Sunday, January 12, 2025

பண்பாட்டு முதல் வாதம்

 

பண்பாட்டு முதல் வாதம்

புதியவன் முனைவர் கே.சிவக்குமார்

SSM கலை மற்றும் அறிவியல்கல்லூரி, திண்டுக்கல்.

 

பண்பாடு குறித்த சிந்தனையை அறிவியல் மொழியாகியத் தமிழ் இலக்கியங்களில் தேடினால் “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்” என்ற கவிதை கிடைக்கிறது. இது பழந்தமிழரின் கலித்தொகை பாடல். அறிவியல் தமிழின் இப்பழங்கவிதை பண்பாடு குறித்த சமூகவிஞ்ஞான விளக்கத்தைப் பிரதிபலிக்கின்ற திறத்தை இக்கட்டுரை விளக்கும். மேலும் கலாச்சாரம் என்ற சொல் பண்பாடு என்ற சொல்லிற்கு இணையாகாது என்பதையும் விளக்கும். 

பண்பாடு என்பது சமூகத்தின் மேற்கட்டுமானம் என்பதாக சமூகவிஞ்ஞானம் விளக்குகின்றது. அதாவது, அறிவியல் தத்துவ விளக்கப்படி மார்க்சிய சமூகவிஞ்ஞானம் ஒரு வீட்டின் அமைப்பை உவமையாகக் கொண்டு சமூகத்தின் இயங்கியலை விளக்குகின்றது. அதாவது, சமூகத்தை வீட்டின் அடித்தளம் என்றும் வீட்டின் மேற்கட்டுமானம் என்றும் பகுத்து விளக்குகின்றது. வீட்டின் அடித்தளம் என்பது சமூகப் பொருளுற்பத்தி முறையாகும். வீட்டின் மேற்கட்டுமானம் என்பது பண்பாடாகும். சமூகம் குறித்த இத்தகைய பகுத்தறிவு  கண்ணோட்டத்தில் பண்பாடு என்ற சொல்லமைப்பையும் சொற்பொருளையும் விளங்கிக்கொள்ளும் முயற்சியைப் படிப்படியாக மேற்கொள்ளப் போகிறோம்.

“பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்” (கலி.133) பண்பு, பாடு என்ற இரு சொற்கள் தனித்தனியே இக்கவிதையில் இணைகிறது.

பண்பு என்பதற்கு செய்கை, வேலைப்பாடு என்பவையாக பொருள்படுகின்றது. இச்சொற்கள் மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்ட திட்டமிட்ட செயல்களின் வெளிப்பாடாக பண்பு பொருள்படுகின்றது. அதாவது சமூகப் பொருளுற்பத்திக்கு ஏற்றபடி ஒழுக்கம் பெறுகின்ற பண்பாகும்.

பாடு என்பதற்கு உழைப்பு, அனுபவம், தோன்றுதல், உண்டாதல், நிலைமை என்பவையாக பொருள்படுகின்றது. இச்சொற்கள் திட்டமிட்ட செயல்களுக்கு அப்பாற்பட்ட மனித இயற்கையின் வெளிப்பாடாகின்றன.

மனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுள்ள சமூகத்தின் இயற்கையான உழைப்பும் அனுபவமும் பொருள்படுகின்றன. போலி அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளை உணர்த்தும்படி தோன்றுதலும் உண்டாதலும் பொருள்படுகின்றன. இயற்கை, மனிதர்கள், சமூகம், சிந்தனை, கருத்து, மொழி, கருவி, உழைப்பு, உற்பத்தி, உறவுகள் இவைகளுக்கு இடையிலான அசைவியக்கங்களை உணர்த்தும்படி நிலைமைகள் பொருள்படுகின்றன.

அறிவியல் தத்துவ விளக்கப்படி மார்க்சிய சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற சமூகத்தின் அடித்தளமாக பாடு பொருள்படுகின்றது. அதாவது பாடு என்பது பண்பாடு என்ற சமூக மேல்கட்டுமானத்திற்கு அடித்தளமாக விளங்குகின்ற சமூகப் பொருளுற்பத்திமுறைகள் ஆகும்.

உங்களை வளர்க்க நான்பட்ட பாடு…

இப்பல்லாம் குழாய திறந்தா தண்ணி கிடைக்குது. அந்த காலத்துல ஒரு குடம் தண்ணி தூக்கிவர நாங்கப்பட்ட பாடு…

கல்வி, வேலை, வருமானம், மரியாதை, உரிமைகள் பெற்று குறைந்தபட்ச நிம்மதியாவது பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்கிறீர்கள் எனில் அதற்காக தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காரல்மார்க்ஸ் போன்ற பெருந்தலைவர்களும் எண்ணற்றத் தியாகிகளும் இந்த உலகில்  எப்பாடுபட்டு போராடினார்கள் என்ற வரலாறு தெரியுமா?...

மேற்கண்ட வசனங்களில் பாடு என்ற சொல் உழைப்பின் சமூகப் பொருளுற்பத்தி நிலைமைகளை விளக்குகின்ற பொருளில் வருவதை உணரலாம்.  

 பண்பாடு என்ற சொல்லைப் பிரித்தால் பண் + பாடு என்பதாக பிரிந்திசைக்கும். பண் என்பதற்கு தகுதி, தொண்டு என்பவையாக பொருள்படுகின்றது. இச்சொற்களுக்குச் சமூக மேல்கட்டுமானமாகிய பண்பாடு குறித்து இலக்கிய அறிவியலின் சமூகவிஞ்ஞான  விரித்துரைப்புகளிலிருந்து விளக்கம் காண இயலும்.

இலக்கியம் என்பது பண்பாட்டை பிரதிபலிப்பது மட்டுமல்ல,  பண்பாட்டை உருவாக்குவதும் ஆகும். ஏனெனில் மொழி என்பது சமூக இயங்கியலின் முழுதளாவிய பிரதிபலிப்பாகும். எனவே, பண்பாடு பற்றிய துல்லியமான புரிதல் இலக்கிய அறிஞர்களுக்கு இன்றியமையாததாகும். பண்பாடு என்பது பண்படுத்துதல் ஆகும். 

       மனித மூதாதையர்களிடம் இருந்து தோன்றிய மனிதர்கள் இயற்கையைத் திட்டமட்டு மாற்றத் தொடங்கினார்கள். இத்தகைய முயற்சியிலிருந்து மனித வரலாறு தொடங்குகிறது. மனித வரலாற்றுப் படிநிலைகள் எட்டு கட்டங்களைக் கண்டுள்ளது.

1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம்,

2.வேட்டை நாகரிகம்,

3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம்,

4.விவசாய நாகரிகம்,

5.உற்பத்தி மீதான வணிக நாகரிகம்,

6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல்,

7.நிதி மூலதன பிரிவு தோன்றி சமூக உற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல்,

8.மக்கள் தலைமையின் கீழ் சமூக உற்பத்தியைக் கட்டமைத்தல்.

மேற்கண்ட வரலாற்றுக் கட்டங்கள் அனைத்திலும் இயற்கையின் அங்கமாகிய மனித இனம் தன்னையும் தன் சமூகத்தையும் பண்படுத்தும் முயற்சியே மனிதப் பண்பாடாகும். இத்தகையப் பண்படுத்தல்கள் சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

       நிதிமூலதனப்பிரிவு தோன்றி சமூக உற்பத்தியை ஆதிக்கம் செய்தல் என்ற இலாபவெறி வரலாற்றுக் கட்டத்தில் வாழும் மனிதர்கள் உற்பத்தி முறையைத் தங்கள் விருப்பம்போல மாற்ற விரும்பினால் என்ன நிகழும்?

       அவர்கள் பழைமையான காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிக வாழ்க்கையை உருவாக்க முயலலாம். அல்லது மக்கள் தலைமை சமூகத்தையோ அல்லது பொதுவுடைமை சமூகத்தையோ உருவாக்க முயலலாம். ஆனால், இத்தகைய உருவாக்கங்கள் அனைத்தும் நாடகம், திரைப்படம், கலை இலக்கியம், அறிவியல் ஆய்விலக்கியம், பழைமை பற்றிய நினைவுகளையும் கற்பனைகளையும் பதிதல், வருங்காலம் பற்றிய விருப்பங்களையும் கோரிக்கைகளையும் தெரிவித்தல், உரையாடுதல் என்பதாகவே அமையும்.

       மேற்கண்டவை அனைத்தும் அவர்களது பண்படுத்தலுக்கான பண்பாட்டு முயற்சிகளாக மட்டுமே அமையும். மாறாக, தமது வாழ்க்கையை நடைமுறை எதார்த்தத்தில் ஒரு காடு சார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிக வாழ்வில் செலுத்துதலோ அல்லது மக்கள் தலைமை சமூகத்தில் அல்லது பொதுவுடைமை சமூகத்தில் நிறுவுதலோ சாத்தியமில்லை. ஏனெனில் சமூகத்தின் நடைமுறை என்பது மனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுள்ள சமூகப் பொருளுற்பத்தி முறையினால் தீர்மானிக்கப்படுகின்றது. எனவேதான் சமூகவிஞ்ஞானத்தின் விளக்கம் கீழ்கண்டவாறு அமைகின்றது.

       சமூகப் பண்பாடு என்பது சமூக உற்பத்தி முறைகளை அடித்தளமாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டுள்ள மேற்கட்டுமானம் ஆகும். இத்தகைய மேற்கட்டுமானமாக ஏழு பண்பாட்டு கூறுகள் வினையாற்றுகின்றன.

1.சமூக வாழ்வியல்,

2.சமூக உள்ளத்தியல்,

3.தனிமனித உள்ளத்தியல்,

4.சமூகக் கருத்தியல்,

5.தனிமனித கருத்துநிலைப்பாடு,

6.தனிமனித உலகப்பார்வை,

7.தத்துவ அடிப்படை

மேற்கண்ட ஏழு கூறுகளின் ஒருங்கிணைந்த சமூக இயக்கமே பண்பாடாகும்.

       சமூகப் பண்பாட்டிலுள்ள ஏழு கூறுகளும் அடித்தளமாகிய சமூகப் பொருளுற்பத்தி முறைகளை மேம்படுத்தவோ அல்லது தேங்கச்செய்து புண்படுத்தவோ தொடர்ந்து முயல்கின்றன. இத்தகைய முயற்சிகள் மாற்றத்தை நிர்பந்திக்கின்ற அழுத்தங்களே அல்லாமல் தீர்மானிக்கின்ற சக்திகள் அல்ல. புரட்சிகரமான அரசியல் சூழலைத் தவிற மற்றெந்தச் சூழலிலும் பண்பாடானது சமூகப் பொருளுற்பத்தி முறைகளைத் தீர்மானிப்பதில்லை. மாறாக, எப்பொழுதும் சமூகப் பொருளுற்பத்தி முறைகளால்தான் பண்பாட்டின் அனைத்து கூறுகளும் தீர்மானிக்கப்படுகின்றன.

அதனால்தான் வீட்டின் அடித்தளம், வீட்டின் மேல்கட்டுமானம் என்ற சமூகக் கட்டமைப்பிற்கான உவமை இவ்வாறு விளக்கம் பெறுகின்றது. சமூகப் பொருளுற்பத்தி முறைகள் வீட்டின் அடித்தளமாகவும் முழுதளாவிய பண்பாடு வீட்டின் மேல்கட்டுமானமாகவும் விளங்குகின்றன. (இலக்கிய அறிவியல்)

       பண் + பாடு என்பதாக பிரிந்திசைக்கும் பண்பாட்டில் பண் என்ற சொல் தகுதி, தொண்டு என்பவையாக பொருள்படுகின்றது. இலக்கிய அறிவியலின் முன்கண்ட விளக்கநிலையிலிருந்து கவனித்தால் சமூகவிஞ்ஞானத்தின் பரிபூரண வெளிப்பாடாக இச்சொல்லாடல் அமைந்து வியப்பூட்டுவதை உணரலாம்.

பண்பாடு என்ற சொல் சமூக விஞ்ஞானக் கட்டமைப்பை விளக்கும்படி பண் என்பது மேல்கட்டுமானத்தின் குறியீடாகவும் பாடு என்பது அடித்தளத்தின் குறியீடாகவும் அமைந்திருக்கின்றது.

பாடு என்ற சமூகப் பொருளுற்பத்தியின் மீது பண் என்ற மேல்கட்டுமானத்தின் தகுதி என்ன? அடித்தளமாகிய சமூகப் பொருளுற்பத்தி முறைகளை சமூக முன்னேற்றம் நோக்கி மேம்படுத்தும் தகுதியுடன் வினையாற்றுகின்றதா? அல்லது சமூகப் பொருளுற்பத்தி முறைகளைச் சமூகத் தேக்கநிலையில் புண்படுத்தி பண்பாட்டுத் தகுதியை இழக்கின்றதா? இவ்வாறாக தகுதி என்பதன் முரண் இயக்கத்தை விளக்குகின்றது.

பாடு என்ற சமூகப் பொருளுற்பத்தியின் மீது பண் என்ற மேல்கட்டுமானத்தின் தொண்டு என்ன? அடித்தளமாகிய சமூகப் பொருளுற்பத்தி முறைகளை சமூக முன்னேற்றம் நோக்கி மேம்படுத்துவதற்கான தொண்டில் ஈடுபடுகின்றதா? அல்லது சமூகப் பொருளுற்பத்தி முறைகளைத் தேங்கச்செய்து புண்படுத்தலுக்கான தொண்டில் ஈடுபடுகின்றதா? இவ்வாறாக தொண்டு என்பதன் முரண் இயக்கத்தை  விளக்குகின்றது.

“பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்” (கலி.133)

பண்பெனப்படுவது பாடு என்ற சமூகப்பொருளுற்பத்தி முறைக்கு ஏற்றபடி ஒழுங்கமைந்திருக்கின்ற பண்பாடே மேற்கட்டுமானம் என்பதாக இக்கவிதையில் வெளிச்சம் பெறுகின்றது. மார்க்சிய அறிவியல் தத்துவம் விளக்குகின்ற பண்பாடு குறித்த சமூகவிஞ்ஞான விளக்கத்தை அறிவியல் தமிழின் பழங்காலக் கவிதை வியக்கத்தக்க நிலையில் உட்பொதிந்துள்ளது. இது தமிழரின் அறிவு மரபிற்கு ஆகச்சிறந்த சான்றாகும்.

       பண்பாடு என்ற சொல்லிற்கு இணையாக கலாச்சாரம் என்ற சொல்லைப்  பயன்படுத்துவது ஆகப்பெரிய குறையாகும். ஏனெனில் பண்பாடு என்பதற்கு சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற வரையறையைப் பண்பாடு என்ற சொல்லின் அமைப்பொழுங்கே  பரிபூரணமாக விளக்குகின்றது. இதற்கு நிகராக கலாச்சாரம் என்ற சொல் விளங்குவதாக இல்லை.

       கலாச்சாரம் என்ற சொல்லை பிரித்தால் கல் + ஆச்சாரம் என்று பிரிந்திசைக்கும். கல் என்பதற்கு கற்றல் என்று விளக்கம். ஆச்சாரம் என்பதற்கு இந்து சமயத்தில் கடைப்பிடிக்கப்படும் நல்ல பழங்கவழக்கங்களைக் குறிப்பதாக விளக்கப்படுகின்றது.

இந்து மதம் என்பதே பிற மதங்களை வெறுத்து ஒதுக்குவதிலிருந்து தன் வரையறையை அடையாளப்படுத்துகின்ற கெட்ட வழக்கத்தின் வெளிப்பாடாகும். பிறப்பிலேயே உயர்வு தாழ்வை கற்பிக்கின்ற சாதி சனாதனச் சாக்கடைகள் நாற்றமெடுக்கின்ற மதமாகும். அறிவியல் கண்ணோட்டத்திற்கும் மனிதகுல முன்னேற்றத்திற்கும் எதிரான நடைமுறை வன்முறையாகும். மனிதர்களாகப் பிறந்தவர்களைப் ஐம்புலன்களால் உணரமுடியாத சாதி என்ற கற்பிதத்தை உண்மை என்று நம்புகின்ற உளவியல் நோய்க்கு ஆட்படுத்தி, சகமனிதர்களை சாதி வெறியர்களாகவும் புனிதம் தீட்டு என்ற அவமானத்திற்கு உரியவர்களாகவும் உருமாற்றுகின்ற மதமாகும். இத்தகைய ஒழுக்கக்கேடான இந்து மதத்தில் நல்ல பழக்கவழக்கங்கள் இருந்தால் என்ன! இல்லாவிட்டால் என்ன! இந்து என்பதே அடிப்படையில் பண்பற்ற வாழ்வின் குறியீடாகும்.

கல் + ஆச்சாரம் = கலாச்சாரம் என்பது  பண்பற்ற இந்து பழக்கவழக்கங்களைக் கற்றல் என்பதாகப் பொருள்படுவதால் இது அடிப்படையிலேயே பண்பாட்டிற்கு விரோதமான சொல்லாகும். பண்பாடு என்ற சொல்லிற்கு துளியளவும் பொருந்த முடியாத எதிர்நிலையைப் பெற்றிருப்பதாகும். ஆனால் பல முற்போக்கு அமைப்புகளே கலாச்சாரம் என்ற சொல்லை பண்பாட்டிற்கு இணை சொல்லாகக் கருதிக்கொண்டு பயன்படுத்துகின்றன என்பது வருத்தத்திற்கு உரிய நடைமுறையாகும்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலை இலக்கிய சமூகவிஞ்ஞான அரசியல் ஏடாக புதிய கலாச்சாரம் வெளிவருவதை தமிழ்நாடு நன்கு அறியும். மக்களின் கலை சார்ந்த வெளிப்பாடுகளின் புரட்சிகர செயல்பாட்டை பிரதிபலிக்கின்ற சொல்லாடலாகவே புதிய கலாச்சாரத்தை அர்த்தப்படுத்துகிறார்கள். சமூக மேன்மைக்கான புரட்சிகர இயக்க முயற்சி என்றளவில் ஏற்கத்தகுந்த விதிவிலக்காகக் கருதலாம்.

       கூகுல் வாத்தியாரிடம் விளக்கம் கேட்டால் பண்பாடு என்பதன் ஆங்கில மொழிபெயர்ப்பு Culture என்றாகிறது. Culture என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு கலாச்சாரம் என்றாகிறது. கலாச்சாரம் என்பதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் Culture என்றாகிறது.  என்ன வாத்தியாரே பிதற்றுகிறாய் என்றால் பதில் இல்லை.

       கலாச்சாரம் என்பது களையப்பட வேண்டிய களை

       பண்பாடு மட்டுமே வளர்க்கப்பட வேண்டிய பயிர்

       நாம் பாடுபட்டு உழைப்பதே நாட்டு மக்களை நல்வழிக்கு உயர்த்தவும், கண் முன் நிற்கும் உலகப் பேரழிவிலிருந்து உயிர்மண்டலத்தைக் காக்கவும். ஆம்! பண்பாடு என்பதே நாடறிந்து ஒழுகுதலாகும். ஒரே நாடு ஒரே போடு என்ற புண்படுத்தும் பாசிசத்திற்கு எதிராக பன்முகத்தின் ஒற்றுமையே நம் பண்பாடென்று நாடெங்கும் பாட்டிசைப்போம்.

 

துணை செய்தவை

 

1.தமிழில் இலக்கியவரலாறு – கார்த்திகேசு சிவத்தம்பி. NCBH

2.இலக்கியஅறிவியல்.புதியவன்.https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5444:2019-10-24-12-39-00&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82

3.மார்க்சியமும்மொழியியலும். 

வி.ஐ.லெனின், ஜோ.ஸ்டாலின்.2017.புதுமை பதிப்பகம்.

4.மனித சாரம் – ஜார்ஜ் தாம்சன். நியூ செஞ்சூரி புக் ஹவுஸ்

5.தமிழுக்குப் பேர் அழகா?அறிவா? - https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47311-2024-10-17-06-41-56

6.கற்றல் கற்பித்தல் நடைமுறையில் காலத்தின் திசைவழி எது? https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47418-2024-11-10-15-10-19

7.பின் நவீனத்துவம் ஓர் அறிவியல் தத்துவமா?

https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47574-2024-12-11-04-02-33

8.LIFCO தமிழ் அகராதி

 

 

 

புதுப்பித்தலுக்கு முன்பு வெளிவந்த விவரம்

11 ஜனவரி 2025

உங்கள் நூலக இணையப் பக்கம் கீற்று

https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47698-2025-01-11-06-58-28

 


Thursday, January 2, 2025

நாட்டார் வழக்காற்றியல் எனும் சால்பு

 

நாட்டார் வழக்காற்றியல் எனும் சால்பு

புதியவன் முனைவர் கே.சிவக்குமார்

SSM கலை மற்றும் அறிவியல்கல்லூரி, திண்டுக்கல்.

 

சமூக இயங்கியலின் முழுதளாவியப் பிரதிபலிப்புகளைக் கொண்டுள்ள கலை மற்றும் அறிவியல் உள்ளடங்கிய மீப்பெருந்துறையாக தமிழ் இலக்கியப்புலம் தகவமைந்திருக்கிறது. தமிழ் இலக்கியப்புலம் குறித்து மாணவர்களுக்கான கல்வி புலம் இத்தகைய விரிந்த மதி நுட்பத்துடன் இயங்குகிறதா என்பது சந்தேகமே.

தமிழைத் தாய் மொழியாக கொண்ட குழந்தைகளுக்கு தாய்மொழி வழி கல்வியை மறுத்து அறிவு வன்முறையில் ஈடுபடுகின்ற அறிவு நாகரீகமற்ற தமிழ் சமூகத்தின் அதிகார மையமாக செயல்பட முயல்கின்ற ஒரே நாடு ஒரே போடு என்ற வன்முறை இலக்கை கொண்டுள்ள மத்திய அரசின் சனாதனக் கொள்கைக்கும் அறிவியல் கண்ணோட்டத்திற்கும் தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை. 

பகுத்தறிவைத் தலைமையாகக் கொண்டுள்ள அரசு மக்களுக்குத் தலைமை ஏற்றிருந்தாலும் அறிவியல்பூர்வ அணுகுமுறையற்ற தாய்மொழி வழியற்ற கல்விமுறையின் அதிகாரத்தை துடைத்தொழிக்க முடியவில்லை. உலகெங்கும் கல்வியின் நடைமுறையாகவுள்ள தாய்மொழி வழியில் மட்டுமே கல்விமுறை என்ற அறிவியல்பூர்வமான நடைறையை உறுதிசெய்வதும் சாத்தியப்படவில்லை.

       அறிவியல் கண்ணோட்டம் மற்றும் அறிவியல் பூர்வமான அணுகுமுறையில் கல்வி முறையை சாத்தியப்படுத்தும் அரசியல் மாற்றங்கள் உருவாகும் போது தமிழ் இலக்கியப் புலத்தின் பிரமாண்டமானது எளிய உழைக்கும் மக்களுக்கும் தெரியவரும் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய பலவீனமான தமிழ் இலக்கியப் புலத்தில் புதிய தலைமுறைகளான மாணவர்களுக்குத் தமிழ் மொழியை எழுதவும் படிக்கவும் தெரியவில்லை. பெரும்பகுதி மாணவர்களுக்கு இது எதார்த்தமாக உள்ளது. இவர்களில் பெரும்பகுதி மாணவர்கள் நாட்டுப்புற சூழலில் இருந்து படிக்க வருகிறார்கள். இத்தகைய தமிழ் மாணவர்களுக்கு தம் வரலாற்றை பிரதிபலிக்கின்ற நாட்டுப்புறவியல் துறை சார்ந்த சமூக அறிவும் மிகக் குறைவு. நாட்டுப்புறவியலை தமிழ் இலக்கியப் புலத்தில் ஒரு பாடமாகவும் படிக்கிறார்கள்.

தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டங்களில் நாட்டுப்புறவியல் என்றொரு பாடம் இருக்கிறது. நாட்டுப்புறவியல் என்பது கிராமப்புற மக்களின்சமூகப்பொருளுற்பத்தி சார்ந்த வாழ்வியல், உள்ளத்தியல், கருத்தியல் மற்றும் பண்பாட்டு வெளிப்பாடுகள் குறித்த சமூகவியல் துறையாகும். 

நாட்டுப்புற மக்களின் சமூகப் பொருளுற்பத்திக்கான தொழில்நுட்பங்கள், நடனம், இசை, ஓவியம், சிற்பம் மற்றும் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டியலை முழுதளாவிய நிலையில் பிரதிபலிக்கின்ற மொழியாடல்கள் குறிப்பாக வாய்மொழி இலக்கியப் பாடல்கள், கதைப்பாடல்கள், கதையாடல்கள், பழமொழி, விடுகதை, கூத்து, நாடகம் ஆகிய அனைத்தும் நாட்டுப்புறவியலாக அறியப்படுகின்றன.

நா.வானமாமலை, தே.லூர்து போன்ற அறிஞர்கள் நாட்டுப்புறவியல் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தியலுடன் செயல்பட்டுள்ளார்கள்.

தங்களை நாகரிகமடைந்தவர்களாக கருதிக்கொண்ட மேனாட்டு அறிஞர்கள் பிற மக்களை நாட்டுப்புறம் என்பதற்கு இணையாக 'Folk lore' என்று வழங்கினார்கள்.

'Folk' எனப்படுவது மேனாட்டார் விளக்கப்படி, கல்வியறிவற்றவர், கிராமத்தில் வாழ்பவர், தாழ்ந்த சமூக நிலையில் உள்ளவர் என்பதாக விளக்கம் பெறுகின்றது.அடுத்து 'lore' என்ற சொல்லை, 'படைப்பு' எனக் கொள்ளலாம்.அது வழங்கப்படும் சூழல், பாடம் (Text), அமைப்பு இவற்றைக் கொண்டு முடிவு செய்யப்படலாம் என்பதாக விளக்கம் பெறுகின்றது.

ஆலன் டண்டி என்பார் 'Folk' என்னும் மக்கள்; காட்டுமிராண்டி நிலையிலுள்ள அல்லது நாகரிக முதிர்ச்சியற்ற மக்களுக்கும், நாகரிகமடைந்துள்ள அல்லது கல்வியறிவு பெற்ற மக்களுக்கும் இடைப்பட்டவர்கள் என்று கூறுகின்றார்.

மேனாட்டறிஞர்களின் இக்கருத்தாடல் எளிமையான உழைக்கும் மக்களின் படிமலர்ச்சி பெற்ற பண்பாட்டு மரியாதையை அவமதிப்பதாக அமைந்துள்ளது. இத்தகைய சமூக அவமரியாதையை துறைசார்ந்த பெயராக ஏற்றுக்கொள்ள முடியாது என்ற சமூக மரியாதைக்கான பொறுப்பின் அடிப்படையில்தான் நா.வானமாமலை, தே.லூர்து போன்ற அறிஞர்கள் நாட்டுப்புறவியல் என்ற சொல்லிற்கு மாறாக நாட்டார் வழக்காறு என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்று வழியுறுத்தும்படி தொடர்ந்து செயல்பட்டுள்ளார்கள்.

இத்தகைய மதிப்பார்ந்த செயல்பாட்டின் அடையாளமாக பாளையங்கோட்டையிலுள்ள தூய சவேரியர் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் 1987ல் நிறுவப்பட்டு இயங்கிவருகிறது. ஆனால், பொதுப்பார்வையில் எளிய உழைக்கும் மக்களின் சமூக மரியாதையை அலட்சியப்படுத்தும் விதமாக நாட்டுப்புறவியல் என்ற சொல்லாடல் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதை கல்விப்புலங்களின் பாடத்திட்டத்திலேயே காண முடிகின்றது. இன்னும் பல பல்கலைக்கழகங்களிலும் நாட்டுப்புறவியல் என்பது துறையின் பெயராகவே வழங்கப்பட்டும் வருவதையும் அறிய முடிகின்றது.

இச்சூழலில் இலக்கிய அறிவியலின் சமூக விஞ்ஞான அணுகு முறையின் அடிப்படையில் நாட்டுப்புறவியல், நாட்டார் வழக்காற்றியல் என்ற இரண்டு சொல்லாடல்களில் எத்தகைய பெயரை நிலைப்படுத்துவது சாலச்சிறந்ததாகும் என்பதை மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகின்றது. நாட்டுப்புறவியல், நாட்டார் வழக்காற்றியல் என்ற இரண்டு சொல்லாடல்களும் அறிவியல் தத்துவ நிலைப்பாட்டில் எத்தகைய கருத்தாடல்களுக்கு ஆட்படுகின்றன என்பதை மதிப்பிடுவது அவசியமாகின்றது.

நாடு + புறம் + இயல் = நாட்டுப்புறவியல்

நாட்டுப்புறவியல் என்பதன் கருத்தாடலை காடு x நாடு என்ற முரண்பாட்டை விளக்கப்படுத்துவதிலிருந்து தொடங்கலாம்.நாடு என்பது காட்டிற்கு முரணாகும்.காடு என்பது மனித திட்டமிடலுக்கு உட்படாத தான்தோன்றித்தனமான இயற்கையின் பரிபூரண வெளிப்பாடாகும்.நாடு என்பது மனிதர்களால் திட்டமிட்டு பண்படுத்தப்பட்ட இயற்கை மீதான உணர்வுப்பூர்வமான செயல்பாட்டு வெளியாகும்.காடு என்பது மனித செயல்களால் பண்படுத்தப்படாத இயற்கை வெளி எனில் நாடு என்பது மனித செயல்களால் பண்படுத்தப்பட்ட செயற்கை வெளியாகும். 

புறம் என்பது வெளியே எனப் பொருள்படுவதால் நாட்டுப்புறம் என்பது நாட்டிற்கு வெளியே என்பதாக விளக்கம் பெறுகின்றது.காடு என்ற பரிபூரண இயற்கையின் மீது இயற்கையின் அங்கமாகிய மனிதர்களால் திட்டமிட்ட உழைப்புச் செயல்பாடுகள் நிகழ்த்தப்பட்டு நாடு உருவம் பெற்றுள்ளது.காட்டிலிருந்து படிப்படியாக வரலாற்று நிலையில் பண்படுத்தப்பட்டு உருப்பெற்றுள்ள நாட்டிற்கு புறம் என்பது பண்படுத்தலுக்கு உட்படாத இயற்கையாகிய காடாக விளக்கம் பெறுகின்றது.நாடு தன்னிலிருந்து காடு நோக்கிய கண்ணோட்டத்தை விளக்கப்படுத்துவதாக நாட்டுப்புறம் விளக்கம் பெறுகின்றது.

இயல் என்பது இயங்குல் எனப் பொருள்படுவதால் காடு நோக்கிய பண்பாட்டு வெளியில் வாழும் மக்களின் இயல்புகள் குறித்த அறிவியலாகும். நாடு என்ற பண்படுத்தப்பட்ட உயர்ந்த மட்டத்திலிருந்து காட்டிலிருந்து படிப்படியாக நாடு நோக்கிய வளர்ச்சிக்குப் பாதையாக அமைந்த பண்பாட்டு நிலைகளையும் அவற்றின் அசைவியக்கங்களையும் ஓர் அறிவு சார்ந்த துறையாக விளக்கப்படுத்துகின்றது.அதாவது, நேற்றைய நாடு இன்றைய நாட்டுப்புறமாகிறது. இன்றைய நாடு நாளைய நாட்டுப்புறமாகின்றது.

மேனாட்டார் விளக்கத்தின்படி, கல்வியறிவற்றவர், கிராமத்தில் வாழ்பவர், தாழ்ந்த சமூக நிலையில் உள்ளவர், காட்டுமிராண்டி நிலையிலுள்ளவர், நாகரிக முதிர்ச்சியற்றவர் ஆகியோரை நாட்டுப்புறம் என்றால் என்ன பொருள்?

நாகரிகமடைந்துள்ள அல்லது கல்வியறிவு பெற்ற மக்களை நாட்டின் அடையாளமாக அளவிட்டுக்கொண்டு அவ்வளவீட்டை எட்டாமல் பின்தங்கிய பண்பாட்டில் தகவமைந்துள்ள மக்களை நவீன நாகரிகத்திற்கு வெளியே இருப்பவர்களாக விளக்கப்படுத்தும்படி நாட்டுப்புறம் என்ற சொல்லாடலை பயன்படுத்தியுள்ளார்கள் என்பது பொருள்.

LIFCO தமிழ் அகராதியில் நாட்டுப்புறம் என்ற சொல்லிற்கு பட்டிக்காடு என்பதாக விளக்கம் இருக்கின்றது.அகராதியை அச்சிடுகின்ற நவீன அச்சு எந்திரத்தின் நடைமுறையானது உற்பத்தி மீதான வணிக நாகரிக வரலாற்றுக் கட்டத்தின் வெளிப்பாடாகும்.ஆலன் டண்டி போன்ற மேனாட்டறிஞர்களும் இத்தகைய வரலாற்று காலத்தின் பிரதிநிதிகளே ஆவர். ஆனால், பட்டிக்காடு என்ற சொல்லானது கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் என்ற வரலாற்றுக் கட்டத்தின் மதிப்புமிக்க சொல்லாடலாகும்.

பட்டிக்காடு என்ற சொல்லாடல் காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்திலிருந்தும் வேட்டை நாகரிகத்திலிருந்தும் முன்னேறி கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகமாக நிலைபெற்ற வரலாற்று கட்டத்தின் பண்பாட்டுச் சொல்லாடலாக விளக்கம் பெறும். ஆடு மாடு போன்ற கால்நடைகளைச் சொத்தாகப் பராமரித்து பட்டியில் அடைத்துப் பாதுகாக்கின்ற சமூக நடைமுறையை வெளிப்படுத்துகின்ற கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தின் மதிப்புமிக்க அடையாளமாகும். காட்டின் இயற்கையிலிருந்து அறுபடாமலும் பட்டி என்ற நவீன சொத்தாதிக்கப் புதுமையைக் கொண்டாடுவதாகவும் பட்டிக்காடு என்ற சொல் விளக்கம் பெற்றுள்ளது.

கல்வராயன் மலையாளிகளின் பட்டித்திருவிழாவில் பட்டி என்ற சொல்லின் பண்பாட்டு மதிப்பை கண்டுணர முடியும். மாடுகளைப் பட்டியில் அடைத்து பொங்கலிட்டு சடங்குகளை மேற்கொள்வார்கள். அச்சடங்கில் “மாடாயிரம் கண்டாயிரம் புலியோ புலி… மாடாயிரம் கண்டாயிரம் புலியோ புலி…”  என்று முழங்குவதாக அச்சடங்கு நடைபெறுகிறது.

அப்பழங்குடிகள் கால்நடைகளைச் சொத்தாக பராமரித்த காலத்தில் புலி போன்ற வேட்டை மிருகங்களிடமிருந்து கால்நடைகளைப் பாதுகாக்கும் எச்சரிக்கை உணர்வுடன் பட்டியிலடைத்து பராமரித்த வரலாறை இச்சடங்கு நினைவில் ஆழ்த்தியிருக்கிறது. பட்டிக்காடு என்பது அன்றைய கால்நடை மந்தை வளர்ப்பு வரலாற்றின் நவீன நாகரிகமாகும். ஆனால், இன்று பட்டிக்காடு என்பது நாகரீகமற்றதன் அடையாளமாக மாறியிருக்கின்றது.

கால்நடை மந்தை வளர்ப்பின் நாகரீகப் புதுமையாக விளங்கிய பட்டிக்காடு விவசாய நாகரிகத்தை எட்டியபோது நாகரிகப் பழமையாகவும் நவீன விவசாய நாகரிகத்திற்கு புறமானதாகவும் விளக்கம் பெறுகின்றது. விவசாய நாகரிகம் கடந்து உற்பத்தி மீதான வணிகம் மற்றும் வணிக இலாபத்திற்காகவே உற்பத்தி என்ற வரலாற்றுக் கட்டங்களிலும் நிதிமூலதன இலாபவெறிக் கட்டமாகிய சமகாலத்திலும் பட்டிக்காடு என்பது நவீன நாகரிகத்திலிருந்து நெடுந்தொலைவிற்கு வெளியில் விலகியுள்ள பழமையின்  குறியீடாக மாறியிருக்கின்றது.

 

நாடு + புறம் + இயல் = நாட்டுப்புறவியல் என்பது ‘நவீன நாகரீகத்திற்கு வெளியே’ என்பதாக விளக்கம் பெறுகின்றது. 

 

மனித செயல்களால் பண்பாடு தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதால் நாடு என்பதே நவீன நாகரீகத்தின் சின்னமாக தொடர்ந்து பொருள்படுகின்றது. நாட்டுப்புறம் என்பது நவீன நாகரீகத்தால் புதுப்பிக்கப்படாமல் காடு நோக்கிய பழைமையாக விரவிக்கிடக்கின்ற பண்பாடாக அறியப்படுகின்றது.

1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)

2.வேட்டை நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)

3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)

4.விவசாய நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)

5.உற்பத்தியின் மீதான வணிக நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)

6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் (தந்தை அதிகார சமூகம்)

7.நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம்  செய்தல் (தந்தை அதிகார சமூகம்)

 8.மக்கள் தலைமையின் கீழ் சமூகஉற்பத்தியைக் கட்டமைத்தல் (ஏற்றத்தாழ்வு மதிப்பிழந்த சமூகம்)

மேற்கண்ட மனித வரலாற்று படிநிலையில் விளக்குவதென்றால் வணிக இலாபத்திற்காகவே உற்பத்தி செய்தல் என்ற ஆறாம் கட்ட நாகரித்திலிருந்துகொண்டு வணிக இலாபத்தின் பிரதிநிதிகளாகிய கல்வியாளர்கள் 5, 4, 3, 2, 1ம் கட்டங்களை நாகரிகத்திற்கு வெளியே இருப்பவை என்று பொருள்படும்படியாக நாட்டுப்புறம் என்றச் சொல்லாடலைப் பயன்படுத்துகிறார்கள். அதாவது உற்பத்தி மீதான வணிகம், விவசாயம், கால்நடை மந்தை வளர்ப்பு, வேட்டை மற்றும் காடுசார்ந்த பொருள் சேகரிப்பு ஆகியவற்றின் பண்பாடுகளில் வாழும் மக்களை நாட்டுப்புறத்தார் என்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.

நாட்டுப்புறவியல் என்பது நவீன நாகரிக பண்பாட்டாளர்களால் நவீன நாகரீகத்திற்கு வழிமுறையாக அமைந்த பழமையின் பண்பாட்டாளர்களை அறிவதற்கான நடைமுறை அறிவியலாக கட்டமைந்திருக்கின்றது. இவ்வறிவியலைப் பொருளாகப் பிரதிபலிக்கின்ற நாட்டுப்புறவியல் என்ற சொல்லாடல் நாகரிகத்தின் வழிமுறையாக திகழ்ந்த மக்களை நாகரிகத்திற்கு வெளியே என்று அந்நியப்படுத்தி அவமரியாதை செய்யும் பண்பற்ற சொல்லாடலாகவே விளக்கம் பெறுகின்றது.

நா.வானமாமலை, தே.லூர்து போன்ற அறிஞர்கள் அறிவுறுத்துகின்ற நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல்லாடலின் கருத்துநிலைப்பாடானது நாட்டுப்புறவியலுக்கு முற்றிலும் முரணாக விளக்கம் பெறுகின்றது. 

நாட்டார் + வழக்கு + ஆ(ற்)று + இயல் = நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல்லாடல் பழைய பண்பாட்டிற்கு உரிய மக்களை நாகரீகத்திற்கு வெளியில் இருப்பவர்கள் என்பதாக அவமானப்படுத்தாமல் நாகரீகத்தின் முன்னோடிகள் அல்லது நாகரீகத்திற்கு உரியவர்கள் என்பதாக பொருள்படுத்துகின்றது. 

நாட்டார் என்பது காடு என்ற பரிபூரண இயற்கையின் மீது திட்டமிட்ட பண்படுத்தல்களில்  ஈடுபட்டு நாட்டை உருவாக்கியவர்கள், நாட்டிற்கு உரியவர்கள், நாகரிகத்திற்கு உரியவர்கள், நவீன நாகரீகத்திற்கு வழியமைத்தவர்கள் இவ்வாறாக நவீன நாகரிகத்தை எட்டாமல் நேற்றையப் பழைய நாகரிகங்களில் நிலைபெற்ற மக்களின் வாழ்வியல் மீதான சமூக மரியாதையை நிலைநாட்டுகின்ற கருத்துநிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றது. 

வழக்கு என்பது வழக்கம் எனப் பொருள்படுவதால் மக்கள் எத்தகைய பண்பாட்டைத் தொன்றுதொட்டுப் பழகி வழக்கமாக்கிக் கொண்டார்கள் என்பதை சமூகளாவிய நிலையில் விளக்கப்படுத்துவதாக அமைகின்றது. 

ஆறு என்பது பாதை அல்லது வழி என பொருள்படுவதால் மக்களின் பண்பாட்டு வழக்கங்கள் எத்தகைய வரலாற்று பாதையில் தகவமைந்துள்ளன என்பதை ஆராய்ந்து விளக்குகின்ற துறையாக விளக்கம் பெறுகின்றது. 

ஆற்று என்பது ஆற்றுதல் அல்லது செயலாற்றுதல் அல்லது செயலைச் செய்தல் என்பதாகப் பொருள்படுவதால் எத்தகைய செயல்பாடுகளால் மக்களின் பண்பாட்டு வழக்காறுகள் தகவமைந்தன என்பதை ஆராய்ந்து விளக்குகின்ற துறையாக விளக்கம் பெறுகின்றது. 

இயல் என்பது இயங்குல் எனப் பொருள்படுவதால் நாட்டார் மக்களின் சமூகப் பொருளாதார பண்பாட்டு அசைவியக்கங்களைப் பற்றிய அறிவியலாக விளக்கம் பெறுகின்றது.

       நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல்லாடலை முழுதளாவிய நிலையில் நோக்கினால் நாட்டுப்புறவியல் என்ற சொல்லாடலுக்கு முற்றிலும் முரண்பாடாக வினையாற்றுகிறது.

மக்களின் பழைய பண்பாட்டை நவீன நாகரிகத்தின் அறிவியல் கலை இலக்கிய உச்சத்திலிருந்து அணுகும்போது நவீன நாகரிகத்திற்கு வெளியே உள்ள மக்களின் பண்பாட்டை அணுகுதல் என்பதாக கருதுவது தவறாகும். மாறாக, நவீன நாகரிகம் உருப்பெருவதற்கு வழியாக அமைந்தவர்களின் அல்லது நவீன நாகரீகத்திற்கு உரிமையுடையவர்களின் அல்லது நவீன நாகரீகத்தின் முன்னோடிகளின் சமூகப் பொருளாதார பண்பாட்டு அசைவியக்கங்களை அணுகுதல் என்பதாகக் கருதுவதே சாலச்சிறந்ததாகும்.

      நிறைவாக, மக்களின் பழைய பண்பாடு குறித்த அறிவுத்துறையை நாட்டுப்புறவியல் என்று வழங்குவதைத் தவிர்த்து நாட்டார் வழக்காற்றியல் என்று வழங்குவதே அறிவுத்துறைகளின் மாண்பிற்கு பொருத்தமுடையதாகும்.

       நாட்டார் என்பது தனித்த சாதியை அல்லது இனக்குழுவை குறிப்பதல்லவா என்ற குழப்பம் தேவையில்லை. ஏனெனில் புரிதலுக்கான சமூகத் தேவையிலிருந்தே சொற்பொருளுக்கான கருத்துநிலைப்பாடு கட்டமைகின்றது.

தமிழ் என்ற ஒரு பெயர் ஒரு மொழியைக் குறிப்பதாகவும் ஒரு குழந்தையைக் குறிப்பதாகவும் நடைமுறையில் வழங்கப்படலாம். நடைமுறையில் அச்சொல்லாடல் மீதான புரிதலுக்கான சமூகத் தேவையிலிருந்து மொழியப்படுகின்ற தமிழ் என்ற சொல் குழந்தையின் பெயரா? அல்லது மொழியின் பெயரா? என்ற கருத்து நிலைப்படுகின்றது. இத்தகைய கருத்து நிலைப்பாடு நாட்டார் வழக்காற்றியலுக்கும் பொருந்தும்.

       நாட்டுப்புறவியல் என்பது சமூகத்தாழ்வு

       நாட்டார் வழக்காற்றியல் என்பதே சால்பு

 

துணை செய்தவை

 

1.நாட்டுப்புற இயல் ஆய்வு டாக்டர் சு.சக்திவேல். மணிவாசகர் பதிப்பகம்

2.தமிழ் நாட்டுப்புறவியல் டி.தருமராஜ். கிழக்கு பதிப்பகம்

3.பட்டித்திருவிழா சு.குமார்.புதுச்சேரிமொழியியல்பண்பாட்டுஆராய்ச்சிநிறுவனம்.புதுச்சேரி

4.இலக்கியஅறிவியல்.புதியவன்.https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5444:2019-10-24-12-39-00&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82

5.மார்க்சியமும்மொழியியலும். 

வி.ஐ.லெனின், ஜோ.ஸ்டாலின்.2017.புதுமை பதிப்பகம்.

6.மனித சாரம் – ஜார்ஜ் தாம்சன். நியூ செஞ்சூரி புக் ஹவுஸ்

7.தமிழுக்குப் பேர் அழகா?அறிவா? - https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47311-2024-10-17-06-41-56

8.கற்றல் கற்பித்தல் நடைமுறையில் காலத்தின் திசைவழி எது? https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47418-2024-11-10-15-10-19

 

  

வெளிவந்த விவரம்

02 ஜனவரி 2025

உங்கள் நூலக இணையப் பக்கம் கீற்று

https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47671-2025-01-02-04-33-06



நால்வர் ஓடும் உலகம்

  நால்வர் ஓடும் உலகம் புதியவன் ஒரு குழுவில் நான்கு ஓட்டக்காரர்கள் சமூக மேன்மைக்காக ஒடுகிறார்கள். வாழ்வா சாவா போராட்டத்தில் மனித குலத்தை வீ...

அதிகம் பார்க்கப்பட்டவை