறேன் போன்றக் கவிதையிலும் ரொம்பவும் உணர முடிஞ்சது. புதுமையாகச் சொல்லிட்டிருக்கீங்கண்ணா. கடவுள் என்பது என்ன? என்ற புத்தகம் ரொம்பப் பிடிச்சதுக்குக் காரணம் அவர் சொல்லிட்டுப்போற முறைதான். ஆனால் அதுலகூட புதுமையாகச் சொல்றதா எனக்கு எதுவும் படல. ஏற்கனவே சொல்லிட்டிருக்கிறத அவரும் சொல்றாரு. சோர்வு தட்டாத நடையில் எளிமையாகச் சொல்லிருக்காரு. ஆனால் உங்க எழுத்துல புதுமைன்னு சொல்றதுக்கும் நிறைய இருக்குதுண்ணா....
12. தேவி – முனைவர் பட்ட ஆய்வாளர்
      கட்டுரைய முதல் பகுதி 2ம் பகுதின்னு பிரிச்சு பேசலாம் சிவா. முதல் பகுதில கதை பல விசயங்களுக்குப் பொருந்தக் கூடியதாக இருக்குது. ரொம்ப சரியாகச் சொல்லிருக்கீங்க. 2ம் பகுதிய நான் இன்னும் சரியாக புரிஞ்சுக்க வேண்டியதிருக்கு. பொருளுற்பத்தி அல்லாதது எல்லாம் எப்படி மேல்கட்டுமானம்னு சொல்ல முடியும்? மேல் கட்டுமானத்துலயும் பொருள் உற்ப்பத்தி இருக்குதே.  நான் இந்தக் கட்டுரையை இரண்டு தடவை படிச்சுட்டேன். நேரில் பேசும்போது 2ம் பகுதி பற்றிக் கூடுதலாகவும் விளக்கமாகவும் எனக்குச் சொல்லுங்க சிவா...
13. திரு. இலக்கியன் ஆறுமுகம்  
      இந்த மாதிரிக் கட்டுரையைப் படிச்ச அனுபவம் இல்லாததால பாண்டியன் பேசிருப்பாரு. இந்தக் கட்டுரை நல்லா வந்திருக்கு. முன் பக்கம் கொஞ்சம் குறைச்சுருக்கலாம். திரைப்படம், மஞ்சள் பத்திரிக்கை படித்தல் பற்றியதாகப் பேச்சை நீட்டிருக்க வேண்டாம். பார்வையைப் பலமடங்கு இழந்துவிட்டோம் என்பது ரொம்பச்சரி. உள்ளத்தியல் என்ற வார்த்தையே எனக்குப் புதுசா இருக்குது. நல்லா வந்திருக்கு..
14. புதிய விடியல் (சிற்றிதழ்)
      Thanks for sending an essay. but It Too Long. So Please Summarize It with in 300 words. that is very useful to read and print.
15. எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் (சூரியதீபன் என்ற பெயரில் நன்கு அறியப்பட்டவர்)
      ஊடாட்டத்தில் உங்க கட்டுரை ரொம்பவே நல்லா வந்திருக்குது. தத்துவார்த்த விசயங்கள் கோட்பாடுகள் பற்றி பலகாலமாகவே நான் படிக்கிறதே இல்ல. கலை இலக்கியத்துலதான ஆர்வமாக செயல்படுகிறேன்.  இந்தக் கட்டுரையை ரொம்ப ஆர்வமாகப் படிக்க முடிஞ்சது. மேல்கட்டுமானம் அடிக்கட்டுமானம் பற்றி ரொம்ப எளிமையாகவும் நல்லாவும் சொல்லிருக்கீங்க. தத்தவத்தை எப்படி மண்ணுக்கேற்றபடி புதிய சொற்களைப் பயன்படுத்தி புதிய முறையில் சொல்றதுண்ணு இத படிக்கயில உணர முடிஞ்சது. இந்தமாதிரி இதற்கு முன்பு யாரும் விளக்க முயற்சிக்கலன்னு தோணுது. எனக்கு தெரிஞ்சு நீங்கதான் செய்திருக்கீங்க. இது ரொம்பவும் புதிய முயற்சி. ஊடகங்கள் எல்லாம் எப்படி மூளையில் தகவல்களைத் திணிக்கின்றன. எதைப்பற்றியும் யோசிக் விடாமல் செய்கின்றன. அறிவை கூர்மைபடுத்துவதற்குப் பதிலாக மழுங்கச் செய்கின்றன. இந்த உண்மைகளை ரொம்பவே நல்லா உணர்த்திருக்கீங்க. நாளைய தலைமுறைகளுக்காக இன்றே முளைத்திருக்கின்ற அத்தனை அநீதிகளும் வென்றுவிடும் என்பது மிக சரியான வரி. 10 பக்கம் இருக்குது. கொஞ்சம் சுருக்க முடியுமான்னு பார்க்கலாம். பெரிய புத்தகங்கள் வெளிவருவதைவிட சிறு வெளியீடுகள்தான் இன்று தேவை. சிறுவெளியீடாகக் கொண்டு வர முயற்சி செய்ங்க தோழர்...
16. தோழர் மனுவேல்
      அறிவெனும் பெரும் பசி படிச்சேன்டா. பண்பாடு பற்றி தவறான புரிதலிலிருந்து எழுதிருக்க. பண்பாடு மேல்கட்டுமானத்தில் மட்டும்தான் வரும். அடிக்கட்டுமானத்தில் தாக்கம் செலுத்துகிறது என்பதற்காக அதை அடிக்கட்டுமானமாகப் புரிந்துகொள்ள முடியாது.
17.ஐ.ரவிச்சந்திரன் (திண்டிவனம் விவசாயி, புதுச்சேரி பல்கலைக்கழக காவலாளி)
      தலைப்பே  ரொம்ப அழகா இருக்குது. சமூகஅறிவு வீட்டைக் கற்பனை செய்யும்போது இப்ப கட்டிட்டிருக்காங்களே ஹாஸ்டல் கட்டிடம் அதுதான் நினைவுக்கு வந்தது. வாங்க அந்தக் கட்டிடத்தப் பார்வையிட்டுக்கிட்டு பேசலாம். என் சந்தோசத்த எப்படி சொல்றதுன்னு தெரியல. இதை இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடனும். எல்லோரும் படிச்சுட்டாங்கன்னா போதும். தெரிஞ்சுருச்சுன்னா உண்மையிலேயே பெரிய விளைவுகள் உருவாகும்.

“நீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம்” விமர்சனப் பதிவுகள்...
1.இணையாளர்கள் செல்லப்பன் & கலைமணி
      படிக்கயில பல இடங்களில் நம்ம சிவாவால இப்படியும் எழுத முடியுமான்னு தோணுச்சு. கதையாகப் படிக்கிறதால எல்லோருக்கும் புரியும். கடைசியில அம்மாவுக்குக் கடிதம் ரொம்ப சூப்பர். இன்னைக்கு உள்ள நிலமையில எல்லோரும் படிக்க வேண்டியது. படிச்சா உணராம இருக்கவே முடியாது. ஒவ்வொரு கட்டுரையும் முக்கியமானது. 5ரூ, 10ரூ புத்தகம் மாதிரி வெளியிடலாமே.

2.தோழர் அழகுதேவி
      நான் அமைப்புக்குள் வந்ததும் குடும்பத்த சமாளிக்க ரொம்பக் கஷ்டப்பட்டேன். நான்  எங்க அம்மாகிட்ட எதையெல்லாம் பேச விரும்பினேனோ அத்தனையும் இந்தப் புத்தகத்துல இருக்குது. நம்ம சரியா யோசிக்கிறோம்னு புரிஞ்சுக்க முடிஞ்சது. எழுத்துமுறை, சொல்றவிதம், கதை சொல்றது மூலமாகப் புரிய வைக்கிறது எல்லாம் அருமையா இருந்துச்சுய்யா...கவிதை கட்டுரை எல்லாம் மொத்தமா சேந்திருக்கிறதுதான் புத்தகத்துடைய பலமே. ஒவ்வொரு கட்டுரையும் ரொம்ப முக்கியமானது. புத்தகம் முழுதையும் எல்லோரையும் படிக்க வைக்கணும். நாங்க எங்க தோழர்களோட கண்டிப்பா கலந்துரையாடுவோம்யா..
3.தோழர் சிவராம்
      நல்லா வந்துருக்குது. சொல்ல வந்தத சரியா சொல்லி முடிக்கிறீங்க. எழுத்து உங்களுக்கு நல்ல விதமாக கைவந்துருக்கு. சிறப்பு. தொடர்ந்து எழுதுங்க. உங்க எழுத்து ஆளுமையை விட்டுறாதீங்க. மதுரை வட்டாரத்தன்மை உங்களுக்கு ஏன் வரலன்னு புரியல. அது வந்திருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும். எல்லாத்தையும் ஒரே புத்தகத்துல சொல்லி முடிச்சுறனும்னு வேகம் காட்டிருக்கீங்க. அது தேவையில்ல. தனியா ஒரு கவிதை புத்தகம் வெளியிடுங்க. பேசப்பட வேண்டிய பல புத்தகங்கள் நிறைய கவனப்படுத்தப்படாமலும் பேசப்படாமலும் மறக்கடிக்கப்பட்டிருக்கு. அதுல இந்தப் புத்தகமும் சேர்ந்திடக் கூடாது. புத்தகத்தைப்பற்றி உடனடியாக அறிமுகக்கூட்டம் வாசகர் வட்டம்னு ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லுங்க தோழர்...
4.தோழர் காமராசர்
      புத்தகம் நல்லாதான் வந்திருக்குது. கவிதைகளைத் தேவையில்லாமல் சேர்த்திருக்கீங்க...


5. எழுத்தாளர் போப்பு
      நேர்மையான விமர்சனம்தான் சொல்வேன். மொழிநடை பிரச்சனையாக இருக்குது. முதல்முறை படிச்சப்ப ரொம்ப அதிருப்தியுடன் பாண்டிக்கிட்ட பேசினேன். மதிப்புரை எழுதுறதுக்காக 2வது முறை படிச்சேன். அப்ப எந்த அதிருப்தியும் எனக்குக் கொஞ்சங்கூட வரல. ஏன்னு எனக்கே புரியல. ஊன்றிப் படிச்சதால உணர முடிஞ்சது. ஆனால் சாதாரணமாகப் படிச்சா யாரலையும் படிக்க முடியாது. ஆர்வத்துடன் கவர்ந்து செல்லும் தன்மை இல்லை. சமூகவிஞ்ஞானம் ரொம்ப முக்கியமானத் துறை. அதுபற்றி எழுதிட உங்களுக்கு வயதும் அனுபவமும் போதாது. அதுக்காக எழுத வேண்டாம்னு சொல்லல. தொடர்ந்து எழுதுங்க. எழுத எழுதத்தான் வரும். பின்னாலிருந்தக் கட்டுரைகள் வாழ்வியல் அனுபவங்களுடன் பொருந்தி வருவதற்கான முயற்சியுடன் அமைந்திருக்கு. நல்ல முயற்சி. போதாமையை உணர்த்துகின்ற முயற்சிதான். நல்ல துணிச்சலான விசயம். தொடர்ந்து எழுதுங்க. முதல்ல நீங்க அதிகமாக வாசிக்கனும். உங்க இந்த எழுத்து யாருக்கும் ஆர்வமான முறையில் போகாது. தேவையில்லாமல் புதிய சொற்களைப் பயன்படுத்தக் கூடாது. புள்ளி, கமா, வார்த்தை பயன்பாடுபற்றி இறுதித் திருத்தத்திற்காக இன்னும் இன்னும் சரியாக்கணும் என்ற முயற்சி வேண்டும். சொல்றதுக்கு விசயம் இருந்தாலும் சொல்லும் முறை மிகவும் முக்கியமானது. அதிகம் படிச்சால் இது நமக்குப் படிந்துவிடும். அதனால் படிங்க. வாசிப்பு போதாது. உங்க புக் விற்பனையாகுறது சிரமம். பதிப்பகத்திடம் விசாரிச்சுப் பாருங்க. நான் புத்தக மதிப்புரையை நேர்மையாகத்தான் எழுதிருக்கேன். ஆனால் நம்ம பேசியவற்றைக் குறிப்பிடாமல் நேர்மறையானவற்றை மட்டுமே எழுதியுள்ளேன். 

புதியவன் எடுத்துரைக்கும் சமூகவிஞ்ஞானம் - எழுத்தாளர் போப்பு –


6. சு. குமார் – முனைவர் பட்ட ஆய்வாளர்
      புத்தகம் ரொம்ப நல்லா வந்திருக்கு சிவா. புதிய முயற்சி. இது மாதிரியான வேற எந்தப் புத்தகமும் எனக்குத் தெரியல. ஒவ்வொரு விசயமும் எல்லாருக்கிட்டயும் போய் சேரும். ஆர்வமாகப் போகுது. தனித்தனிக் கட்டுரைய சின்ன புத்தகமாக வெளியிட்டா எல்லாரிடமும் எளிமையா சேரும். கண்டிப்பாப் படிச்சுப்பார்த்து யோசிப்பாங்க...
 7.ஆ.தே. செந்தில்குமார் (ஆசிரியர்)
      சிவா உன் புத்தகத்தை இரண்டு சாருக்குப் படிக்கக் கொடுத்தேன். ஒருத்தரு பொதுவாகப் புத்தகம் படிக்கிறவரு. இன்னொருத்தரு பொழுதுபோக்குக்காகப் புத்தகம் படிப்பாரு. 2வது சார் படிக்க அரம்பிச்சுட்டுப் படிக்கவே முடியலன்னு கொடுத்திட்டாரு. 1வது சார் முழுசாப் படிச்சிட்டு ரொம்பப் பாராட்டினாரு. பொழுதுபோக்குக்காகப் படிக்கிற சாதாரணப் புத்தகம் இல்ல. உண்மையிலேயே அக்கறையோடு படிக்கிறவங்களை இந்தப் புத்தகம் ரொம்பவும் கவர்ந்திடும். சமூக உணர்வோடப் படிக்கிறவங்களுக்கு இது ரொம்பவும் முக்கியமானப் புத்தகம்.
8.பன்னீர் (விகடன் பிரசுரத்தின் பணியாளர்)
      இந்தப் புத்தகத்தைக் கீழே வைக்கவே முடியல சிவா. புதிய நடை. இப்படியொரு நடையில் நான் படிச்சதே இல்ல. புதியவன் என்ற பெயர் ரொம்ப ரொம்பப் பொருத்தமா அமைந்திருக்கு. கடவுள் பற்றி உங்க கதையைப் படிச்சேன். உடனே உங்கள்ட்ட பேசனும்னு போன் செய்தேன். நானும் கடவுளைக் கும்பிட மாட்டேன். ஆனால் இந்து மதத்துல்ல உள்ள அறிவியலைப்பற்றி பேசனும்னு நினைக்கிறேன். இந்தப் புத்தகத்தை என் நண்பர் எதார்த்தமாகப் பார்த்தார்.  காரணமானவர்களைப் படிச்சதிலேயே உங்க மேலே பெரிய மதிப்பு ஏற்பட்டுருச்சு. உங்களை ரொம்பவும் பாராட்டுரார். நீங்க என் நண்பர்னு சொன்னேன். வாழ்த்துக்களைத் தெரிவிக்கச் சொன்னார். புத்தகத்தை எடுத்திட்டுப்போயி படிக்க ஆர்வமாக இருக்கார். நான் 60 பக்கம் முடிச்சிருக்கேன். முழுசாக முடிச்சிட்டு நேரில் வந்து சந்திப்பேன்...
9.கந்தசாமி ஐம்புலம் - முனைவர் பட்ட ஆய்வாளர்
      இந்தப் புத்தகம் சாதாரணமானதாகத் தெரியல. ஏதோ விருதுக்குத் தேர்வாகக் கூடிய புத்தகம் இது. நல்ல ஆற்றொழுக்கான நடை. எல்லாவற்றையும் நாம் இப்படியொரு நடையில் பேசினால்தான் சரியாக இருக்கும்னு தோணுது. இந்தமுறை ரெண்டு புத்தகங்கள் வெளிவந்திருக்கு. ரெண்டையும் முழுசாகப் படிச்சுட்டேன். 1வது தமிழ்ஒளியைப் பற்றிய ஒரு புத்தகம். ரொம்பவும் சோர்வையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கு. 2வது உங்கப் புத்தகம். ரொம்பவும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கு. உற்சாகத்தையும் மனநிறைவையும் தந்திருக்கு. இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் அவசியம் எழுதனும்னு நினைக்கிறேன்...
10. உதயா – இளமுனைவர் பட்ட ஆய்வாளர்
      எனக்கு ஆச்சரியமாக இருக்குது. ரொம்ப நல்ல புத்தகம் எழுதிருக்கீங்க. கவிதை எல்லாமே ரொம்ப அருமையா இருக்குது. உன்னைக் காதலிக்கக் காத்திருக்கிறேன் கவிதை படிக்க படிக்க அருமையாக இருக்குது. இப்படியொரு கவிதையைப் படிச்சதே இல்ல. அறிவியலை கதை சொல்லி புரிய வைக்கிறீங்க. இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது. நான் இந்தப் புத்தகத்தை வாங்கிக்கிறேன். எப்படி இப்படியெல்லாம் முடிஞ்சது!
11.தோழர் ராம்குமார்
      ரொம்ப நல்லா வந்திருக்குத் தோழர். தனிச் சிறப்பு என்னதுன்னா சமூக விஞ்ஞானங்கிறது முழுக்க ஒரு இலக்கியப் புத்தகமாகவே வடிவமைந்திருக்கிறது.. நீங்க தொடர்ந்து நிறையா எழுதணும் தோழர்...
12.சந்தனக்குமார் (axis bank staff)
      புத்தகம் ரொம்ப நல்லாருக்குது சிவா. 1st  மூன்று பக்கம்தான் கொஞ்சம் புரியாதமாதிரி  இருந்தது. ஆனால் அடுத்து எந்தப் பக்கமும் சோர்வே இல்லாமல் நல்லா போகுது சிவா.  வீட்டுக்காரியின் வீக்கங்களில் தேங்கியிருந்தது அந்த வேதனை... அந்த வரியை திரும்பத் திரும்பப் படிச்சேன் சிவா. ரொம்ப அருமையான வரி. இது மாதிரி கவரக்கூடிய வரிகள் நிறைய இருக்கு சிவா...
13.திரு.மு.இளங்கோ (பேராசிரியர்)
      புத்தகம் முழுசாகப் படிச்சேன். ரொம்ப நல்லா வந்திருக்கு. ஆழமான விசயங்கள் எல்லாம் பேசிருக்கீங்க. இயக்க அனுபவங்கள் இல்லாமல் எழுதியிருக்கவே முடியாது. இணையதளங்களிலும் பார்த்தேன். சரளமாகக் கவிதைகள் வாசிக்கிறீங்க. வாழ்த்துக்கள்...
14. குணாண்ணா (காவல்துறை பணியாளர்)
      உன்னை மாதிரி எழுதனும்னு அண்ணனுக்கு ஆசைடா. நான் தொடர்ந்து முயற்சி செய்வேன். நீதான் எனக்குக் கத்துக்கொடுக்கனும். உன் புத்தகத்த எல்லா விசேசங்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுக்கிறேன். படிச்ச நண்பர்கள் எல்லோரும் உன்னை ரொம்பவும் பாராட்டுறாங்க. புதியவன் இன்னும் நிறையா எழுதனும் Okva? உன் கவிதைகள் எல்லாம் ரொம்ப அருமையாக இருந்தது. திரும்பத் திரும்பப் படிச்சேன். எல்லோரும் காதல் கவிதை எழுதுவாங்க. உன்ன மாதிரி எழுதுனதா யாரையும் பார்த்ததில்லை. காதலையும் சமூகஉணர்வோடு எனக்குத் தெரிஞ்சு நீதான் எழுதியிருக்க. வேற யாராவது எழுதியிருந்தாலும் உன்னளவுக்கு எழுதியிருக்கமாட்டாங்கன்னுதான் தோணுது. காதல் கவிதை ரொம்ப சூப்பர். காதலியோட நீ பழகுறதா செஞ்சக் கற்பனைகள் ரொம்ப அழகா இருக்கு. உண்மையாவதற்கு அண்ணன் வாழ்த்துறேன். கல்வியைக் கிண்டல் பண்ணிருக்கிற கவிதை, பறவைக்கு பறக்கவும் பறக்காமலிருக்கவும் உரிமையிருக்குது அதுமாதிரிதான் ஓட்டுரிமையும்னு எழுதிருக்கிற கவிதை எல்லாமே சூப்பர்டா.. நானும் தொடர்ச்சியா எழுதுறேன். உன் அளவுக்கு நானும் சீக்கிரம் எழுதணும்டா தம்பி....
15. திரு.ஜெனார்த்தன் (PILC காசாளர்)
      புத்தகம் ரொம்ப அருமையாக வந்திருக்கு சிவா. வீட்லயும் படிச்சாங்க. நான் முடிச்சிட்டு  நண்பருடைய நூலகத்துக்குக் கொடுத்தேன்.  அவரும் படிச்சுட்டு ரொம்பவும் பாராட்டுனாரு. புத்தகம் பற்றி எழுதித் தருவதாகச் சொன்னாரு. நல்ல சிந்தனை. இது தொடர்பாக எந்த உதவினாலும் கேளுங்க சிவா. செய்திருவேன்.
16.தோழர் சேகர்
      நல்ல முயற்சி. அளவு மாற்றத்துக்கு மதிப்பெண் என்பது பொருத்தம் இல்லாத எடுத்துக்காட்டாக இருக்கிறது.

17.பிரவின் 9th (மதுரை மீனாட்சி மெட்சிக்குலேசன் பள்ளி)
      அண்ணா உங்கப் புத்தகத்தை எங்க சாரும் மேடமும் படிச்சுப் பாத்துட்டு ரொம்பவும் பாராட்டுனாங்க. உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லச் சொன்னாங்க. எங்க பிரேயர்ல 2 நாள் உங்க கவிதைய வாசிச்சாங்க.  (1.ஆங்கில சோறு போட்டு... 2.பறவையைப் பார்த்து அதிகாரமாகச் சொன்னது அடைமழை...)
18.தீனா 12th
      உங்க ஜெராக்ஸ் எல்லாம் படிச்சேண்ணா. ரொம்ப நல்லாருந்துச்சு. முழுக்க முழுக்க சமூக விழிப்புணர்வோட இருக்குது. இளைஞர்கள் எல்லாரும் அவசியம் படிக்க வேண்டியதாக உங்கள் எழுத்து இருக்குண்ணா. நல்லா எழுதுறீங்கண்ணா.
19.வினோத் (JDS பால்டெக்னிக் ஸ்கூல்)
      அண்ணா உங்க புக் ரொம்ப நல்லாருக்குண்ணு சொல்றாங்கண்ணா. எங்க ஸ்கூல்ல பிரதாப் சார் படிச்சுட்டு ரொம்பவும் புகழ்றாரு.  2 நாளா உங்க புக்க வச்சுதான் class fullaa ஓட்டிக்கிட்டு இருக்காராம். நான் class போகாம லீவு போட்டதால மிஸ் பண்ணிட்டேன். பசங்க எல்லாரும் சொன்னாங்க. என்னடா புத்தகம் கொடுத்து சார ஐஸ் வக்கிரியாடானு கேக்குறானுங்கண்ணா...
20.புவணாக்கா (புரொபொசனல் கொரியர் - லாஸ்பேட்டை)
      உங்க எழுத்து ரொம்ப புதுசா இருக்கு. ரொம்ப நல்லாருந்தது. சுதாகர் சார்க்கு தமிழ்ப் படிக்கத் தெரியாது. காதல் செய்ய விரும்பு... கட்டுரையப் படிச்சிட்டிருந்தேன். சத்தமாப் படிக்கச் சொல்லி அவரும் கேட்டாரு. படிச்சதும் உங்கள ரொம்பவும் பாராட்டினாரு. உண்மைய அப்படியே எழுதிருக்காருல.! நல்லா எழுதிருக்காரு! உங்க புக் வந்ததும் 10 copies வாங்கி எல்லோருக்கும் gift கொடுக்கணும்னு சொன்னாரு. உங்க புக் வந்ததும் எனக்குக் கொடுங்க. நான் வாங்கனும். உங்க புக் எப்படி வரும்னு எனக்கு இப்பவே தெரியுது. கவிதை கட்டுரை (ஜெராக்ஸ் வடிவில்) எல்லாமே சூப்பர்...
21.சாதிக் (WPTC மாணவி)
      உங்க writing style (ஜெராக்ஸ் வடிவில்) ரொம்பவும் நல்லாருக்குதுண்ணா..
22.ராஜேந்திரன் என்ற முதியவர் (புத்தகப் பூங்கா என்ற புத்தகக்கடையில் மேலோட்டமாகத் திருப்பிப் பார்த்துவிட்டுப் பேசியவை)
      இந்தப் புத்தகத்துல ஆசிரியர் தன்னோட ஆதங்கத்தையெல்லாம் கொட்டி வச்சிருக்காரு சார். முதல்ல இப்படி எழுதுறதுனால எதுவும் சரியாகிவிடாது. அரசு சரியாகச் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தனும். அதுக்குச் சரியானத் தலைவரு உருவாகனும். நம்ம இந்து மதம் ரொம்பச் சரியானது. சாதிகள் எல்லாம் ஒழியனும். சாதிச்சான்று முறையே இருக்கக் கூடாது. பசங்களுக்குக் கல்யாணம் நடத்த முடியல. இன்னும் 20, 50 வருசத்துல சாதிகள் அழிஞ்சிடும். வாழ்க்கை ரொம்ப மோசமாகப் போகுது. நாங்கன்னா நொந்து போயிருக்கோம்...
23.ராம்சந்திரன் (ஊடாட்டம் ஆய்வுக்குழு)
      தோழர் ஒரு தகவல் சொல்லனும். உங்க புத்தகத்தைப் பிரதீப்னு ஒரு தம்பிக்கு படிக்கக் கொடுத்தேன். முழுசாகப் படிச்சிட்டு ரொம்பவும் சந்தோசப்படுறான். உங்க புத்தகம் அவனை ரொம்பவும் இம்பிரஸ் பண்ணிடுச்சு. என்கிட்ட சொல்லிட்டிருக்கிறான். “நீங்களும் பொருளாதார வல்லுனர் ஆகலாம்..” அப்படின்னு புத்தகம் எழுதலாம்னு சொல்லிட்டிருக்கான். உங்க போன் நம்பர் வாங்கிருக்கிறான். உங்கள்ட்ட பேச சொல்றேன் தோழர்.
24.எழுத்தாளர் எஸ்.வி.இராஜதுரை
      உங்கப் புத்தகத்துல பிரதிபலிப்புக் கோட்பாடு பற்றித் தவறாக இருக்கு. அத சரிபடுத்தனும். நல்லா எழுதியிருக்கீங்க. எளிமையா இருக்குது. உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்குது. படிக்கும்போது பல இடங்களில் நான் ரசிச்சு ரசிச்சு சிரிச்சேன். cpi, cpm யாரையும் திட்டாமல் நாசுக்காப் பேசிட்டுப்போறப் பண்பு ரொம்ப நல்லாருக்குது. நான் ரொம்பவும் ரசிச்சேன்.
25. அமுரா ராஜவேலு (B.A.english)
      கதை சொல்றதாலேயே நினைவில் நிக்குதுங்கண்ணா. ரொம்பச் சரியாகவும் நல்லாகவும் இருக்குது. கடைசில உங்க அம்மாவுக்குக் கடிதம்ன்னா Chanceசே இல்லண்ணா! கண்டிப்பாக படிக்கிறவங்கள மாத்தும். கவிதைகள் எல்லாம் ரொம்ப அருமையாக இருக்குதுண்ணா. கவிதை கட்டுரை கதை எல்லாம் ஒரே புத்தகமா இருக்கிறது புதுமையா இருக்குண்ணா. நல்லாயிருக்குது. என் நண்பர் சொன்னாரு கவிதைகளைத் தனிப் புத்தகமாகவே போட்டிருக்கலாமேன்னார். எனக்கும் சரிதான்னு பட்டுச்சு. இதுவரையும் புத்தக வடிவங்கள் அப்படித்தான் வந்திருக்குது. ஆனால் நீங்க புதுசா ஒரு முறையைச் செய்து பார்த்திருக்கீங்க. இதுவும் நல்லாத்தானே இருக்குது. உள்ளம் சுடும் கட்டுரையை யாரு படிச்சாலும் நிச்சயம் சுடும். காதல் செய்ய விரும்பு படிக்கயில் உள்ளம் சுடும் அளவுக்கு வரலையோன்னு தோணுது. ஒவ்வொரு கட்டுரையும் தனித்தனியான சின்னப் புத்தகமாக வந்தால் (10ரூ, 20ரூ வடிவில்) ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். எல்லாரும் எடுத்துப் படிப்பாங்க. எல்லாரிடமும் சேர்க்க முடியும். அவசியம் வெளிவரணும்ண்ணா..
26. சரண்யா (பொறியியல் பட்டம் பெற்றுவிட்டு குடும்பத்திற்குள் முடங்கியுள்ள பெண்)
      உங்க புத்தகத்தைப் படிச்சுட்டு கொடுத்திட்டேன். ரெண்டே நாளில் முடிஞ்சது. செமயா இருக்குது. முழுசும் நீங்களே எழுதியதா! என்னால் நம்பவே முடியல. சோர்வு கொஞ்சங்கூட இல்ல. ரொம்பவும் இன்ட்டரஸ்ட்டா போகுது. சின்னச்சின்ன கதை சொல்றதால அருமையா புரிஞ்சுக்க முடியுது. படிச்சதும் நமக்கே நெறயா சொல்லத் தோணுது. சொந்தமா வாங்கிறனும்னு நெனச்சுருக்கேன். அந்தஸ்த்து, அதிகாரம்னு இருக்கிறவங்க இத உடனே ஏத்துக்க மாட்டாங்க. நீங்க நெறயா எதிர்ப்ப சந்திச்சிருப்பீங்கன்னு தோணுது. நீங்க தொடர்ந்து நெறயா புத்தகம் எழுதணும்...
27.ராஜாராம் (செந்தனல் கலைக்குழு பொறுப்பாளர்)
      இந்தப் புத்தகம் ரொம்ப மொக்கையா இருக்குது.
28.ஐ.ரவிச்சந்திரன் (திண்டிவனம் விவசாயி, புதுச்சேரி பல்கலைக்கழக காவலாளி) ph- 9159606441
      நீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம் புதியவனுக்கு வாழ்த்துக்கள். நான் படித்த புத்தகங்களில் என் மனதைக் கவர்ந்த புத்தகம் இது. உழைப்பின் நேர்மை, வாழ்வின் உண்மை, எதிர்கால நடைமுறை இவற்றை எளிய மக்களுக்கும் அழகாக உணர்த்துகிறது. எல்லோரும் அவசியம் படியுங்கள். படிக்க முடியாதவர்கள் மற்றவர்களை படிக்கச் சொல்லிக் கேளுங்கள். இது கதை கவிதை அழகு மட்டும் அல்ல. வாழ்க்கையின் உண்மை. இதை படித்து செயல்பட்டால் வருங்காலம் நலம் பெறுவது உறுதி.

Sunday, May 30, 2021

பேய் அடித்தக் கூத்து

 

திக் திக் நொடிகள்

புதியவன்

 

நாளை காலை 8.30 மணிக்குத் தேர்வு கட்டிடம் திறக்கப்பட வேண்டும். நாங்கள் வரும்வரை யாரும் திறக்கக்கூடாது என்ற அறிவுறுத்தலுடன் சாவியை ஒப்படைத்தனர். என் உள்ளங்கையில் சாவியை அணைத்தபோது சரியாக நேரம் மாலை 5 மணி.

 

சாவியாளி செல்வதற்கு வசதியாக ஒள்ளிக்கதவு திறந்திருந்தது. தட்டச்சுக் கருவிகளைப் பிரசவித்த வண்டிகள் திரும்புவதற்குத் தயாராகின. வண்டிகள் ஒள்ளிக் கதவிற்குள் புக முடியாதல்லவா! அதற்காகத்தான் குண்டுக் கதவுகளும் திறந்துவைக்கப்பட்டன.

 

வண்டிகள் மறைவதற்கு முன்பே கல்லூரியின் மேலாண்மை பாதுகாவலருக்குத் தெரியாமல் மறைந்து வெளியேறினேன். பணித் தோழன் சேகருக்கு மட்டுமே நான் மறைந்துபோன ரகசியம் தெரியும். பாதுகாப்பு மேலாளர் வீட்டிற்கு கிளம்பும் நேரம் நெருங்கியது. அதற்கு முன்பே எனது திட்டப்படி தாயாரை அழைத்துக்கொண்டு நண்பரின் வீட்டைச் சேர்ந்திருந்தேன்.

 

        நண்பர் சிவகாமியை அக்கா என்றுதான் அழைப்பேன். அக்கா என்று கூவியபடி நீண்டக் கம்பிக் கதவை இழுத்தேன். அக்காவின் ஜிம்மி பாய்ந்து வந்தது. பழுதாகிய மோட்டார் சத்தத்தில் நாய் குரைத்தால் எப்படி இருக்குமோ அப்படியொரு சத்தம். நான் பயமறியாதவன். ஆனால், என் தாயார் பயப்படுவாரல்லவா. அதனால் கம்பிக் கதவைப் பாதுகாப்பாக நிறுத்திக்கொண்டேன்.

 

கதவில் கால் பரப்பி பல்லைக் காட்டி நின்றது ஜிம்மி. ஜிம்மிக்கும் எனக்கும் எட்டா பொருத்தம். எங்களை எட்டச் செய்வது அக்காவின் பிள்ளைதான். பையனுக்கு ஜிம்மியின் முடிபோல் அழகான தலைமுடி. எங்களைப் புன்னகையுடன் அழைத்தபடி ஜிம்மியைப் பற்றிக்கொண்டான். வாயாற வரவேற்ற அக்காவோ அம்மாவை அணைத்துக் கொண்டார். ஒரு தொலைபேசி தோழிகள் முதல் முதலில் நேரில் சந்தித்த தருணம். நல்ல ஆரவாரம்.

 

        எனது பேச்சு அவர்களின் பேச்சைக் கோர்த்து வைத்துவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. அக்கா ஆவி பறக்க காபி தந்தார். அவர்கள் பருகிக்கொண்டு இருந்தனர். நான் ஆறுவதற்குக் காத்திருந்தேன். காபி குவளையில் ஆவி பறந்துகொண்டிருந்தது.

 

அம்மாவிடம் அக்கா சொன்னார். சிவாவிற்கு ஆவி பேயென்றால் பயமே இல்லை. ஆனால், ஆவி பறக்க காபி குடிக்க மாட்டான். அவரின் பேச்சு ஆவியைத் தொட்டு ஆவியாகத் திரியும் மாணவியைப் பற்றியதாக மாறியது.

 

        அந்த மாணவி இன்றும் ஆவியாகத் திரிகிறாள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் அவஸ்தையால் தற்கொலை செய்துகொண்டாள். அக்கா விவரித்துக் கொண்டிருந்தாள்.

 

அந்த மாணவி தற்கொலை செய்ய வேறு இடமில்லையா! நான் பாதுகாவலர் பணி செய்யும் கல்லூரியிலா தற்கொலை செய்திருக்க வேண்டும். பாவம். அவளுக்கு வேறு போக்கிடம் இருந்திருக்காது.

 

வணிகவியல் பெருங்கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதித்து இறந்தாளாம். ஜல் ஜல் என்ற கொலுசொலியில் கல்லூரியெங்கும் திரிகிறாளாம். அங்கும் இங்குமாக நடப்பதும், கேண்டியனில் டீ காபி சாப்பிட்டு திரிவதுமாக அலைந்தபடி இருக்கிறது அந்த ஆவி.

 

நானும் அந்த ஆவியின் சலங்கை ஒலியை பலமுறை கேட்டதுண்டுதான். ஆனால், நான் அறிவியல் தத்துவம், சமூகவிஞ்ஞானம் என்று பேசித்திரிபவன் அல்லவா! அதனால் ஒருபோதும் அந்த ஆவியைப் பொருட்படுத்தியதே இல்லை.

 

அந்தக் கல்லூரி, காட்டிற்குள் முளைத்த கட்டிடம் போன்றது. எனவே பாம்பு போன்ற விஷ ஜந்துக்களிடம் எச்சரிக்கையாக இருப்பது வழக்கம். அந்த எச்சரிக்கையில் பாதிகூட ஆவியிடம் ஏற்பட்டதில்லை.

 

        இரவுப் பணியில் ஆவியுடன் திரிவதால் பலரும் என்னை எச்சரித்ததுண்டு. அதிலும் சாய்பாபா என்னை பயமேற்றுவதற்காக எச்சரிப்பார். அதெல்லாம் வெறும் நம்பிக்கைதான் என சிரிப்பேன்.

 

என் சிரிப்பு ஆவியை மட்டுமல்ல, கடவுளையும் பொய்யாக்குவதை உணர்ந்து பொங்குவார். மாணவியின் ஆவி உன்னை அடிக்கத்தான் போகிறது. பெண் குரலில் நீ பிதற்றிக்கொண்டு ஆடுவதை நானும் பார்க்கத்தான் போகிறேன். அவர் சபித்துச் செல்வது வழக்கமான விளையாட்டாகிவிட்டது.

 

அவர் வார்த்தைகளில் விளையாடிய ஆவி என் வாழ்க்கையில் விளையாடும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், அன்று விளையாட்டைத் தொடங்கிவிட்டது ஆவி.

 

        அக்காவின் பேச்சும் அம்மாவின் சிரிப்பும் அறையை நிறைத்துக் கொண்டிருந்தபோது மணி ஏழரை இருக்கும். எனக்கும் ஏழரை பிறக்கும்.

 

எனது கைபேசி அலறத் தொடங்கியது. பணித்தோழன் சேகரின் அழைப்பு.

 

சொல்லுடா மாப்ள. எம்.டி. போயிட்டாரா? யாரும் என்னைப்பற்றி கேட்கலயே…

 

என் பேச்சை பொருட்படுத்தாமல் அவசர அவசரமாக எதையோ எனக்குத் தெரியப்படுத்துகிறான்.

 

அவன் தெரியப்படுத்திய ஓசை ஓர் அதிர்ச்சியடைந்த மனநோயாளியின் குரல் போல இருந்தது.

 

என் முகத்தில் அதிர்ச்சி கலந்த சிரிப்புடன் பேசுகிறேன்.

தெளிவா சொல்லுடா மாப்ள?

 

“டேய், டேய் தம்பி, வேகமா வாடா…

வணிகவியல் கட்டிடத்துல அந்த ஆவி டைப்ரேட்டிங் அடிச்சிட்டிருக்குதுடா!

பயங்கரமா சத்தம் கேக்குது. தனியா இருக்க பயமா இருக்கு. வேகமா வாடா.”

 

டேய் லூசு மாதிரி ஔராதடா. நான் வருவது கடினம். நாளைக்கு ஆவிக்கிட்ட பேசிக்கிறேன். இன்று மட்டும் சமாளிச்சுக்கோடான்னு தொடர்பை நிறுத்திட்டேன்.

 

அவர்கள் பேசிக்கொண்டிருந்தாலும் அம்மா நான் பேசிக்கொண்டிருப்பதை வழக்கம்போல ஜாடையாகப் பார்த்தார்.

 

சேகர்தான்னு சொல்லி முடிப்பதற்குள்ள மீண்டும் அழைப்பு.

 

எனக்கு ஆவி டைப் அடிப்பதோ, டான்ஸ் ஆடுவதோ, பாட்டு பாடுவதோ எது செய்தாலும் பிரச்சனை இல்லை. ஆனால், நாளை தட்டச்சு தேர்வு நடப்பதற்கு தயார் செய்து பூட்டப்பட்ட அறையில் வித்தை காட்டுகிறதல்லவா, அதுதான் பிரச்சனை. நாளைய தேர்வு வணிகவியல் கட்டிடத்தில்தான்.

 

சிந்தனையைக் கடந்து அவனது அழைப்பு தொடர்ந்து கொண்டிருந்தது.

 

அவன் அழைக்க அழைக்க துண்டித்துக் கொண்டிருந்தேன்…

நான் துண்டிக்கத் துண்டிக்க அழைத்துக் கொண்டிருந்தான்…

இதை கவனித்த அம்மா என்னை திட்டத் தொடங்கினார்!

 

அம்மாவிடம்  திட்டு வாங்க வைத்தாயடா சேகரு என்ற கோபத்துடன் அடுத்த அழைப்பில் பேசத் தொடங்கினேன்.

 

நான் பேசுவதற்குள் அவன் பேசிய வசை சொற்களால் காது கொர்ர்ர் என்றது.

 

ஆவி தட்டச்சு அடிப்பதை எம்.டி.க்கும் பிரின்ஸ்பாலுக்கும் சொல்லப்போறேன். அவங்க வருவதற்குள்ள நீ வந்துரு என்று துண்டித்துவிட்டான். பிறகுதான் நான் உசாரானேன்.

 

இப்பொழுது நான் அழைத்தேன். எனது அழைப்பின் இரண்டாவது ஒலியிலேயே பேசினான். அவனது வேலையைப் போலவே பேச்சிலும் வேகம் இருந்தது. அவன் வேகத்தை முந்திக்கொண்டு நான் பேசினேன்.

 

வந்துருறேன்…ஐந்து நிமிடம் மாப்ள… அவசரப்படாத… யாரிடமும் ஆவி பேய்ன்னு உளறிடாத… வந்துருறேன்… அப்புறம் பேசிக்கலாம்.

 

“வேகமா வாடா” என்று துண்டித்தான்.

 

அம்மாவை அக்கா வீட்டில் தங்கச்சொல்லிவிட்டு விரைந்தேன். எனது சைக்கிள் கல்லூரி வாசலை நெருங்கியது. பயல் ஆவி பயத்தில் வாசலிலேயே  சுற்றிக்கொண்டிருந்தான். என்னை பார்த்ததும் குண்டு கதவை திறந்து ஆயத்தமானான். வளைந்து நிறுத்தியதும் நிதானமானேன்.

 

அவன் நிதானமின்றி படபடப்பதை அவதானிக்க முடிந்தது. ஆவி தட்டச்சு அடித்துக்கொண்டிருக்கும் அபாயத்தை வாயால் மீண்டும் தட்டச்சு செய்துகொண்டிருந்தான். தட்டச்சு முடிவதற்குள் குண்டு ஒள்ளிக் கதவுகளை பூட்டிவிட்டு, கையில் பேட்டரி விளக்கும் கம்புமாக நிற்கிறான் என்றால் அவன் வேகத்தை புரிந்துகொள்ள வேண்டும். 

 

ஆவி என்ற கதையெல்லாம் வெறும் கற்பனை. எனது சமூகவிஞ்ஞான அறிவியல் பார்வையை அவனுக்கு உணர்த்துவதற்கான தருணம் என்ற மெத்தனத்துடன் கிளம்பினேன்.

 

கையில் பேட்டரி விளக்கும் கம்புமாக ஆவியைச் சந்திப்பதற்கு நானும் ஆயத்தமானேன். நான் ஆவியிடமிருந்து தற்காப்பதற்காக கருவிகளை எடுத்திருப்பதாகத் தப்புக் கணக்கு போட வேண்டாம். நான் அறிவியல் தத்துவம், சமூக விஞ்ஞானம் என்று பேசுபவனாக்கும்.

 

இரவு ஆறு மணிக்கு மேல் கல்லூரியின் நிறம் கருப்பு. முழுதும் இருட்டாகிவிடும். காட்டில் விஷ ஜந்துக்கள் ஏராளம். கண்ணாடி வீரியன், கட்டு வீரியன், நல்லது, கெட்டது எல்லாம் திரிந்துகொண்டிருக்கும். சில நேரம் இரையை விழுங்கிவிட்டு நடு பாதையில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கும். சாதரணமாக நம் வாசம் தெரிந்ததும் ஒதுங்கிவிடும். தேவைபட்டால் ஸ்ஸ்ஸ்… என்று சத்தம் சீறி எச்சரிக்கும். ஆனால், இரையை விழுங்கிவிட்டு நகரமுடியாது கிடந்தால் என்ன செய்வது? நாம் கடிபடுவதையோ அது அடிபடுவதையோ யாராலும் தடுக்க முடியாது. அதற்காகத்தான் கம்பு.

 

ஒன்று நம்மை பார்த்து அது ஒதுங்கனும் அல்லது அதனைப் பார்த்து நாம் ஒதுங்கனும். எப்படியோ ஒதுங்க வேண்டுமென்றால் பார்க்க வேண்டுமல்லவா. இருட்டில் எப்படி பார்ப்பது. பாதைகளில் மின் விளக்கு கிடையாது. சூரிய ஒளி விளக்குகள் இருக்கின்றன. அவைகளும் ஓய்வெடுத்து ஓய்வெடுத்து எரிவன. அரை மணிநேரம் ஓய்வெடுக்கும். ஐந்து நிமிடம் எரியும். அதை நம்பி நடந்தால் சீக்கரம் நம் கட்டை எரியும். அதற்காகத்தான் கையில் பேட்டரி விளக்கு.

 

நானும் கருவிகளை ஏந்திக்கொண்டு அவனைத் தொடர்ந்தேன். அவனும் ஆவி தட்டச்சு அடிக்கின்ற கதையை அதிர்ச்சி நிறைந்த குரலில் விவரித்துக் கொண்டிருந்தான்.  ஆனால்,எனக்கு ஆவி குறித்து எந்த படபடப்பும் இல்லை. உண்மையைச் சொன்னால் எனக்கு மனதில் சிரிப்புதான் பெருக்கெடுத்தது. அவனை பின்தொடர்ந்து சென்றேன். என்னை ஆவியிடம் அழைத்து செல்லாமல் வேறு பாதையில் சென்றான். அது தொலைபேசியில் பேசுவதற்கான அறை.

 

டேய் இங்க எங்கடா போற?

 

அவன் சிறிய முகத்தைத் திருப்பி, அரண்டுபோன கண்களைப் பெரிதாகக் காட்டி, எச்சரிக்கை தளும்பும் குரலில் அறிவுறுத்தினான்.

“செத்துப்போன மாணவி ஆவியாக வந்து டைப் அடிக்கிறாள்னு சொல்லிருவோம்டா.

நேரம் ஆக ஆக ஆபத்தாகிடும்டா.

எம்.டி.க்கும் பிரின்ஸ்பாலுக்கும் போன் அடிச்சு பேசிடலாம்!”

 

சமூகவிஞ்ஞானமே அறிவியல் தத்துவமே என்று அலட்டிக்கொள்ளும் என்னால் அவனை சமாளிக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வெட்கமாக இருக்கிறது. ஆனால், எப்படியோ சமாளித்து பணிய வைத்தேன்.

 

ஆவி தட்டச்சு அடிப்பதாக போன் செய்தால், நீ லூசா! நான் லூசா! என்று ஏசுவார்கள். பைத்தியமே! நீ வா. எந்த ஆவி டைப் அடிக்கிறது என்று நானும் பார்த்துவிடுகிறேன்…

 

என் வீராப்பு பேச்சுக்குதான் பணிந்துவிட்டான். நாங்கள் சிமெண்ட் பாதையில் செல்லாமல் குறுக்கு பாதையில் சென்றோம். செடிகளும் புற்களும் நிறைந்த அந்த ஒத்தையடி பாதையிலே வேகமாக நடந்தோம்.

 

தவளைகளும் சில பூச்சிகளும் இடைவிடாமல் ஒலித்தன. தூரத்து முந்திரிக் காடுகளிலிருந்து வரும் நரிகள் ஊளையிட்டபடி இருந்தன. அவற்றினும் சிறிதாக சேகரின் கெஞ்சல் சத்தமும் தொடர்ந்து கொண்டிருந்தது.

 

வேண்டாம்டா சிவா… பயமா இருக்குடா… தனியாக சென்று மாட்டிக்கொள்ளப் போகிறோம் என்று எச்சரித்துக்கொண்டே வந்தான்.

 

அவனால் உடன்படவும் முடியவில்லை. தனியாக நிற்கவும் மனம் இல்லை. மனதில் பயத்தை நிறைத்துக்கொண்டு தவித்தான். அவன் பயம் வாயில் பிதற்றலாக வெளிப்பட்டுக்கொண்டே வந்தது.

 

நாங்கள் அலுவலகக் கட்டிடத்தை திறந்து கொண்டு அடுத்த வாயிலை அடைந்தோம். இதுபோல் இரண்டு கட்டிடங்களைக் கடக்க வேண்டும். மூன்றாவது கட்டிடம்தான் வணிகவியல் பிரிவு. எங்கள் வேகம் இரண்டாம் கட்டிடத்தைக் கடக்கும்போது மிரளத் தொடங்கியது. அந்த சத்தம் என் ஆழ்மனதின் உறுதியைச் சுக்கு நூறாகப் பிளந்தது.

 

ஆம். மிக மெலிதாக கேட்டுக் கொண்டிருக்கிறது.

தட தட தட தட ட்ரூக்…

தட தட தட தட ட்ரூக்…

தட தட தட தட ட்ரூக்…

பூட்டப்பட்ட அறையிலுள்ள தட்டச்சு இயந்திரத்தை யாரும் இல்லாத இரவில் ஓர் இளம் பெண்ணின் ஆவி தட்டிக்கொண்டு இருப்பதை முதன்முதலாக கேட்டு சிலிர்ப்படைந்தேன்.

 

அமைதியற்ற அந்த ஆன்மாவின் ஓலத்தை படபடத்துக் கொண்டிருந்தது தட்டச்சு. நிதானிப்பதற்குள் நாங்கள் மூன்றாம் கட்டிடத்தை நெருங்கிவிட்டோம். நெருங்க நெருங்க தட்டச்சின் ஓசை உயர்ந்துகொண்டே வந்தது.

தட தட தட தட ட்ரூக்…

தட தட தட தட ட்ரூக்…

தட தட தட தட ட்ரூக்…

என்னால் நம்பவே முடியவில்லை. எப்படி பூட்டப்பட்டிருக்கும் கட்டிட அறையில் இருந்து தட்டச்சு சத்தம் கேட்க முடியும்? அச்சம் கலந்த சிந்தனையில் உறைந்திருந்தபோது எனது விரல்கள் வணிகவியல் கட்டிடக் கதவைத் திறப்பதற்காகப் பற்றிக்கொண்டன.

 

தட்டச்சின் பேரொலி கட்டிடம் முழுதும் அதிர்ந்துகொண்டு இருப்பதை என்னால் உணர முடிந்தது. சமூக விஞ்ஞானமே, அறிவியல் தத்துவமே என்ற பிதற்றல் எல்லாம் புயலில் சிக்கிய தோப்புபோல் சிதறிப்போனது.   

 

தட்டச்சு ஓசையின் அதீத சத்தத்தைக் கேட்ட சேகரால் தாக்குபிடிக்க முடியவில்லை. தனியாக தப்பித்து ஓடவும் தைரியமில்லை. தப்பித்து நேர் பாதையில் ஓடிவிடலாம் என்று எச்சரித்தான்.

 

எனக்கோ அறிவின் மீதான சுயமரியாதை விடுவதாக இல்லை. பேயாவது பயமாவது என்பதுபோல பொய்யான பாவனையை வரவழைத்துக்கொள்ள முயன்றேன். ஆனால், எனக்கு ஏற்பட்ட பயத்தின் அளவை என் அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தால்தான் புரியும். மனதிற்குள் சொல்லிப் பிதற்றினேன்.

 

டேய் சேகரு காப்பாத்துடா.. நான்பாட்டுக்கு கதவ திறந்துறப்போறேன்டா..

அப்புறம் பேயிடம் அடிபட்டு சாவதை யாராலும் தடுக்க முடியாதுடா..

ஆனால், பயபிள்ள என்னை தடுக்காமல் கதவு திறக்கப்படுவதை பார்த்து பதறிகொண்டிருந்தது.

 

அந்த இருட்டில் பற்றியிருந்த கம்பின் மீதான கரங்களை மேலும் இருக்கிக் கொண்டேன். பேட்டரி விளக்கின் வெளிச்சமே எங்களை மேலும் பயமூட்டியது. இடைவிடாது ஒலித்த அந்த தட்டச்சால் எங்கள் இதயம் துடிப்பதை மறந்து வெடிக்கத் தொடங்கியது.

 

மாடியில் கால் வைக்கும் இடத்திற்கு வந்துவிட்டோம். 16 படிகள் ஏறியதும் ஆவியின் அறையைத் திறந்தாக வேண்டும். தட்டச்சு அடிக்கும் ஆவியை எப்படி சமாளிப்பது?

 

நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஆவியை மிரட்டத் தொடங்கினேன். படிகளில் ஏறும்போதே கைக் கம்பினால் சுவர்களை அறைந்து சத்தமிட்டேன்.

ஏய்….

யார் நீ?..

என்ன செய்ற?…

ஓய்…

நில்லு…

இங்கே வா…

என் மிரட்டல் சத்தங்களை கொஞ்சமாவது மதித்து தட்டச்சு அடிப்பதை நிறுத்தியதா என்று கவனித்தேன். அது என்னை மதிக்கவே இல்லை. அடித்துக் கொண்டே இருக்கின்றது.

தட தட தட தட ட்ரூக்…

தட தட தட தட ட்ரூக்…

தட தட தட தட ட்ரூக்…

 

இயலாமையின் மொத்தத்தில் நான் இருந்தேன். ஆனால், என் சுய மரியாதை என்னை இயக்கிக்கொண்டிருந்தது. எதுவானாலும் சந்தித்து விடுவோம் என்பதாக ஆழ்மனம் என்னைக் கேட்காமலேயே முடிவெடுத்துவிட்டது.

       

எங்கள் முன்னால் ஓலமிடும் அந்த அறை முறைத்துக் கொண்டிருந்தது.

திடீரென்று வெளியில் எரிந்த சூரிய விளக்கின் ஒளி சன்னலின் வழியே அறையின் கதவைத் தீண்டியது.

கதவில் தொங்கிக் கொண்டிருந்த வெள்ளி நிற பூட்டு மென்மையாகப் பிரகாசித்தது.

பேட்டரி விளக்கின் ஒளியில் சேகரை பார்த்தேன். அழுகாத குறையாய் அரண்டிருந்தான். இந்தக் கோலத்தில் சேகரை தரிசிப்பது இதுதான் முதல்முறை.

என் மனது பயத்தால் கவ்வப்பட்டிருந்தது. அறிவோ சமூகவிஞ்ஞானமே அறிவியல் தத்துவமே என்று தொடர்ந்து பிதற்றிக்கொண்டிருந்தது. என் கரமோ அறிவின் உணர்ச்சிக்கு கட்டுப்படத் தொடங்கியது.

        கம்பை இடுக்கிக்கொண்டு அறையின் சாவியை இருக்கப் பற்றினேன்.

தட்டச்சை அறைந்து கொண்டிருந்த ஆவியின் அறை கதவை நெருங்கினேன்.

பிரகாசித்துக்கொண்டிருந்த வெள்ளிப் பூட்டை பற்றி சாவியை நுழைத்தேன்.

எனது கால்களும் கரங்களும் நடுநடுங்கிய தருணத்தை உணர்ந்தேன்.

பயத்தால் செத்துவிடுவேனோ என்ற சந்தேகத்தில் தலை சுற்றியது. திறந்துவிட்டேன்.

வேகமாக நுழைவதற்காக கதவை ஓங்கி அறைந்தேன்.

அந்த அறை ஆவிக்கே வலித்திருக்கும்போல் சத்தம் எழும்பியது. கதவு திறக்கப்பட்டது….

நுழைந்த வேகத்தில் உள் விளக்கின் பித்தானை அழுத்தினேன்.

கண்ணிமை பொழுதில் இருளை விழுங்கிச் செரித்தது வெளிச்சம்.

எங்கள் கழுத்து மேல் நோக்கி நெளிந்திருந்தது.

நாங்கள் அன்னாந்தபடி சிரித்துக்கொண்டிருந்தோம்.

காற்றாடி எங்கள் உணர்ச்சிகளைப் பொருட்படு்த்தவே இல்லை.

தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருந்தது…

தட தட தட தட ட்ரூக்…

தட தட தட தட ட்ரூக்…

தட தட தட தட ட்ரூக்…


அனைத்திந்திய வானொலி (AR Madurai PC) 05.07.2021 நேரம் இரவு 09 மணி 15 நிமிடங்கள் படைப்பரங்க நிகழ்வில் திக் திக் திக் நொடிகள் என்ற தலைப்பில் வெளிவந்த சிறுகதை.

 

 

 



 

நால்வர் ஓடும் உலகம்

  நால்வர் ஓடும் உலகம் புதியவன் ஒரு குழுவில் நான்கு ஓட்டக்காரர்கள் சமூக மேன்மைக்காக ஒடுகிறார்கள். வாழ்வா சாவா போராட்டத்தில் மனித குலத்தை வீ...

அதிகம் பார்க்கப்பட்டவை